ரியா ரோஷன் என்ற ஏழாம் வகுப்பு மாணவி டான்டூனின் கேமிரா நூலை வாசித்து எழுதியுள்ள குறிப்பு
•••

பெயர் : ரியா ரோஷன்
வகுப்பு: ஏழாம் வகுப்பு
வயது :12
இடம்: சென்னை
புத்தகம் : டான்டூனின் கேமிரா
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி
விலை: Rs.150

2021 இல் நான் படித்த முதல் புத்தகம் – நீல சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து. இந்த வருடத்தில் நான் படிக்கும் முதல் தமிழ் புத்தகம் – டான்டூனின் கேமிரா. இரண்டுமே எஸ். ரா அவர்கள் எழுதியது தான்.
இது எறும்பு உலகத்தின் கதை டான்டூன் என்ற ஒரு எறும்பு தான் இந்தக் கதையின் ஹீரோ. அது தன்னுடைய தந்தையைப் போல ஒரு போட்டோகிராபர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறது.
அதற்காக ஷெகர் என்ற ஒரு பூனையிடம் போட்டோகிராபி கற்றுக்கொள்கிறது அது எப்படி ஒரு பெரிய போட்டோகிராபர் ஆகுகிறது, என்பது தான் இந்தக் கதையே.
எனக்குப் போட்டோகிராபி மிகவும் பிடிக்கும். அதனால் இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்திருந்தது.
இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள்:
• டான்டூனின் அம்மா அவனிடம் “ கால்களைப் பலர் பயன்படுத்துவதேயில்லை. வசதி அதிகமானவுடன் நடப்பதை விட்டுவிடுகிறார்கள். கால்கள் முடங்க ஆரம்பித்தால் உடலில் நோய் உருவாக ஆரம்பித்துவிடும். மனிதர்களுக்குக் கால்களின் அருமை தெரியவில்லை.” என்று சொல்வார்கள். இது ஒரு முக்கியமான பாயிண்ட்.
•டான்டூனின் அம்மா “துப்பாக்கியை விடவும் வலிமையானது கேமிரா. அதைக் கவனமாகக் கையாள வேண்டும்.” என்று சொல்வார். இந்த வார்த்தைகள் மிகவும் அழகாக இருந்தது.
• டான்டூனின் தாத்தா, அவனிடம் போட்டோ எடுப்பது என்பது உண்மையைப் பதிவுசெய்யும் கலை. நீ எப்போதும் உண்மையின் பக்கம் தான் இருக்க வேண்டும்.” என்றும் சொல்வார். இதுவும் மிகவும் அழகாக இருந்தது.
• ஷெகர் டான்டூனிடம் “கஷ்டப்படாமல் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.” என்று சொல்லும். இது மிகவும் உண்மை.
• மனிதர்கள் துரித உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும்.
நாமும் எறும்புகள் போல நிறைய உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று இந்தக் கதையில் வருவது பிடித்துள்ளது.
• “புகையில்லாத வாகனங்களை உருவாக்க வேண்டும். சாக்கடையாக உள்ள ஆற்றைத் தூய்மைப்படுத்த வேண்டும். நிறைய மரங்கள் நடப்பட வேண்டும். இதை விடவும் நகரைத் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை என மக்கள் உணர வேண்டும்.” என்ற கருத்துக்கள் நன்றாக இருந்தது.
.
இந்தப் புத்தகம் ஒரு திரைப்படத்தைப் போல இருந்தது. ஷெகரும் டான்டூனும் வரும் comedy scene இல் நான் பயங்கரமாகச் சிரித்தேன்.
இதில் உள்ள ஓவியங்கள் மிகவும் அழகாக இருந்தன. ஒரு modern art போல வரையப்பட்டு இருந்தது. இந்த ஓவியங்களை வரைந்தவர் கே.ஜி.நரேந்திர பாபு.
இது அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.