எழுத்தாளர் வால்டர் பெஞசமின் கதை சொல்வதன் முக்கியத்துவத்தை விளக்கி The Storyteller Essays என ஒரு கட்டுரை தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். சிறப்பான கட்டுரைகள் உள்ளன.

அதில் உள்ள ஒரு கட்டுரையில் கதைகளில் சில விஷயங்கள் ஏன் என்று விளக்கப்படாமல் விடப்படுகின்றன. அந்த விடுபடல் தான் கதையின் சுவாரஸ்யம். அதுவே கதைகளைக் காலம் தாண்டி பேசவைக்கின்றன என்கிறார்.
பாரசீக பேரரசர் காம்பிசஸால் தோற்கடிக்கப்பட்டா மன்னர் சம்மேனிடஸ் தனது மகள் சிறைபிடிக்கப்பட்டபோதோ, மகன் மரணதண்டனையை நோக்கிச் செல்லும் போதோ கண் கலங்கவேயில்லை. ஆனால் அவரது உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இனி தன் வாழ்க்கை அவ்வளவு தான் தலையில் அடித்துக் கொண்டு செல்லும் காட்சியைப் பார்த்த போது கண்கலங்கிவிட்டார் என்ற நிகழ்வைக் குறிப்பிடுகிறார். இதில் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது விளக்கப்படுவதில்லை. ஆனால் அது தான் மன்னர் சம்மேனிடஸை தனித்துவமிக்க வராக மாற்றுகிறது.
இதிகாசம் என்பது ஒரு கடல். ஒருவன் கடலுக்குள் எந்தக் காரணம் கருதியும் போகலாம். அல்லது வெறுமனே சந்தோஷத்திற்காகவும் கடலினுள் பயணம் செய்யலாம். அல்லது கரையில் நின்றபடியே அலைகளை வேடிக்கை பார்க்கலாம். நீந்தி மகிழலாம். இதிகாசத்தில் அதன் நாயகர்கள் போர் முடிந்தவுடன் ஓய்வெடுக்கிறார்கள். அடுத்த நாளை பற்றிக் கனவு காணுகிறார்கள். அவர்களின் வீரத்தைப் போலவே அவரின் செயலற்ற தன்மையும் முக்கியமானதே. நாவலாசிரியன் இதிகாசத்திலிருந்து வேறுபட்டவன். அவன் வாழ்க்கையை வேறு நோக்கில். வேறு விதமாகச் சித்தரிக்க முயல்கிறான். அவன் கதாபாத்திரங்களை இதிகாசம் போலக் கையாளுவதில்லை
கதைசொல்லல் என்பது ஒரு கலை மட்டுமல்ல, அது ஞானத்தின் வழிகாட்டி. ஞானத்தையே கதையாக வெளிப்படுத்துகிறார்கள் அதன் வழியே வாழ்விற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார்கள்.
குழந்தைக்கு உடல்நலமில்லை என்றால் அதன் தாய் அதன் படுக்கையருகில் அமர்ந்து தலையைத் தடவிவிட்டுக் கதை சொல்லுகிறாள். நோயுற்ற நிலையிலும் குழந்தை கதை கேட்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது. உண்மையில் கதை சொல்வது என்பது நோய் நீக்கும் முறையாகும். ஒவ்வொரு நாள் காலையிலும்,
உலகம் முழுவதிலுமிருந்து செய்திகள் நம்மை வந்து அடைகின்றன. இவ்வளவு செய்திகள் பெருகிய போதும் ஏன் சிறப்பான கதைகள் உருவாக்கப்படவில்லை. காரணம் செய்திகளால் போதும் கதையின் சிறப்பை அடைய முடியாது. எல்லாச் செய்திகளையும் கதையாக்க முடியாது. செய்திகளைத் தாண்டி செய்தியினுள் இருக்கும் மனிதர்களின் உலகை, உணர்வுகளை, அறியப்படாத காரணங்களை, ரகசியங்களை, நோக்கியே கதை பின்னப்படுகிறது. செய்தி குறிப்பிட்ட காலத்துடன் மறைந்து போய்விடக்கூடியது. கதை அப்படியானதில்லை. அது காலத்தைக் கடந்து நிற்க கூடியது.
ஆஸ்கார் வைல்ட் பற்றிய ஒரு கதை உள்ளது: ஒரு நாள் அவர் புத்தகம் படிப்பது பற்றி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இதைச் சொன்னார் என்கிறார்கள். அதாவது எனக்கு மிகவும் சலிப்பாக இருக்கும் போது ஒரு நல்ல நாவலைக் கையில் எடுத்துக் கொண்டு கணப்பு அடுப்பின் முன்னால் போய் உட்கார்ந்து கொள்வேன். நாவலை மூடி வைத்துவிட்டு நெருப்பைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்றார்.
வேடிக்கைக்காகச் சொல்லப்பட்ட விஷயம் என்றாலும் புத்தகமும் நெருப்பும் வேறுவேறில்லை. ஒரு புத்தகத்திலிருந்து உங்களுக்கான கதகதப்பு உருவாகவே செய்யும். அது உங்களை அரவணைத்துக் கொள்ளும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் வசதிகளும் இன்றைய மனிதனுக்குப் புதுவகையான வறுமையை உருவாக்கியுள்ளது. இந்த வறுமை என்பது நேரடி அனுபவமில்லாமல் வளருவதாகும். இயற்கையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டுவிட்ட மனிதன் அவற்றை வெறும் பிம்பமாக மட்டுமே திரையில் பார்த்து ரசிக்கிறான். மனிதர்கள் ஒன்றுகூடிப் பேசுவதும். உறவுகளை மேம்படுத்திக் கொள்ளுவதும் குறைந்துவிட்ட காலத்தில் கதைகளுக்கான ஆதாரமான அனுபவங்கள் இல்லாமல் போய்விடுகின்றன. அனுபவ வறுமை என்பது எந்த அனுபவத்திற்கும் உட்படாமலே கடந்து போய்விடுவதாக இருக்கிறது. பழைய அனுபவங்களை நாம் வெறுக்கிறோம். விடுபட முயல்கிறோம். புதிய அனுபவங்களுக்கு நாம் தயாராக இல்லை. He who travels has a story to tell என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். இன்று நாம் இருந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் அடைந்துவிட முயல்கிறோம்.
The novel is important not because it instructs us by presenting a stranger’s fate, but because the flame that consumes this stranger’s fate warms us as our own fates cannot. What draws the reader to a novel is the hope of warming his shivering life at the flame of a death he reads about.
என்று ஒரு கட்டுரையில் நாவல் ஏன் முக்கியமானது என்று கூறுகிறார். கதைகளின் வழியே வால்டர் பெஞ்சமின் அடையாளம் காட்டுவது மனிதகுல வளர்ச்சியின் தொடர்ச்சியை, அதன் விடுபட்ட கண்ணிகளை, நினைவுத்திரட்டினை. அந்த வகையில் கதைகளின் பின்னலை ஆராயும் இந்தக் கட்டுரைகள் முக்கியமானவை என்பேன்
••
