இந்திய இலக்கியத்தின் முகம்

கலை கார்ல்மார்க்ஸ்

திருவாரூர்

•••

நிலவழி குறித்த வாசிப்பனுபவம்

இந்நூலில் பத்துக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் சமகால இந்திய இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமைகளையும் அவர்களது படைப்புகளின் முக்கியத்துவத்தையும் பற்றி எடுத்துக் கூறுகின்றது.

முதல் கட்டுரையில் ஞானபீட பரிசு பெற்ற அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி அவர்களின் ‘தென் காமரூபத்தின் கதை’ என்ற நாவல் பற்றி விளக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திரா கோஸ்வாமி பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளியிட்ட நாவல்கள் அதன் பொருட்டு அவருக்கு வந்த மிரட்டல்கள் பற்றிப் பேசுகின்றது. தென் காமரூபத்தின் கதை முழுவதும் புறக்கணிப்பின் வலி அழுத்தமாக முன் வைக்கப்பட்டுள்ளதாகவும், கம்யூனிசத்தின் வருகை, நிலப்போராட்டங்கள், காலனி ஆதிக்கத்தின் பாதிப்புகள் எனப் பரந்த தளத்தில் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளதாக இந்நாவலைப் பற்றி இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இரண்டாவது கட்டுரையான சொற்களால் நெய்யப்பட்ட மாயக் கம்பளத்தில், உருது சிறுகதை வரலாற்றில் ராஜேந்திர சிங்பேதி, கிருஷ்ண சந்தர், சாதத் ஹசன் மண்டோ, இஸ்மத் சுக்தாய் ஆகிய முன்னோடி படைப்பாளர்கள் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

‘மகாராணியின் பேனா’ என்ற கட்டுரையில் மணிப்பூர் மன்னர் வம்சத்தில் வந்த எழுத்தாளர் பிநோதினி பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.

‘காந்தியைப் பின்தொடர்பவர்கள்’ என்ற கட்டுரையில் ராஜாராவ் மற்றும் பபானி ஆகியோர் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் எழுத்துக்களின் வாயிலாகக் காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக அறியப்படுகின்றது. மேலும், இக்கட்டுரை பபானி எழுதிய சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ‘லடாக்கிலிருந்து கவிழும் நிழல்’ என்ற நூல் பற்றியும் அது காந்தியத்திற்கும் இயந்திரமயமாவதற்கும் இடையில் ஏற்படும் பிரச்சனையைக் குறித்து இக்கட்டுரையில் பேசப்பட்டுள்ளது.

‘பெயர்கள் கூடச் சொந்தமில்லை’ என்ற கட்டுரையில் தமிழ்நாடன் மொழிபெயர்ப்பான ‘ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும்’ என்ற ஓரிய நூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோபிநாத் மொகந்தி பற்றியும் அவர் பழங்குடி மக்களின் வாழ்க்கையை அதிகமாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது பற்றியும் இக்கட்டுரை பேசுகின்றது. இத்தோடு பிரதிபா ரே -ன் படைப்புகள் பற்றியும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

‘காட்டின் மீது பயமில்லை’ என்ற கட்டுரையில் தெலுங்கு இலக்கியங்கள் பற்றியும், ‘பாதி உடல் கொண்ட பெண்’ என்ற கட்டுரையில் மராத்திய இலக்கியங்கள் பற்றியும், ‘நவீன கன்னட கதைகளும் திவாகர் காட்டும் சென்னையும்’ என்ற கட்டுரையில் கன்னட இலக்கியங்கள் மற்றும் அவ்விலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், ‘கோல் கீப்பரின் எல்லை’ என்ற கட்டுரையில் மலையாள இலக்கியங்கள் மற்றும் அவ்விலக்கிய எழுத்தாளர்களைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பிற மாநிலங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறை, இயற்கை எழில், அரசியல், பண்பாடு, மண்வளம் போன்ற அனைத்துக் கூறுகளையும் எடுத்துக் கூறுவதோடு அங்குள்ள இலக்கிய வளமைகளைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வைக்கிறது. அந்த வகையில் நிலவழி இந்திய இலக்கியத்தின் முகமாக விளங்குகிறது

••

0Shares
0