தேசாந்திரி பதிப்பகம் சார்பில் மூன்று மெய்யியல் நாவல்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
••
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான தாமஸ் மன் எழுதிய தி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ் நாவலின் மொழியாக்கமே மாறிய தலைகள்.
இந்திய புராணத்திலுள்ள கதையைத் தனது புனைவின் வழியே உருமாற்றம் செய்திருக்கிறார் தாமஸ் மன்.

காளி கோவிலில் துண்டிக்கபட்ட தலை மறுஉயிர்ப்பு பெறும் போது உடல் மாறிவிடுகிறது. இதனால் ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒரு ஆணின் உடலையும் மற்றொரு ஆணின் தலையையும் நேசிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவர் ரா.ஸ்ரீ.தேசிகன்.

••
அமெரிக்க எழுத்தாளர் வில்லா கேதர் எழுதிய டெத் கம்ஸ் ஃபார் தி ஆர்ச்பிஷப் நாவலின் தமிழாக்கமே அன்புப்பிடியில் இருவர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கதை நடக்கிறது . நியூ மெக்சிகோவில் ரோமன் கத்தோலிக்க மதகுருக்களாகப் பணியாற்றும் இருவரின் வாழ்க்கையை நாவல் மிகவும் நுண்மையாகச் சித்தரிக்கிறது.
உலகின் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதனை லைஃப் இதழ் தேர்வு செய்துள்ளது. இந்த நாவலை சி. ஸ்ரீநிவாசன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

••

புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் வில்லியம் சோமர்செட் மாம் எழுதிய தி ரேசர்ஸ் எட்ஜ் நாவல் 1944 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நாவலில் ஓரு அமெரிக்கப் போர் விமானி வாழ்க்கையின் மெய்ப்பொருளை அறிவதற்கான ஆன்மீகத் தேடலில் இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். இதில் சோமர்செட் மாம் ரமண மகரிஷியை ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்துள்ளார்.
1938 ஜனவரியில், சோமர்செட் மாம் திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஷ்ரமத்திற்கு வருகை தந்து பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்திருக்கிறார். அந்த அனுபவத்தின் வெளிப்பாடாகவே இந்த நாவலை எழுதியிருக்கிறார். இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக வெளிவந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த நாவலை டாக்டர் சந்திரமௌலி மொழியாக்கம் செய்திருக்கிறார்.

••
மாறிய தலைகள் நாவலை 1964ம் ஆண்டு தென்மொழிகள் புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. அன்புப்பிடியில் இருவர் நாவலும் ஜோதி நிலையம் சார்பில் 1961 ஆண்டு வெளியாகியுள்ளது. சோமர்செட் மாம் நாவலை அமெரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள டாக்டர் சந்திரமௌலி புதிதாக மொழியாக்கம் செய்துள்ளார்.
உலகப்புகழ்பெற்ற மூன்று மெய்யியல் நாவல்களையும் இன்றைய வாசகர்கள் ஒரு சேர வாசிப்பதற்காகத் தேசாந்திரி பதிப்பகம் அழகிய பதிப்பாக வெளியிடுகிறது
••
சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி அரங்கில் இந்த மூன்று மெய்யியல் நாவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
••
