புத்தகக் காட்சி தினங்கள்- 5

கடந்த இரண்டு நாட்களாகப் புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம். நேற்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் திரண்டிருந்தார்கள். அரங்கினுள் வெக்கை தாங்கமுடியவில்லை. வியர்த்து வழிய மக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். இத்தனை ஆயிரம் வாசகர்கள் ஒன்று சேர்ந்து பதிப்புத் துறைக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இனி மற்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சி சிறப்பாகத் தொடரும்.

ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் சங்க இலக்கியம் குறித்து ஆற்றிவரும் உரைகளின் முதற்பத்து உரைகளின் நூல் வடிவினை நேற்று வெளியிட்டேன். சங்கச்சுரங்கம் என்ற இந்த தொடர் நிகழ்வு மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றுள்ளது.

கடவுள் ஆயினும் ஆக நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

நூல் வெளியீட்டில் ராஜேந்திரன் ஐஏஎஸ் எழுத்தாளர் தமிழ்செல்வன். டாக்டர் சங்கர சரவணன். .எழுத்தாளர் அப்பணசாமி, எழுத்தாளர் காமுத்துரை ஆகியோர் கலந்து கொண்டார்கள். பாரதி புத்தகாலயம் நாகராஜன் இதனை ஒருங்கிணைப்பு செய்தார்.

சாகித்ய அகாதமியில் பூமி என்ற ஆஷா பகே எழுதிய மராத்திய நாவலை வாங்கினேன். பி.ஆர். ராஜாராம் மொழியாக்கம் செய்திருக்கிறார். மும்பையில் வாழும் தமிழ் குடும்பத்தின் கதையை மராத்தியில் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாதமி பரிசு பெற்றுள்ள இந்த நாவல் மிகச்சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஸெல்மா லாகர்லெவின் மதகுரு நாவலைப் பற்றி ஒரு சிறப்புரை நிகழ்த்துங்கள் என்றொரு கோரிக்கையை ஒரு வாசகி முன்வைத்தார். அவருக்கு மிகவும் பிடித்த நாவல் என்றார். எனக்கும் மிகவும் பிடித்த நாவலிது. உலகப்புகழ் பற்ற இந்த நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. புத்தகக் கண்காட்சியில் இந்த நாவல் விற்பனைக்கு கிடைக்கிறது

மதகுரு
ஸெல்மா லாகர்லெவ் (ஆசிரியர்), க.நா.சு. (தமிழில்) அன்னம் வெளியீடு

0Shares
0