கோயில் பூனைகள்

கோவைக்கிழார் என அறியப்படும் கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார் கோயில் பூனைகள். காட்டு எருமைகள் என்ற இரண்டு முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

சிறந்த தமிழறிஞரான கோவைக்கிழார் எண்பது நூல்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார், இதில் முக்கியமானது கொங்குநாட்டின் வரலாற்றை எழுதியது.

வரலாறு, இலக்கியம், மொழிபெயர்ப்பு,கல்வெட்டு, நாட்டுப்புற இலக்கியம்,கோயிற்கலை,சமயம், மானிடவியல் எனப் பல்வேறு துறைகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்..

மெட்ராஸ் பிரசிடென்சியின் அறநிலையத்துறை ஆணையாளராகப் பணியாற்றிய போது தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கோயில்களுக்கு நேரில் சென்று அக்கோயில்களின் வரலாறு, நிர்வாக முறை, கோயில் அமைந்திருந்த சூழல் பற்றி ஆய்வு செய்து விரிவான குறிப்புகள் எழுதியுள்ளார் . தமிழில் அர்ச்சனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது. பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் சார்பில் தமிழ்க்கல்லூரி ஒன்றைத் தோற்றுவித்து அதன் முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார்.

கோவில் சொத்துகளை மோசடி செய்வது குறித்தும் கோவிலில் நடைபெற்ற திருட்டு மற்றும் முறைகேடுகளைப் பற்றியும் கோயில் பூனைகள் நூலில் சுவைபட எழுதியிருக்கிறார். தீவிர சைவ சமயப்பற்றாளரான கோவைக்கிழார் இப்படி ஒரு நூலை எழுதியிருப்பது கோவில் நிர்வாகத்தின் புரையோடிப் போன நிலையை  அடையாளம் காட்டுகிறது..

கோவிலுக்குப் புது நகையைக் காணிக்கையாகச் செலுத்த வைத்து அதை எப்படி ஏமாற்றுவார்கள், கோவில் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதில் நடக்கும் மோசடிகள், கோவில் வருவாயைச் சுரண்டும் நபர்கள், யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்குள் நடந்த நீதிமன்ற வழக்கு, கோவில் தர்மகர்த்தா பதவிக்காக நடக்கும் போட்டிகள், கோவில் பணத்திற்காக நடந்த கொலைகள் எனப் பல்வேறு முறைகேடுகளைப் பற்றிக் கோவைக்கிழார் கேலியும் கிண்டலுமாக எழுதியிருக்கிறார்.

மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட சிலரது பெயர்களை மாற்றியிருக்கிறார். ஊரோ, கோவிலோ பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. அது போலவே அந்தக் கால நீதிமன்றத்தின் செயல்பாடு, வழக்கறிஞர்களின் வாதம். பிறழ்சாட்சிகள். கோவில் பணியாளர்களின் வாழ்க்கை நெருக்கடிகள், ஆகமங்கள். கோவில் விழாக்கள். காணிக்கை செலுத்தும் முறைகள். ஆதீனங்களின் செயல்பாடு குறித்தும் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டவர் என்பதால் தனது பணிக்காலத்தில் சந்தித்த மனிதர்கள். நிகழ்வுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். இவரது நாட்குறிப்புகள் நூறு தொகுதிகளுக்கும் மேலாக இருக்கின்றன. அவை அச்சில் வெளியிடப்படவில்லை என்கிறார்கள்.

எல்லாக் கோவில்களிலும் யானை இருக்கிறதோ இல்லையோ கோவிற்பூனைகள் இருக்கின்றன அவற்றை யாரலும் அடக்கவோ விரட்டவோ முடியாது என்று குறிப்பிடும் கோவைக்கிழார் திருட்டுப்பூனைகளைப் பற்றி எழுதியிருப்பது நல்ல நகைச்சுவை.

இது போன்ற புத்தகம் தமிழில் வந்ததில்லை. கோவை புத்தகக் கண்காட்சியில் நண்பர் கந்தசுப்ரமணியம் இதனைச் சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்தார். ஜோனதன் ஸ்விப்ட் எழுத்துகளைப் படிப்பது போன்ற எள்ளலான நடை. நீதிமன்றக் காட்சிகளை நாடகம் போல விவரித்திருப்பது அழகு.

காட்டு எருமைகள் அந்தக் கால ஜமீன்தார்களைப் பற்றியது. சிறுகதை போலவே நிகழ்ச்சிகளை விவரித்திருப்பது கோவைக் கிழாரின் சிறப்பு. ஜமீன்தார்களின் அதிகாரம் மற்றும் அவர்கள் நிர்வாகத்திலிருந்த கோவில்கள். வெள்ளைக்காரப் பெண்ணை மணந்து கொண்ட கதை, ஜமீன்தார்களை ஏமாற்றிச் சொத்தைப் பறித்தவர்கள், ஜமீன்தார்களின் உல்லாச வாழ்க்கை, அவர்கள் விரும்பி ரசித்த இசை நாடக நிகழ்ச்சிகள், ஜமீன்தார்கள் நடத்திய வழக்குகள். மைனர்களின் வாழ்க்கை என அந்தக் கால ஜமீன்களின் அகபுற உலகை அசலாகப் பதிவு செய்திருக்கிறார்

பேரூர் புலவைப் பேரவை, தவத்திரு சாந்தலிங்கர் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி இந்த நூல்களை வெளியிட்டுள்ளது. விலை மிகவும் குறைவு.

நூலைப் பெற தொலைபேசி எண் 0422 2607995

0Shares
0