தி ஸ்கார்லெட் அண்ட் தி பிளாக் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.
இதை இயக்கியவர் ஜெர்ரி லண்டன்.

1943 இல், ரோம் நகரை நாஜி படைகள் ஆக்கிரமித்துக் கொண்ட போது ராணுவம். வாடிகன் நகரையும் போப்பின் அதிகாரத்தையும் தனது கட்டுக்குள் வைக்க முயன்றது
படத்தின் துவக்கக் காட்சியிலே இரண்டு ராணுவ உயரதிகாரிகள் போப்பினை சந்தித்து வாடிகன் தங்கள் அதிகாரத்தில் தலையிடக் கூடாது. யாருக்கும் அடைக்கலம் கொடுப்பதோ, உதவி செய்வதோ கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அத்துடன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒரு வெள்ளைக்கோடு வரைகிறார்கள்.
அந்த எல்லையோடு வாடிகனின் அதிகாரம் முடிந்துவிடுகிறது, தாங்களும் அதைத் தாண்டி வரமாட்டோம் என்று ஆணையிடுகிறார்கள்.

ரோம் நகரம் கர்னல் ஹெர்பர்ட் கெப்ளரின் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது. அவர் யூதர்களை வேட்டையாடுகிறார். குடியிருப்புகளைச் சூறையாடுகிறார், அவர்களிடமிருந்து பெரும் தொகை மற்றும் தங்கத்தைப் பறித்துக் கொள்கிறார். உயிருக்குப் பயந்த யூதர்கள் திருச்சபையிடம் தஞ்சமடைகிறார்கள்.
தங்களிடம் தஞ்சமடைந்த யூதர்களையும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் போர்வீரர்களையும் காப்பாற்றித் தப்ப வைக்க முயலுகிறார் ஐரிஷ் கத்தோலிக்கப் பாதிரியாரான மான்சிக்னர் ஓ’ ஃப்ளாஹெர்டி
ஃப்ளாஹெர்டிக்கு உள்ளூர் வாசிகள், மதகுருமார்கள் மற்றும் தூதரக உறுப்பினர்கள் பல்வேறு வழிகளில் உதவுகிறார்கள்.
கர்னல் கெப்ளருக்கும் பாதிரி ஃப்ளாஹெர்டிக்கும் நடக்கும் மோதலே படத்தின் மையக்கதை

கிரிகோரி பெக் ஃப்ளாஹெர்டியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கெப்ளராக நடித்துள்ளவர் கிறிஸ்டோபர் பிளம்மர்
கெப்ளரின் மனைவி குடும்பம் மற்றும் அவரது நாஜி விசுவாசத்தை ஒரு புறம் சித்தரிக்கிறார்கள். மறுபுறம் தஞ்சமடைந்தவர்களைக் காப்பாற்றப் பாதிரியார் எப்படி நிதி திரட்டுகிறார். அவர்களை ஒளித்து வைக்க இடம் தேடுகிறார். அவரை எவ்வாறு எஸ்எஸ் அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்
எந்த நேரமும் தான் கைது செய்யப்படுவோம் என்ற சூழ்நிலை இருந்தபோதும் தைரியத்துடன் நடந்து கொள்கிறார் ஃப்ளாஹெர்டி.
உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்ட படமிது.
நகரசோதனையின் போது துப்பாக்கி வைத்திருந்ததாகக் கைது செய்யப்படும் பாதிரியை கர்னல் கெப்ளர் அடித்து உதைத்து சித்ரவதை செய்கிறார். ஆனால் அவர் உண்மையைச் சொல்வதில்லை. முடிவில் அவரைச் சுட்டுக்கொல்வதற்காக அழைத்துச் செல்கிறார்கள். துப்பாக்கி வீரர்களின் முன்னால் அவர் மனம் திறந்து பேசுகிறார். அவரைக் கொல்ல ஒரு வீரனும் முன்வரவில்லை. ஆத்திரமான கெப்ளர் தானே சுட்டுக் கொல்கிறார்.

