சூழலியல் சார்ந்த கருத்துகளை முதன்மைப்படுத்தி மண்புழு என்றொரு அழகிய சிற்றிதழை திருவண்ணாமலையில் செயல்படும் குக்கூ அமைப்பு துவக்கியுள்ளது
குக்கூ, குழந்தைகளின் படைப்பாளுமையை உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரிய அமைப்பாகும்.
மசானபு புகோகோவின் இயற்கைக்குத் திரும்பும் பாதை என்ற நூலை டாக்டர் வெ.ஜீவானந்தம் அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார், அந்த நூலை தமிழ்நாடு பசுமை இயக்கத்துடன் இணைந்து குக்கூ விநியோகம் செய்கிறார்கள்
இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் குழந்தைகளின் படைப்புலகம் சார்ந்த இதழாக மண்புழு உருவாக்கபட்டுள்ளதாக குக்கூ தெரிவிக்கிறது,
முதல் இதழில் நக்கீரன் எழுதிய கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் என்ற சிறப்பான சூழலியல் கட்டுரை இடம் பெற்றுள்ளது, அத்துடன் ஜெய்சிங்கின் அற்புதமான புகைப்படங்கள் இணைக்கபட்டிருக்கின்றன, இதழ் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கபட்டிருக்கிறது.
நீர்பறவைகள்
போகின்றன வருகின்றன
அவற்றின் தடங்கள் மறைகின்றன
ஆனாலும் அவை
தம் பாதையை மறப்பதில்லை
ஒரு போதும் .
என்ற எய்ஹெய் டோகனின் ஜென் கவிதை இதழின் கடைசிப்பக்கத்தில் காணப்படுகிறது, அது இதழின் தனித்துவத்தையும் குறிப்பிடுவது போலவே உள்ளது
தொடர்பு முகவரி
குக்கூ குழந்தைகளுக்கான வெளி
25, மாந்தோப்பு
ப.உ.ச. நகர், போளுர் சாலை
திருவண்ணாமலை- 1
பேச \ 8056205053
…