யாருக்கானது உலகம்

 “I like to use simple words, but in a complicated way.”

 Carol Ann Duffy

கரோல் ஆன டஃபி சமகாலப் பிரிட்டிஷ் கவிதைகளில் மிக முக்கியமானவர்

பிரபலமான ஆண்களைப் பற்றி அவரது மனைவியின் குரலால் சொல்லப்படும் கவிதைகளை எழுதியிருக்கிறார். The World’s Wife என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது.

கரோல் ஆன் டஃபி ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். 11 வயதில் கவிதைகளை எழுதத் துவங்கினார். தனது பதினாறு வயதில் லிவர்பூல் கவிஞர்களில் ஒருவரான அட்ரியன் ஹென்றியைச் சந்தித்தார், எட்டு ஆண்டுகள் அவர்களின் நட்பு தொடர்ந்தது. 1999 இல் கவிஞர் டெட் ஹியூஸின் மரணத்திற்குப் பிறகு பிரிட்டனின் Poet Laureateயாக நியமிக்கப்பட்டார். .

“கவிதையில் நான் உண்மைகளைக் கையாள்வதில்லை, உணர்ச்சிகளைக் கையாளுகிறேன் “என்கிறார் கரோல் ஆன் டஃபி

ஈசாப்பை உலகம் அறிந்த அளவிற்கு அவரது மனைவி பற்றி அறியாது. தொட்டதெல்லாம் பொன்னாகும் மைடாஸின் வரத்தைப் பற்றி அவரது மனைவி என்ன நினைக்கிறாள் என்று தெரியாது. சாத்தானின் மனைவி அவனது தீமைகள் பற்றி என்ன கருதுகிறாள். அதைத்தான் கரோல் ஆன் டஃபி கவிதையாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதைகள் இதுவரை நமக்குள் பதிந்து போன பிம்பங்களை உருமாற்றுகின்றன. திரைக்குப் பின்னால் உள்ள பெண்கள், சிம்மாசனத்திற்குப் பின்னால் இருந்த பெண்கள், வரலாற்றில் மறைந்து போன பெண்களைப் பற்றியே இக்கவிதைகள் பேசுகின்றன

சாத்தானின் மனைவி துவங்கி பிலாத்துவின் மனைவி, டார்வினின் மனைவி சிசிபஸின் மனைவி, ஈசாப்பின் மனைவி ,மைடாஸின் மனைவி, ஃபாஸ்ட்டின் மனைவி, ரிப் வான் விங்கிள் மனைவி, பிராய்டின் மனைவி. ஷேக்ஸ்பியரின் மனைவி கிங்காங்கின் மனைவி எனப் பல்வேறு பெண்களைப் பற்றிய இத் தொகுப்பு தனித்துவமானது

கரோல் ஆன் டஃபி தனது கவிதைகளில் ஒரு காலப்பயணியாகவே செயல்படுகிறார். அவர் தனது கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் உள்ளேயும் வெளியேயும் பனிச்சறுக்கு வீரர் போல எளிதாகச் சறுக்கிச் செல்கிறார். அவரது கற்பனையின் பாய்ச்சல் வசீகரமானது. மொழியின் மூலம் அர்த்தமும் யதார்த்தமும் கட்டமைக்கப்படும் விதத்தை ஆராய்கிறார். வெவ்வேறு குரல்கள் மற்றும் வெவ்வேறு அடையாளங்களை ஆராய்வதில் அவரது கவனம் குவிந்துள்ளது.

நான் சுருங்கிக் கொண்டேன்

ஒரு பறவை அளவு

ஒரு மனிதனின் கையில்

இனிதினும் இனிய, சிறிய பாடலை

நான் பாடினேன்

அவனது கைகளின் அழுத்தத்தை உணரும் வரை

என ஒரு கவிதையைத் துவக்குகிறார்.

தன்னைப் புரிந்து கொள்ளாத ஆணின் அதிகாரத்தையே அவரது கவிதைகள் சுட்டுகின்றன.

அப்போது என் நாக்கு சுடராக இருந்தது

என் முத்தங்கள் எரிந்தன

என்ற வரிகளில் அவரது கவித்துவம் பிரகாசிக்கிறது.

தனது கவிதைகளுக்கு அடித்தளம் குழந்தைப் பருவம் என்றும் அது என்றும் பசுமையாக இருக்கும் இல்லமாகயிருக்கிறது. அங்கிருந்தே தனது கவிதைகள் பிறக்கின்றன என்கிறார்

மனிதனுக்குள் ஒருவகை இசை எப்போதுமிருக்கிறது. அதை உலகிற்குக் கேட்கச் செய்வதே கவிதை எனும் கரோல் ஆன் டஃபி கனமான, சூடான தேநீர் கெட்டிலை தூக்கி அதிலிருந்து போதுமான அளவிற்குத் தேநீரை டீக்கோப்பையில் ஊற்றுவது போன்றதே தனது கவிதை செயல்பாடும் என்கிறார்.

உலகம் நமக்குக் காட்டியது போலப் புகழ்பெற்ற மனிதர்களின் வாழ்க்கை அமைந்திருக்கவில்லை என்பதையே இந்தக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. மைடாஸின் மனைவி தொடுதலை விடத் தங்கம் ஒன்றும் அரிய விஷயமில்லையே என்கிறாள். சாத்தானின் மனைவி தனக்கு மீட்சியே இல்லை என்கிறார். லாசரஸின் மனைவி தன் கணவன் இறந்த துக்கத்தை அனுஷ்டிக்கும் போது இறந்த மனிதனை மீண்டும் உயிரோடு வரச் செய்யும் இயேசுவின் முடிவு அவளுக்கு எப்படியிருந்திருக்கும். உயிர்த்தெழுந்த ஒரு மனிதனின் மனைவி இத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பை எவ்வாறு எதிர்கொள்வாள்? என்பதைக் கவிதை பேசுகிறது.

கரோல் ஆன் டஃபி ஒரு நாடகாசிரியர் என்பதால் இந்தக் கவிதைகளைத் தனிமொழி போலவே எழுதியிருக்கிறார்.

“எழுத்தை விடவும் பேச்சு பழமையானது, பேச்சைப் போலவே கவிதையும் பழமையானது. கவிதை என்பது ஒரு பழங்காலத் தகவல்தொடர்பு முறை

வார்த்தைகளின் முழுக் கனத்தையும் சுவையையும் வரிகளின் ஓட்டத்தையும் பெறக் கவிதைகளை உரத்து வாசித்துக் கேட்க வேண்டும். ஆகவே நான் மேடைகளில் கவிதை வாசிக்கிறேன். அதிலிருந்து உடலும் மனமும் ஒரு சேர புத்துணர்வு அடைவதை உணர்ந்திருக்கிறேன்

நமது உடல் இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது போல, மனம் கவிதைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது“ என்கிறார் ஆன் டஃபி

350 வருஷங்களாக ஆண்கள் மட்டுமே வகித்து வந்த Poet Laureate எனும் அங்கீகாரத்தைப் பெற்ற முதல் பெண்கவியாக இவரைக் கொண்டாடுகிறார்கள்.

0Shares
0