சத்யஜித் ரேயின் சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட இந்தி திரைப்படம் The Storyteller . ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ளார். அறிவியல்புனைகதைகள் உள்ளிட்ட பல்வேறு சிறுகதைகளை ரே எழுதியிருக்கிறார். விசித்திரமான நிகழ்வுகள். மனிதர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட அவரது சிறுகதைகள் வங்காளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஓவியர் என்பதால் ரே கதாபாத்திரங்களைத் துல்லியமாகச் சித்தரிக்கக் கூடியவர். இந்தக் கதையில் வரும் இருவரும் தனித்துவமானவர்கள்.

வங்காளத்தில் வாழும் தாரிணி பந்தோபாத்யாயா என்ற அறுபது வயதானவர் ஒரு கதை சொல்லி. முதலாளித்துவத்தை வெறுக்கும் அவரால் எங்கேயும் வேலை செய்ய முடியவில்லை. 72 வேலைகள் மாறிவிட்டதாகச் சொல்கிறார். அவரது மகன் அரிந்தம் அமெரிக்காவில் வசிக்கிறான். அவன் தந்தையை அமெரிக்கா வந்துவிடும்படி அழைக்கிறான். ஆனால் அவருக்கு முதலாளித்துவ நாடான அமெரிக்காவைப் பிடிக்கவில்லை. பேரன் தொலைபேசியில் அழைத்துத் தனக்குக் கதை சொல்வதற்காக அமெரிக்கா வரும்படி அழைக்கிறான். அதற்காகப் போக விரும்பினாலும் கல்கத்தாவை விட்டுச் செல்ல அவரது மனது இடம் தரவில்லை.
அவர் ஒரு நாள் பத்திரிக்கையில் கதை சொல்லி தேவை என்ற ஒரு விளம்பரத்தைக் காணுகிறார். அகமதாபாத்திலுள்ள முகவரிக்கு விண்ணப்பம் செய்கிறார். நேரில் வரும்படி அவரை அழைக்கிறார்கள். பெங்காலிகள் மீன் உண்பதையும் துர்கா பூஜையினையும் எந்த நிலையிலும் விடமாட்டார்கள் எனும் தாரிணி புதிய வேலைக்காகச் சொந்த ஊரைவிட்டு அகமதாபாத் புறப்படுகிறார்.
கதை சொல்லி தேவை என்ற விளம்பரத்தை கொடுத்தவர் தொழிலதிபரான ரத்தன் கரோடியா, ஜவுளி தொழில் செய்துவருகிறார். பணக்காரர், ஐம்பது வயதானவர். அவருக்கு நீண்டகாலமாகவே தூக்கம் வர மறுக்கிறது என்பதால் சிறுவயதில் பாட்டியிடம் கதை கேட்டது போல ஒரு கதைசொல்லியை வேலைக்கு வைத்துக் கொள்ள அழைத்திருக்கிறார் என்பதைத் தாரிணி அறிந்து கொள்கிறார்.
தூக்கமின்மை என்பது பணம் படைத்தவர்களுக்கு வரும் வியாதி எனக் கேலி செய்யும் தாரிணி கதை சொல்லியாக அங்கே வேலைக்குச் சேருகிறார்

ரத்தன் கரோடியா சைவ உணவு உண்பவர். வீட்டில் அலங்காரப் பொருள் போல புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார். ஆனால் எதையும் படிக்கமாட்டார். புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே அறிவு வந்துவிடும் என நம்புகிறார். அவர் படிக்கும் ஒரே புத்தகம் வரவுசெலவு கணக்குப் பேரேடு மட்டுமே .
