தேவதச்சனை மொழிபெயர்ப்பது -3

நகுல்வசன் தமிழில் புனைவெழுத்து முயற்சிப்பவர், ஆங்கில மொழியாக்கங்களுக்கு Nakul Vāc என்ற பெயர் புனைந்து கொண்டவர். இவர் தமிழில் எழுதியுள்ள கதைகளும் கவிதைகளும் சொல்வனம் மற்றும் பதாகை இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன.

நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்படுகிறது

***

ஜெல்லி மீனே ஜெல்லி மீனே

– தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) – jellyfish

ஜெல்லி மீனே ஜெல்லி மீனே:

என் கண்களை நழுவ விடுகிறேன்

என் காதுகளை உதிர்க்கிறேன்

மறையச் செய்கிறேன் என் நாசியை

இப்போது

மிஞ்சி நிற்கிறேன்

வாயும் வயிறுமாய்

மெல்ல நகர்ந்து கடலுக்கடியில் செல்கிறேன்

கரையோரம் வந்து

காத்துக் கிடக்கிறேன்

மாலைச்சிறுவர்கள் வருவார்கள் என

என்னை உள்ளங்கையில் ஏந்தி

ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என

அப்போது அவர்களிடமிருந்து

விரல்களைப் பரிசுபெறுவேன்

கண்களை வாங்கிக் கொள்வேன்

நாசியைப் பெற்றுக் கொள்வேன்.

கூடவே கூடவே

நானும்

விளையாடத் தொடங்குவேன்:

ஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று

௦௦௦

O Jellyfish Jellyfish:

I let my eyes slip away

I shed my ears

I get my nose to vanish

Now

I stand with what’s leftover

All mouth and stomach
I pregnantly inch slowly towards the bottom of the sea

I move towards the seashore

and wait patiently for

the kids to show up in the evening

Rest me on their palms and scream

O Jellyfish Jellyfish

I would then get from them

a gift of :

Fingers,

Eyes and

Nose.

And also, also

I would begin to play :

O Jellyfish Jellyfish.

௦௦௦

கவிதை இங்கே ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்- “கரையோரம் வந்து/ காத்துக் கிடக்கிறேன். மாலைச்சிறுவர்கள் வருவார்கள் என/ என்னை உள்ளங்கையில் ஏந்தி/ ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என/”.  மாலைச் சிறுவர்கள் என்பதை தினமும் மாலைப் பொழுதில் வரும் சிறுவர்கள் என்று எடுத்துக்கொண்டால், சிறுவர்கள் ஜெல்லி மீன் பிடித்து கையில் வைத்து விளையாடுவது வழக்கம் என்றும் அதைக் காணும் கவிஞர், சிறுவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள நினைக்கிறார் என்றும் சொல்ல இடமிருக்கிறது

இங்கிருந்து துவங்கி,. கவிதையின் முதல் பகுதியை வாசித்தால், ஜெல்லி மீனாகும் நோக்கத்தில் அவர் தன் அவயங்களை இழந்து ஆழ்கடலுக்குச் சென்று தனக்குரிய பூதத்தலத்தைக் கண்டுகொண்டவராய், கரையோரம் வந்து காத்து நிற்கிறார் என்று வாசிக்கிறோம். அதன்பின் அவரை உள்ளங்கையில் ஏந்தி ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்தும் மாலைச் சிறுவர்களில் ஒருவராகி கவிஞரும் ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துகிறார்.

இது எப்படி சாத்தியம்? ஜெல்லி மீன் என்றால் அவர் ஜெல்லி மீனாகவே மாறுவதில்லை. தன்னிழப்பு ஏற்படுகிறது. எப்படி ஜெல்லிமீனாக மாறுகிறாரோ அதே போல் அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாய் அந்த உருவத்தையும் இழந்து சிறுவர்களின் விரல்களாகவும் கண்களாகவும் நாசிகளாகவும் இருந்து மகிழ்கிறார்..தனிமை, அதையொட்டிய சுத்திகரிப்பும் – இவற்றில்தான் கலப்பின் சாத்தியங்களும் கூடலின் திளைப்பும் உருவாகின்றன என்பதில் பல சிந்தனைகளை அளைய இடமுண்டு.

ஆனால் பொழுது சாயும்போது ஜெல்லி மீனின் கதி என்ன? அவரவர் பாதை அவரவருக்கு, இந்தக் கூடல் நிலையானதல்ல. இது தெரிந்தும் உருமாற்றம் பெறும் விருப்பம் வெளிப்படுகிறது எனில் பிறருடன் தொடர்பு கொள்ளும் விழைவில் தன்னிழப்பையும் மரணத்தையும் தழுவ விரும்பும் மிக உக்கிரமான தனிமை மேலோங்கித் தெரிகிறது என்றுதான் கொள்ள முடியும். இதில் ஒரு atavistic impulse உள்ளது என்றும் சொல்லலாம். ஜெல்லி மீன்தான் உலகின் மூத்த பல்லுறுப்பு உயிரி என்பதால் தன் உறுப்புகள் அனைத்தையும் இழந்து துவக்கங்களுக்குச் செல்வதில் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிய பயணத்தைக் கற்பனை செய்து பார்க்கிறார் கவிஞர். அதன்பின் தன்னுணர்வு பெற அவர் தேர்ந்தெடுப்பது சிறுவர்களின் உடலை, இதிலும் தனிமனித அனுபவத்தின் பின்னோக்கிய பயணமே மேற்கொள்கிறார். இது போதாதென்று ஒரு ஜெல்லி மீனாய் மாறியபின் அவர், கரையோரம் “வாயும் வயிறுமாய்” நிற்கிறார்- சூல் கொண்ட பெண்ணைப் போல், சூலின் நிறை சாத்தியங்களோடு.

தனிமையின் துயரைப் பேசும் இக்கவிதை அதை romanticise செய்வதில்லை- அகத்தின் வேலிகளற்ற ஒரு ஆனந்தம் எதிர்பார்க்கப்படுகிறது, தனிமையின் தடுமாற்றங்களை, அதன் ‘பிற்போக்கு’ உணர்வை, அதன் உளச்சிக்கல்களை மிக அழகாக, எதையும் எளிமைப்படுத்தாமல் வெளிப்படுத்துவதால்தான் இந்தக் கவிதையில் ஒரு சிறு உறுத்தல் தென்படுகிறது. ஒரு நண்பர் இது குரூரமான கவிதை என்றும் பதிவு செய்திருக்கிறார், அது ஏன் என்பதை ஒருவாறு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் குரூரமல்ல, தனிமையும் அதன் தீர்வாய் தனிமையற்ற கூடலின் வசீகர அழைப்பும்தான் இந்தக் கவிதையின் அடிநாதம். அதற்குரிய விலை தன்னிழப்பு எனில் அவ்வாறே ஆகட்டும்.

வாயும் வயிறும் என்பதை அதன் முழுப்பொருளில் ஆங்கிலப்படுத்த இயலாமல் போய் விட்டது, இந்த மொழியாக்காத்தின் மிகப் பெரிய இழப்பு. ஆனால், |I stand with what’s left over/ A mouth and a stomach” என்பதில் மிகப் பெரும் வறுமையையும் பசியையும் சுட்ட முடிகிறது என்பதே இதன் மிகச் சிறந்த பயன்.

**

( நகுல்வசனைப் பற்றிய குறிப்பு அரூ இணையதளத்தில் இருந்து பெறப்பட்டது)

0Shares
0