மறதியின் பாடல்

அமெரிக்காவின் தேசியக் கவியாக கொண்டாடப்படும் பில்லி காலின்ஸ் பல்வேறு இதழ்களுக்கு அளித்த நேர்காணல்கள் தொகுக்கபட்டு தனிநூலாக வெளியிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நேர்காணல்களின் தொகுப்பு. கவிதை எழுதுவது குறித்தும் கவிஞனின் அகம் குறித்தும் சிறப்பாக தனது பார்வைகளை முன்வைக்கிறார் பில்லி காலின்ஸ்.

‘பிக் டேட்டா காலத்தில் கவிதைகளின் தேவை அல்லது கவிதை எழுதுவது எப்படியிருக்கிறது என ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர் கவிதை என்பது ஸ்மால் டேட்டா என்று பதில் சொல்கிறார். உண்மை தான்.

பில்லி காலின்ஸ் சொன்னதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்

உலகம் கண்டுகொள்ளாத, அல்லது அறியாத சிறிய தகவலை கவிதை கவனப்படுத்துகிறது. இந்தத் தகவல் கவிதையின் வழியே வெளிப்படும் போது வசீகரமாக, விநோத அழகுடன் வெளிப்படுகிறது. லென்ஸ் வழியாக எறும்பைப் பார்க்கும் போது அதன் கால்கள் வியப்பளிக்கிறதே. அது போல எளிய , அன்றாட நிகழ்வுகளை கவிதை தனக்கே உரித்தான ஒரு லென்ஸ் வழியாக பார்க்கிறது. பகிர்ந்து தருகிகறது. ஒரு இலை உதிர்வது உலகிற்கு ஒன்றுமேயில்லை. ஆனால் கவிதைக்கு அது முக்கியமான நிகழ்வு. கவிதை பைனாக்குலர் போல தொலைவை அருகிலும், மாற்றி பிடித்து பைனாக்குலரைப் பார்க்கும் போது அருகிலிருப்பது தொலைவிற்கும் செல்வது போன்ற மாயத்தை ஏற்படுத்துகிறது.

தேவதச்சனின் கவிதைகளில் தொலைவும் அண்மையும் முக்கியமான பாடுபொருட்கள். தொலைவை அவர் வெளியாக மட்டும் பார்ப்பதில்லை.

பில்லி காலின்ஸ் மறதியைப் பற்றி ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். அதில் படித்த புத்தகம், படிக்காத புத்தமாக மாறும் மறதியின் விநோத உணர்வைப் பற்றி எழுதியிருக்கிறார். சிறந்த கவிதையது. இவரது கவிதைகளின் தொகுப்பு தமிழில் அவசியம் வெளிவர வேண்டும்

மேரி ஆலிவர், பில்லி காலின்ஸ் இருவரும் மிகச்சிறந்த அமெரிக்க கவிகள். தமிழில் இவர்களின் கவிதைகள் குறைவாகவே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

unlike some poets I’m not pouring out my misery. I’m really involved in some playful game with language – it’s a serious game in some ways, but it’s a game என்று நேர்காணலில் குறிப்பிடுகிறார். மனநிறைவைப் பற்றி கவிதை எழுதுவதை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நிராசைகளும் குறையுமே கவிதையில் பெரிதும் பேசப்படுகின்றன. ஆகவே மகிழ்ச்சியை விடவும் துயரமே கவிதையில் அதிகம் வெளிப்படுகிறது என்கிறார் பில்லி காலின்ஸ்

கவிதை குறித்த கட்டுரை ஒன்றில் வேர்ட்ஸ்வொர்த் கவிதையின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக மகிழ்ச்சியை குறிப்பிடுகிறார். அதுவும் கவிதை வாசிக்கும் இன்பத்தை அளிக்க வேண்டும் என்கிறார். அதை பில்லி காலின்ஸ் தனது நிலைப்பாடாகவும் வலியுறுத்துகிறார். அது போலவே ரொமான்டிசிசக் கவிஞர்கள் நகைச்சுவை மற்றும் காமத்தை விலக்கிவிட்டு அந்த இடத்தில் நிலவெளியை வைத்துவிட்டார்கள் என்று சொல்லும் அவரது அவதானிப்பு முக்கியமானது.

பில்லி காலின்ஸின் நேர்காணல் தொகுப்பு கவிஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டியது. அன்றாட வாழ்க்கையை அவர் மாயமாக்கும் வித்தையைக் கற்றுத் தருகிறார். கவிஞனின் உலகம் எத்தகையது என்பதை அடையாளம் காட்டுகிறார்

0Shares
0