தாரிணி தினமும் மீன் சாப்பிடக் கூடியவர். அவருக்குக் குஜராத்தி உணவு ஒத்துக் கொள்வதில்லை. ஆனாலும் வழியில்லாமல் ரத்தன் கரோடியாவிற்குக் கதை சொல்வதற்காக அந்த வீட்டில் வசிக்கிறார். தினமும் இரவு ரத்தன் அறைக்குச் சென்று அவருக்காகக் கதை சொல்கிறார். தாரிணி விடிய விடிய கதை சொன்னாலும் ரத்தனுக்கு உறக்கம் வருவதில்லை. ஆனால் தாரிணி சொல்லும் கதைகளைச் சுவாரஸ்யமாகக் கேட்கிறார். மறுநாள்காலையில் பாராட்டுகிறார்.
தனிமையில் வசிக்கும் ரத்தன் கரோடியாவின் வாழ்க்கையில் ஏதோ புதிர்கள் சிக்கல்கள், இருப்பதாக உணரும் தாரிணி அதை;ச சரி செய்யும்படி சொல்கிறார். அவர்களுக்குள் நட்பு உருவாகிறது.
இதற்கிடையில் ரத்தன் வீட்டின் அருகிலுள்ள நூலகத்திற்குச் சென்று உறுப்பினராகும் தாரிணி அங்குப் பணியாற்றும் பெண்ணுடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார். அவளுடன் தாரிணி உரையாடும் காட்சிகள் அழகானவை.
அவள் வழியாகக் குஜராத்தியில் வெளியாகும் இதழ்கள் பற்றியும் கார்க்கி என்ற குஜராத்தி எழுத்தாளரைப் பற்றியும் அறிந்து கொள்கிறார். அந்தக் கார்க்கி வேறு யாருமில்லை ரத்தன் கரோடியா தான் என அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ரத்தன் கரோடியாவின் மறுபக்கத்தை அறிந்த தாரிணி என்ன செய்கிறார் என்பதே படத்தின் பிற்பகுதி
ஆயிரமாயிரம் கதைகள் சொல்ல தெரிந்த தாரிணி ஒரு வரி கூட எழுதுவதில்லை. தயக்கம். சோம்பல். மற்றும் விமர்சனத்திற்குப் பயந்து அப்படி நடந்து கொள்வதாகச் சொல்கிறார். படிப்பதில் ஆர்வமான அவர் தீவிர இலக்கியவாசகர். தாகூரை, மாக்சிம் கார்க்கியை, டால்ஸ்டாயை விரும்பி படிக்கிறார்.
அவருக்கு நேர் எதிரான கதாபாத்திரம் ரத்தன். பகட்டான மனிதர். புகழுக்காக எதையும் செய்யக்கூடியவர். தந்திரமானவர். அதே நேரம் தனது பலவீனங்களை அறிந்து வைத்திருப்பவர்.

இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களைக் கதை இணைக்கிறது. தூக்கமின்மைக்குக் கதைகள் தான் மருந்து எனத் தாரிணி சொல்கிறார். கதை கேட்கும் போது நம்மை மறந்துவிடுகிறோம். கதைகள் மருந்தாக வேலை செய்கின்றன என்பதைத் தாரிணி உணர்ந்திருக்கிறார்.
நூலகரிட்ம் தான் என்ன வேலை செய்கிறேன் என்பதை விவரிக்கும் போது உறக்கதை வரவழைப்பவர் என்றே அறிமுகம் செய்து கொள்கிறார்.
குஜராத்தி பேசத் தெரியாத வங்காளியான தாரிண எந்த மொழியில் கதையைச் சொல்கிறார் என்று தெரியவில்லை தாரிணி சொல்லும் கதைகள் அனிமேஷன் காட்சியாக விரிகின்றன. அந்தக் கதைகளில் ஒரு அற்புதமும் இல்லை. அவை குழந்தைகளுக்காகச் சொல்லப்படும் எளிய கதைகள். அதன் காரணமாகக் கதை சொல்லியின் மீது நாம் கொள்ளும் ஈர்ப்பு அவர் சொல்லும் கதைகளிடம் ஏற்படுவதில்லை.
