.
மனித உரிமைகளுக்காக வாதிடும் வழக்கறிஞர் பிலிப் சாண்ட்ஸ் எழுதிய East West Street நூலைப் பற்றி நண்பர் சர்வோத்தமன் சடகோபன் இணையதளத்தில் தான் தெரிந்து கொண்டேன். அந்த நூலைப் பற்றி அவர் சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்திருந்தார். உடனே அதை இணையத்தின் வழியே வாங்கிப் படித்தேன். வியப்பூட்டும் தகவல்களுடன் உள்ள அரிய நூல். நீதித்துறை சார்ந்தவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். உண்மையில் இது ஒரு பெரிய நாவலாக எழுத வேண்டிய கருப்பொருளைக் கொண்டது. பிலிப் சாண்ட்ஸ் தனது விரிவான ஆய்வின் மூலம் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் ஊசலாடும் பல நிகழ்வுகள் வழியாக நாம் மனித உரிமைக்களுக்கான சட்ட வரைவுகளை உருவாக்கிய இரண்டு வழக்கறிஞர்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறோம். லிவீவ் நகரில் வசித்த இருவரும் நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கியமானவர்கள்.
ஒருவர் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை உருவாக்கிய ரஃபேல் லெம்கின் மற்றவர் “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற கருதுகோளை முன்வைத்த ஹெர்ஷ் லாட்டர்பேக்ட்.
இரண்டு வழக்கறிஞர்களும் மனித உரிமைகள் பற்றியே பேசுகிறார்கள். ஆனால் இரண்டு வேறுபட்ட கண்ணோட்டத்திலிருந்து. இருவர் முன் வைக்கும் வாதங்களும், அதற்கான காரணங்களும் சரியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
பிலிப் சாண்ட்ஸின் தாத்தா உக்ரேனிலுள்ள லியான் லிவீவ் நகரத்தில் வசித்தவர். அதே நகரின் கிழக்கு மேற்கு தெருக்களில் லெம்கினும் ஹெர்ஷ் லாட்டர்பேக்ட்டும் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரே நகரின் இரண்டு வீதிகள் நீத்துறை வரலாற்றில் எவ்வாறு முக்கியமாக அடையாளமாக மாறியது என்பதைச் சாண்ட்ஸ் விவரிக்கிறார்.
ஒரு இனத்தின் மீது நடத்தப்படும் குற்றங்களே இனப்படுகொலையாகும். அதில் தனிநபரை விடவும் இன அடையாளம் தான் முதன்மையானது. ஆகவே யூதர்கள் மீது நடத்தப்பட்டது அப்பட்டமான இனப்படுகொலை என்கிறார் லெம்கின்.
ஆனால் நாம் அவர்கள் என்று இன அடையாளத்தின் படி இருவரை பிரிக்கும் போது எதிர்தரப்பில் உள்ள அப்பாவிகளை, குற்றமற்றவர்களையும் சேர்த்துப் பழிசுமத்துகிறோம். அது சரியானதில்லை. இனப்படுகொலையாக அறியப்பட்டாலும் அது தனிநபர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மோசமான குற்றங்களே என்கிறார் லாட்டர்பேகட்
அவர் முன்நிறுத்துவது தனிமனிதனை. அவனைக் கட்டுப்படுத்தித் தண்டிக்கும் அதிகாரத்தின் வரம்புகளை.

இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார்கள். யூதர்கள் என்பதால் லாட்டர்பேக்டின் குடும்பத்தினர் இரண்டாம் உலகப்போரின் போது கொல்லப்பட்டார்கள். அவரே சட்டம் பயில முடியாமல் திண்டாடினார். போராடி சட்டம் பயின்ற அவர் யூதர்கள் கொல்லப்பட்டதை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றே வாதிடுகிறார். அப்படி வரையறை செய்யும் போது தான் குற்றவாளியின் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய குற்றங்களை விசாரிக்கத் துவங்கப்பட்ட நியூரெம்பர்க் விசாரணையில் நாஜி போர்க்குற்றவாளிகளை எப்படி விசாரிக்க வேண்டும், ஜெர்மனி உருவாக்கிய சட்டங்கள் சரியானதா என்ற கேள்விகள் எழுந்தன. இனப்படுகொலை என்று குற்றம்சாட்டப்பட்டாலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற ரீதியிலே பலரும் தண்டிக்கபட்டார்கள்
போலந்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஹான்ஸ் ப்ராங்க் .லட்சக்கணக்கான யூதர்களின் கொலைக்குக் காரணியாக இருந்தார். ஹிட்லரின் ஆணையைச் செயல்படுத்தினார் என்பதால் தனிநபராக ஹான்ஸ் ப்ராங்க் செய்தது குற்றம் கிடையாது. .ஆனால் அவரது ஆணையின் படி குரூரக்கொலைகள் நடந்திருக்கிறது என்பதால் அவை மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படுகின்றன
லெம்கின் மற்றும் லாட்டர்பேக்ட் இருவரும் மனித சமுதாயத்தின் நலனையே முதன்மையாகக் கருதினார்கள். நீதியின் மீது மாறாத பற்றும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். சாண்ட்ஸ் இந்த இரண்டு ஆளுமைகளின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகளை விவரிப்பதுடன் தனது குடும்ப வரலாற்றையும் சிறப்பாக ஒன்றிணைத்துள்ளார்.
.