தியேட்டர் லேப் நாடக அமைப்பின் பத்தாண்டு விழாவில் நேற்று கதைகள் காத்திருக்கின்றன என்ற தமிழ் சிறுகதைகளின் நாடகவடிவைக் கண்டேன், அரங்கு நிரம்பிய கூட்டம், மழைக்குள்ளாகவே நாடகம் நடைபெற்றது, கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் நாடகம் பார்த்தார்கள்
தமிழின் சிறந்த சிறுகதைகளை இன்றைய சூழலோடு பொருத்தி சிறப்பாக மேடையேற்றினார்கள். பங்குபெற்ற நடிகர்கள் அத்தனை பேரும் பயிற்சி மாணவர்கள், அவர்களின் தேர்ந்த நடிப்புமும் உற்சாகமான பங்கேற்பும் மிகுந்த சந்தோஷம் அளித்தது. இதனைச் சாத்தியமாக்கியவர் தியேட்டர் லேப்பின் இயக்குனர் ஜெயராவ், அவருக்கும் நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்
இக்கதைகளைப் பலமுறை வாசித்திருக்கிறேன் என்றாலும் நாடகமாகக் காணும் போது புதிய அனுபவமாகவே இருந்தது. குருபீடம், கடவுளும் கந்தசாமி பிள்ளையும் இரண்டு நாடகத்தையும் பார்வையாளர்கள் ஆரவாரமாகக் கைதட்டிக் கொண்டாடினார்கள்.
அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள், சுந்தர ராமசாமியின் சீதை மார்க் சீயக்காய் தூள், எனது மீதமிருக்கும் சொற்கள், முத்துசாமியின் நீர்மை, ஜெயகாந்தனின் குருபீடம், புதுமைபித்தனின் கடவுளும் கந்தசாமி பிள்ளையும், பி. எஸ். ராமையாவின் நட்சத்திரக்குழந்தைகள் ஆகியவை மேடையேற்றத்தில் சிறப்பாக இருந்தன.
இளம்தலைமுறையினரிடம் புத்தக வாசிப்பை அதிகப்படுத்துவதற்கு இது போன்ற முயற்சிகள் மிக முக்கியமானவை, இந்த நாடகத்தைத் தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும், புத்தகக் கண்காட்சியிலும் அவசியம் நிகழ்த்த வேண்டும்.
தமிழ் அமைப்புகள், கல்லூரிகள் தியேட்டர் லேப்பின் ஜெயராவை தொடர்பு கொண்டு கதைகள் காத்திருக்கின்றன நாடகத்தை உங்கள் ஊரில் நடத்துவதற்கு முன்வாருங்கள், அது நவீன நாடக உலகிற்கும் இலக்கியத்திற்கும் செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும்
Theatre lab
jeya rao. 9688858882, 9444394035
No 6 Mahaveer Complex, Near Ponicherry Guest House, Munusami Salai, K K Nagar, Chennai – 600078
**