பெங்காலிகளின் பெருமிதங்களான கம்யூனிசம், வங்காள எழுத்தாளர்கள். மகாகவி தாகூர் அவரது இசை, மீன் உணவு. துர்கா பூஜை. இவற்றையே இப்படமும் பேசுகிறது. குஜராத்தி வணிகர்களைப் படம் கேலி செய்கிறது. வங்காளத்தைப் போலவே குஜராத்தியிலும் சிறந்த எழுத்தாளர்கள். இலக்கிய மரபு இருப்பதைப் படம் சித்தரிக்கவில்லை.
உண்மையில் இப்படம் கல்கத்தா, அகமதாபாத் எனும் இரு நகரங்களின் கதை. மனைவியை இழந்து வாழ்பவருக்கும், தனியே வாழுகிறவருக்குமான உறவின் கதை. இக்கதையில் வரும் ரேவதியின் வாழ்க்கையும் கடந்தகாலமும் முழுவதும் விவரிக்கபடுவதில்லை. அது சொல்லப்படாத கதையாகவே உள்ளது.
கதையின் முக்கியத் திருப்பம் அழகானது. ஆனால் அதற்கான காரணங்களும் கதையில் அந்தத் திருப்பம் ஏற்படுத்தும் விளைவுகளும் எளிமையாக முடிந்துவிடுவது ஏமாற்றம் அளிக்கிறது.
வால்டர் பெஞ்சமின் தனது கதைசொல்லியைப் பற்றிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்
Boredom is the dream bird that hatches the egg of experience. A rustling in the leaves drives him away. His nesting places—the activities that are intimately associated with boredom—are already extinct in the cities and are declining in the country as well. With this the gift for listening is lost and the community of listeners disappears. For storytelling is always the art of repeating stories, and this art is lost when the stories are no longer retained. It is lost because there is no more weaving and spinning to go on while they are being listened to. The more self-forgetful the listener is, the more deeply is what he listens to impressed upon his memory. When the rhythm of work has seized him, he listens to the tales in such a way that the gift of retelling them comes to him all by itself. This, then, is the nature of the web in which the gift of storytelling is cradled. This is how today it is becoming unraveled at all its ends after being woven thousands of years ago in the ambience of the oldest forms of craftsmanship
ரேயின் இக்கதையும் இதனையே பேசுகிறது. கதை சொல்லி ஒரு விதையை மண்ணில் ஊன்றுவது போலக் கேட்பவர் மனதில் கதையை ஊன்றிவிடுகிறான்.
கதைசொல்லி என்பதும் கதையைச் சொல்பவர் என்பதும் வேறுவேறு. கதை சொல்லி மரபின் தொடர்ச்சியான கலைஞன். ஆனால் கதையைச் சொல்பவர் தான் படித்த, கேட்ட. யாரோ சொன்ன கதையை அரங்கில் சொல்கிறார். கைதட்டு பெறுகிறார்.
ஆனால் கதை சொல்லி என்பவர் தானே புதியபுதிய கதைகளை உருவாக்குபவர். தாரிணி சொல்வது போல அத்தனையும் ஒரிஜினல் கதைகள். அதை நிகழ்த்துகலை போல உயிரோட்டமாக நிகழ்த்துகிறார். தனது இனத்தின். நிலத்தின், வரலாற்றின், உறவுகளின் அழியாத நினைவுகளைக் கதைகளாக நெசவு நெய்கிறார்.
இத்திரைப்படத்தில் வரும் தாரிணி ஒரு கதை சொல்லி. அவர் வாய்மொழிக்கதை மரபில் உருவானவர்.
ஒரு காலத்தில் டிக்கன்ஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தனது கதையைத் தானே மக்களிடம் சொன்னார்கள். அதற்குப் பெரிய கூட்டம் வந்தது. கட்டணம் செலுத்தி மக்கள் கதை கேட்டார்கள். அச்சு வடிவம் வந்தபிறகு வாய்மொழிக்கதை சொல்லிகள் குறைந்து போனார்கள்.
அடில் உசேன் மற்றும் பரேஷ் ராவல் முக்கிய வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.