கரையும் உருவங்கள்

 ‘The Last Music Store’. என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். மேகா ராமசாமி இயக்கியுள்ளார்

மும்பையின் புகழ்பெற்ற மியூசிக் ஸ்டோரான ரிதம் ஹவுஸ் பற்றிய இந்த ஆவணப்படம் அதன் கடந்தகாலத்தையும் இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களையும் பற்றியது.

ரிதம் ஹவுஸ் பற்றிய ஆவணப்படத்தைக் காணும் போது என் மனதில் லேண்ட்மார்க் புத்தகக்கடை மூடப்பட்ட கடைசிநாளில் அங்கே சென்று புத்தகங்கள் வாங்கியது தோன்றி மறைந்தது

ரிதம் என்ற பெயர் கடைக்கு வைக்கப்பட்டதற்கான காரணம், அந்தக் கடைக்கு வருகை தந்த புகழ்பெற்ற நடிகர்கள் இசைக்கலைஞர்கள். அதன் நிரந்தர வாடிக்கையாளர்கள். காலமாற்றத்தில் சந்தித்த பிரச்சனைகளைப் பற்றிப் படம் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளது

ஒருவகையில் இப்படம் நாம் கடந்த வந்த இசையுலகின் வரலாற்றுச் சாட்சியம்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இசைத்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள். இசைத்தட்டுகள், ஆடியோ கேசட்., சிடி, எம்பி3 ஆன்லைன் இசை ஒலிபரப்புகள் என இசை கேட்பதில் ஏற்பட்ட மாற்றங்களையும் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் படம் உண்மையாகப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக இசையின் காப்புரிமை மற்றும் பைரசி குறித்த கேள்விகளைப் படம் எழுப்புகிறது

ரிதம் ஹவுஸ் வெறும் இசைவிற்பனையகம் மட்டுமில்லை. அது மும்பையின் இசைக்கலாச்சாரத்தை உருவாக்கிய அடையாளம். புகழ்பெற்ற மேற்கத்திய இசைக்கலைஞர்களின் இசைத்தட்டுகள். இந்திய இசைமேதைகளின் இசைத்தட்டுகள். ஹிஸ்துஸ்தானி இசை, கர்நாடக இசை ராப், பாப், ப்யூசன் எனப் பல்வேறு விதமான இசைத்தட்டுகளையும் திரைப்படக் குறுந்தகடுகளையும் விற்பனையும் தயாரிப்பும் செய்த நிறுவனம் பொருளாதார நெருக்கடி காரணமாக மார்ச் 1 ம் தேதியோடு கடையை மூடப்போவதாக அறிவித்தது

ரிதம் ஹவுஸின் கடைசி நாளையே படம் பதிவு செய்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் உணர்ச்சிப்பூர்வமாகத் தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சிலர் கேமிரா முன்னால் பேசமுடியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள். கடை உரிமையாளரும் அது போலவே பாதிப் பேசிக் கொண்டிருக்கும் போது உடைந்து அழுகிறார். இந்தக் கடையின் நினைவுகளுக்குள் ஐம்பது ஆண்டுகால இசைஉலகின் வரலாறு மறைந்திருக்கிறது. மக்களின் ரசனையில் ஏற்பட்ட மாற்றம். சினிமா இசையில் ஏற்பட்ட மாற்றம். புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் வாழ்க்கை, மற்றும் தீவிர இசை ரசிகர்களின் வாழ்க்கை எனக் காலத்தால் அழியாத நினைவுகளைப் படம் விவரிக்கிறது

கடை ஊழியரான ஆங்கிலோ இந்தியர் தனது நேர்காணலில் இந்தி சினிமா பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை மிகவும் உண்மையாக, கண்ணீர் ததும்பப் பதிவு செய்திருக்கிறார்.

ஒவ்வொரு நாளையும் இசையோடு வாழ்ந்துவிட்டு இனி எந்த வேலைக்குச் செல்வது என்ற ஊழியர்களின் கேள்வி மனதில் ஒலித்தபடியே இருக்கிறது.

உண்மையில் இது ரிதம் ஹவுசின் கதை மட்டுமில்லை. மதுரை, சென்னை, கோவை, சேலம் ,திருச்சி எனத் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் செயல்பட்டு வந்த புகழ்பெற்ற ம்யூசிக் ஸ்டோர்கள் காலமாற்றத்தில் மூடப்பட்டதைப் பற்றியதும் கூட.

என்னிடம் இப்போதும் நிறைய ஆடியோ கேசட்டுகள். திரைப்பட டிவிடிகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவதேயில்லை. அதே நேரம் அவற்றைத் தூக்கி எறிந்துவிட மனமில்லை. பொருளின் மீது நம் நினைவுகள் படிந்துவிடும் போது அதன் இயல்பும் மதிப்பும் மாறிவிடுகிறது.

தொழில்நுட்பம் இசையின் தரத்தை மிகவும் உயர்த்தியிருக்கிறது. அதே நேரம் இசை விற்பனையில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே நிஜம்

படத்தின் கடைசிக்காட்சியில் கடையை இழுத்து மூடுகிறார்கள். ஊழியர்கள் வீடு செல்ல மனமில்லாமல் கவலையோடு அமர்ந்திருக்கிறார்கள். உரிமையாளர் செய்வதறியாமல் அமர்ந்திருக்கிறார். அவர்களின் மௌனம் நம்மையும் கவ்விக் கொள்கிறது

கால மாற்றம் என்ற சிறுசொல் தங்களை இவ்வளவு கிழே தள்ளிக் கெக்கலிக்கும் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

0Shares
0