‘ஸ்வார்ட் ஆஃப் தி பீஸ்ட்’ திரைப்படம் தலைமறைவாக வாழும் சாமுராயின் வாழ்வைப் பேசுகிறது. செவன் சாமுராய் போன்ற படங்களில் நாம் காணும் சாமுராய்களிலிருந்து மாறுபட்டவர்கள் இதில் இடம் பெறும் சாமுராய்கள். இவர்கள் அங்கீகாரமில்லாதவர்கள். சாமுராய்கள் என்ற பெயரில் சிலர் ஏமாற்றுவேலைகள் செய்கிறார்கள்.

தனது இனத்திற்கான அங்கீகாரம் மற்றும் பெருமையைத் தர மறுத்த ஆலோசகரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக வாழுகிறான் கென்னோசுகே. அது ஒரு சதிச்செயல் . அவனுடன் துணை நின்றவர்கள் கொல்லப்படுகிறார்கள். கென்னோசுகே தப்பியோடுகிறான்.
அவனது பயணத்தில் ஆற்றில் தங்கம் தேடும் இன்னொரு சாமுராயை சந்திக்கிறான். அவன் அரசாங்கத்திற்குத் தெரியாமல் தனது மனைவியுடன் இணைந்து ஆற்றுமணலில் உள்ள தங்கத்தைச் சேகரம் செய்து வருகிறான். அதனை அபகரிக்க நினைப்பவர்களைச் சண்டையிட்டுக் கொல்கிறான். அவனது கனவும் முடிவில் கலைந்தே போகிறது.
ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலவே அவர்கள் இருவரும் சித்தரிக்கபடுகிறார்கள். தனது தந்தையைக் கொலைசெய்த கென்னோசுகேவை தேடிக் கொல்வதற்காக அவரது மகளும் இரண்டு சாமுராய்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். பழி தீர்க்கும் வரை அமைதி அடைய மாட்டேன் எனும் பெண்ணைக் கென்னோசுகே பெருமையோடு பாராட்டுகிறான். அவளே உண்மையான சாமுராயின் மகள் என்று சொல்கிறான்.
தலைமறைவாக வாழும் கென்னோசுகேவுடன் ஒருவன் வழித்துணையாக இணைந்து கொள்கிறான். அவர்கள் ஆபத்தான பாதையில் நடக்கிறார்கள். எதிரிகளை வேட்டையாடுகிறார்கள்.
பழிவாங்கும் எளிய கதை எப்படிச் சிறந்த கலைப்படைப்பாக மாறுகிறது. கதை சொல்லப்படும் விதத்தில் போராளியாக நாம் காணும் இருவரும் அதிகாரத்தின் பகடைக்காய்களே என்ற சித்தரிப்பு

இரண்டு பெண்கள் முக்கியக் கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளார்கள். அதிலும் சாமுராயின் மகள் நடந்து கொள்ளும் விதம். குறிப்பாக ஆற்றோரம் அவளுக்கு நடக்கும் நிகழ்வும் அதைத் தொடர்ந்த அவளது ஆவேசமும் சிறப்பான வெளிப்பாடு.
கறுப்பு வெள்ளையில் காட்சிகள் படமாக்கபட்ட விதம் மிகவும் பாராட்டிற்குரியது. குறிப்பாகக் காட்சிக்கோணங்கள் மற்றும் நடிகர்களின் உடல்மொழி. சண்டைக்காட்சிகளில் வெளிப்படும் உண்மையான பாய்ச்சல். கேமிரா அற்புதமாகப் பதிவு செய்துள்ளது.
படத்தின் என்னைக் கவர்ந்தவர்கள் சிறுகதாபாத்திரங்களே. குறிப்பாக விடுதியின் பணியாளர் கென்னோசுகேவை காட்டிக் கொடுக்கும் விதம். ஒரு பெண்ணை வைத்து அவனை மயக்க முனையும் ஆரம்ப காட்சியின் நாடகம். ஆற்றின் கரையில் குண்டாயு என்ற ஏழை விவசாயி கூட்டாளியாக மாறும் காட்சி. இரவில் ஆற்றோரம் அவர்கள் படுத்து உரையாடும் காட்சி போன்றவை சிறப்பானவை.
தங்கம் தேடும் சாமுராயான ஜுரோட்டா யமானேவின் மனைவி டாக்கா நள்ளிரவில் கென்னோசுகேவை சந்தித்துவிட்டு வீடு திரும்பும் போது அவளை ஜுரோட்டா எதிர்கொள்வது மறக்கமுடியாத காட்சி. அதில் டாக்காவின் மனநிலையில் ஏற்படும் கொந்தளிப்பு சரியாக வெளிப்பட்டுள்ளது.
சூழ்நிலையே படத்தின் மையக்கரு. முக்கியக் கதாபாத்திரங்கள் யாவரும் ஏமாற்றப்பட்டவர்களே. அதிகார நாடகத்தின் பதுமைகளாக அவர்கள் செயல்படுகிறார்கள். அதை உணரும் தருணத்தில் பலியாகிறார்கள்
சாமுராய்களின் கசப்பான வாழ்வை நிஜமாகச் சித்தரித்துள்ள விதம் பாராட்டிற்குரியது