இந்திய இலக்கியத்தின் முகம்

இந்திய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளை இரண்டு தொகுதிகளாகத் தொகுத்துள்ளார் கே.எம்.ஜார்ஜ். இதனைச் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.

முதல் தொகுதி கவிதைகளும் இலக்கிய வரலாறும் கொண்டது. இரண்டாவது தொகுதி புனைகதைகள். இரண்டும் சேர்ந்து 2400 பக்கங்கள். 1993ல் இந்தத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. அதன் மறுபதிப்பை 2013ல் வெளியிட்டிருக்கிறார்கள். இரண்டு தொகுதிகளும் சேர்ந்து ஆயிரம் ரூபாய் விலைக்கு இணையத்தில் வாங்கினேன்.

புனைகதைகள் தொகுப்பில் 22 மொழிகளிலிருந்து 178 எழுத்தாளர்களின் 115 சிறுகதைகள், 68 நாவல்களின் சிறிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. 1860 முதல் முதல் 1970 வரையிலான படைப்புகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இதிலுள்ள சிறுகதைகளை மட்டும் ஒருவர் படித்தால் போதும் இந்திய இலக்கியத்தின் பன்முகத்தன்மையை அறிந்து கொண்டுவிடலாம்.

மிகவும் முன்னோடியான தொகை நூலாக இதனைக் கருதுகிறேன். கதைகளைத் தேர்வு செய்துள்ள விதம், தேர்ந்த மொழியாக்கம், படைப்புகள் காலவரிசைப்படி இடம்பெறுதல், எழுத்தாளர் பற்றிய குறிப்பு என அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பத்தாண்டிலும் இலக்கியத்தின் போக்கு மாறியிருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக நவீன இலக்கியத்தின் வருகையும் அதன் வழியே கதை சொல்லும் முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாக அறியமுடிகிறது.

இந்தத் தொகுப்பின் தமிழ் புனைவுகள் பகுதியில் புதுமைப்பித்தன். குபரா, ரகுநாதன். கல்கி, க.நா.சு, கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்ரன் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. நீல பத்மநாபன். ஷண்முகசுந்தரம் நாவலின் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

இன்று இந்தச் சிறுகதைகளிலிருந்து வளர்ந்து புதிய மொழியும் புதிய கதைகூறும் முறைகளும் உருவாகியுள்ளன. குறிப்பாகத் தமிழ் சிறுகதையின் முகம் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது.

புதிய கருப்பொருட்கள். புதிய கூறல்முறைகள். பேசாப்பொருளைப் பேசுதல், புலம்பெயர்ந்த வாழ்க்கையை எழுதுதல். வடிவரீதியான பரிசோதனை முயற்சிகள், சர்வதேச அளவில் பல்வேறு வாழ்நிலங்களையும் அதன் மனிதர்களையும் எழுதுதல், எனத் தமிழ்ச் சிறுகதைகள் விரிந்த தளத்தில் இயங்குகின்றன.

கே.எம்.ஜார்ஜ் சென்னையில் வசித்தவர். மலையாளப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். கேரள சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்தத் தொகுப்பு அவரது சாதனைகளில் ஒன்றாகும்.

1980களிலிருந்து 2020 வரையான இந்தியப் புனைகதைகளில் சிறந்தவற்றை இது போன்ற தொகைநூலாக உருவாக்கினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

0Shares
0