காலனியக் குற்றங்கள்

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன்

கவிதை நிகழும் தருணங்களுக்கு அருகில் தன் கதைகளைப் படைப்பவர் எஸ். ராமகிருஷ்ணன். அந்த அடிப்படையில் காலனிய காலத்துக் குற்றவாளிகளைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 25 கதைகள் கொண்ட ‘குற்றமுகங்கள்’ தொகுப்பை கவிதையின் அற்புத தருணங்களிலேயே நாயகர்கள், நாயகிகள் சஞ்சரிக்கும் காவியமென்றே வாசிக்க இயலும்.

எஸ். ராமகிருஷ்ணன் உருவாக்கிய காலனியகால குற்றவாளிகள் எல்லாரது வினோத நடவடிக்கைகளும் இந்த அடிப்படையிலேயே எனக்கு கவிதைகளாகத் தெரிகின்றன

ஆண்கள், பெண்கள், பெண் வேடமிட்ட ஆண்கள் குற்றவாளிகளாக அலையும் குற்றமுகங்களில் கடைசி கதையில் வரும் குற்றவாளியான சோனாபானி ஒரு நாய். எனக்கு மிகவும் பிரத்யேகமான கதை அது. சமயத்தில் இந்தக் குற்றவாளிகள் மெய்ஞானிக்குப் பக்கத்தில் போய் அமர்ந்துவிடுகிறார்கள். சமயத்தில் இந்தக் குற்றவாளிகள் பெரும் காதலர்களாய் தோன்றுபவர்கள். சமயத்தில் இந்தக் குற்றவாளிகள், அநீதியின் அடித்தளத்தில் கட்டப்பட்ட இந்த சமூகத்துக்கு நீதிகளையும் கற்பிக்கும் போதகர்கள். சமயத்தில் இந்தக் குற்றவாளிகள் சுதந்திரம் மற்றும் அழகின் உபாசகர்கள். அழகைத் தவிர வாழ்க்கைக்கு எந்த அர்த்தமுமே தெரியாமல் தோன்றி அநித்யமாக உதிரும் குட்டி மலர்களைப் போலவே குற்றம் தரும் உயிர்ப்புக்காகவே குற்றத்தைத் தொடர்பவர்கள் இவர்கள். சில சமயங்களில் இந்தக் குற்றவாளிகள் அதீதமான சிந்தனைப் பரிமாணத்துக்குச் சென்று மீளும் பைத்தியங்கள்.

குற்றமுகங்களில் வரும் சம்பவங்களும், நாயக, நாயகியரும் பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்கள் வரை வாழ்ந்தவர்கள். குற்றமுகங்களில் வரும் 25 கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் குற்றவாளிகளின் அகத்தைத் திறக்கும் வசீகரமான சாவிகளாக மாற்றியிருக்கிறார்.

எஸ். ராமகிருஷ்ணன் தான் படைத்த ஒவ்வொரு குற்றவாளியையும் அமர நட்சத்திரங்களாக மாற்றியுள்ளார். தமிழில் நான் சமீபத்தில் வாசித்த புனைவுகளில் மிகவும் முக்கியமான நூல் இது.

0Shares
0