வெள்ளைக்கோட்டினைத் தாண்டி ஃப்ளாஹெர்டி வெளியே செல்லக்கூடாது என்பதற்காகக் கண்காணிப்பினை வலுப்படுத்துகிறார்கள். ஆனால் அவர் மாறுவேடத்தில் தப்பிச் செல்கிறார். தேவையான உதவிகளைச் செய்கிறார்
இசைநிகழ்ச்சியில் அவர் கெப்ளரை சந்தித்து உரையாடும் காட்சி முக்கியமானது. கெப்ளரின் கையெழுத்தை அவர் தந்திரமாகப் பயன்படுத்தும் விதம் சிறப்பு
எப்படியாவது ஃப்ளாஹெர்டியை கைது செய்துவிட வேண்டும் என்று கெப்ளர் துடிக்கிறார். ஆனால் திருச்சபைக்குள் சென்று அவரைக் கைது செய்ய முடியாது என்பதால் காத்திருக்கிறார். ரகசியமாக ஆட்களை அனுப்பிக் கொலை செய்யவும் முயல்கிறார்
பாதிரியாக இருந்த போதும் குத்துச்சண்டை வீரர் என்பதால் ஃப்ளாஹெர்டி எதிரிகளுடன் சண்டையிட்டு வீழ்த்துகிறார்
நெருக்கடியான சூழ்நிலையில் நாஜி ராணுவத்தின் செயல்பாடுகளை நேரடியாக எதிர்ப்பதா அல்லது ஒதுங்கிச் செல்லும் போக்கினை கடைப்பிடிக்க வேண்டுமா என்றே கேள்வி திருச்சபையின் முன் எழுகிறது. போப் தேவையற்ற மோதலை தவிர்க்கலாம் என்றே நினைக்கிறார். ஆனால் தீமையை எதிர்ப்பது முக்கியம் என்கிறார் பாதிரி.
ஒருவேளை நாஜி ராணுவம் வாடிகனை கைப்பற்றி அங்குள்ள கலைப்பொருட்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளை அடித்துப் போய்விடுமோ என்று பயப்படுகிறார் போப்.

ஒரு காட்சியில் ஃப்ளாஹெர்டியை கலைப்பொருட்கள் உள்ள அறைக்கு அழைத்துப்போய்க் காட்டுகிறார். தனது அச்சத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் ஃப்ளாஹெர்டி தீவினையை எதிர்ப்பதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. வருவது வரட்டும் என்று உறுதியான குரலில் பதில் தருகிறார்
ரோம் நகரம் எப்படி நாஜி ராணுவத்திடமிருந்து மீட்கப்பட்டது. கெப்ளர் என்னவானார் என்பதைப் படத்தின் கடைசிப்பகுதி பேசுகிறது
ஃப்ளாஹெர்டியின் உறுதியான நிலைப்பாடும் சாகசச்செயல்களும் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், தேவாலயங்கள் மற்றும் மடாலயங்களைப் பயன்படுத்தி அவர் 6,500 பேரைக் காப்பாற்றியுள்ளார்.
வெள்ளைக்கோடு என்பது தங்கள் காலில் மாட்டப்பட்ட சுருக்குக் கயிறு என்பதை போப் உணர்ந்திருக்கிறார். ஆனால் ஃப்ளாஹெர்டி வெள்ளைக்கோடினை கண்டுகொள்வதில்லை. உதவி செய்வதற்கு எந்த கோட்டினையும் கடந்து செல்லலாம் என்றே நினைக்கிறார்.

ஒரு காட்சியில் அவர் வெள்ளைக்கோட்டின் ஒரமாக நடந்து செல்லும் போது தூரத்திலிருந்து துப்பாக்கி முனையில் கெப்ளர். அவரை கண்காணிக்கிறார் சுட்டுவிடக்கூடுமோ என்ற நிலை உருவாகிறது. ஆனால் ஃப்ளாஹெர்டி சலனமேயில்லாமல் விலகிப் போகிறார்.
நாஜி ராணுவத்திடமிருந்து யூதர்களை காப்பாற்றிய மனிதர்களை முதன்மைப்படுத்தி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படம் திருச்சபை மற்றும் பாதிரி ஃப்ளாஹெர்டியின் தரப்பை பேசுகிறது. அதற்காகவே இன்றும் யூத திரைப்படவிழாக்களில் இப்படம் தவறாமல் திரையிடப்படுகிறது
••