குறுங்கதை-33 மொழி அதிகாரம்

அமேசான் காடுகளில் வாழும் முண்டிரு என்ற பழங்குடியினர் பேசும் மொழியில் காலத்தைக் குறிக்கும் சொற்கள் கிடையாது. பன்மை சொற்கள் கிடையாது. அப் பழங்குடியின் மொழி பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஜோன்ஸ் வாழ்நாளின் பெரும்பகுதியை அமேசானில் கழித்தார். முதுமையில் நாடு திரும்பி வந்த போது அவரைச் சந்தித்த நண்பர் கேட்டார்

“அமெரிக்காவிலிருந்து அங்குப் போய்ச்சேர எவ்வளவு நாட்களானது“

ஜோன்ஸ் சொன்னார்

“இங்கிருந்து சான்டரெம் வரை ஒன்பது மணி நேர விமான பயணம். பின்பு அங்கேயிருந்து படகில் ஆறு மணி நேரப்பயணம். ஒரு படித்துறையில் இறங்கி அங்கே ஜீப்பினை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தேவையான பொருட்களுடன் இன்னொரு ஐந்து மணி நேர பயணம். ஜகீராசிங்கா என்ற இடத்தில் பழங்குடிகள் வசிக்கிறார்கள். அங்கே போவதற்குப் பழங்குடி மக்களில் எவரேனும் நம்மைக் காட்டினுள் அழைத்துப் போக வேண்டும். அது வரை ஒரு பாலத்தில் காத்திருக்க வேண்டும்“

“எவ்வளவு நேரம்“ எனக்கேட்டார் நண்பர்

“சில நாட்கள் அல்லது சில வருஷங்கள்“ என்று அமைதியாகச் சொன்னார் ஜோன்ஸ்

“பழங்குடி மக்கள் அழைத்துப் போக ஒத்துக் கொண்டுவிட்டால் எவ்வளவு நேரம் காட்டினுள் பயணிக்க வேண்டும்“ எனக்கேட்டார் அந்த நண்பர்

“அது மழையின் கையில் இருக்கிறது. மழை நம்மை அனுமதித்தால் இரண்டு நாட்களில் காட்டினுள் போய்விடலாம். அனுமதிக்காவிட்டால் வழியிலே சாக வேண்டியது தான். “

“அவ்வளவு சிரமமா“ என வருத்தப்பட்டபடியே நண்பர் கேட்டார்

“ஜகீராசிங்காவில் எவ்வளவு காலம் ஆய்வு செய்தீர்கள்“

“பழங்குடியின் மொழியை அறிந்து கொள்ள மூன்று ஆண்டுகள். அவர்கள் மௌனத்தை அறிந்து கொள்ள முப்பது ஆண்டுகள் போதவில்லை“.

“ஏன் அவர்கள் மொழியில் காலத்தைக் குறிக்கும் சொற்கள் இல்லை“

“காலமும் எண்ணிக்கையும் அதிகாரத்தின் அடையாளம். எல்லையில்லாத ஒரே காட்டில் வேறு வேறு இடங்களில் வசிப்பது போலவே முடிவற்ற ஒரே காலம் இருப்பதாகக் கருதுகிறார்கள். காலத்தைப் பிரிக்காவிட்டால் நம் இருப்பு தண்ணீரைப் போலாகிவிடும். தண்ணீருக்குக் கடந்தகாலமில்லை. எதிர்காலமில்லை.

ஒரு மனிதனுக்கு எத்தனை பிள்ளைகள் என்று கேட்பது அவனை அவமதிப்பதாகப் பழங்குடியினர் கருதுகிறார்கள்.

முப்பது வருஷத்தில் அவர்களுக்கு ஒன்று முதல் ஒன்பது வரையான எண்களைக் கற்றுக் கொடுத்தேன். ஆனால் அவர்களால் ஜீரோவை கற்றுக் கொள்ள முடியவில்லை. இன்மையை எப்படி ஒரு எண்ணாக மாற்றினீர்கள் என பயந்து போனார்கள். அவர்களால் ஒரு போதும் ஜீரோவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை

நாம் நாகரீகமற்றவர்களாக நினைக்கும் பழங்குடி மக்கள் இயற்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். ஆனால் படித்த நாம் இயற்கையை விட்டு வெகுதொலைவில் இருப்பதோடு அதைப் புரிந்து கொள்ளவுமில்லை.

அவர்கள் மொழியைக் கொண்டு அதிகாரம் செலுத்த விரும்பவில்லை அதனால் அந்த மொழியில் காலவரிசையில்லை“.

••

0Shares
0