இரண்டு பார்வைகள்

சமீபத்தில் வெளியான எனது சிறுகதைகள் முகமது அலியின் கையெழுத்து, இரவுக்காவலாளியின் தனிமை குறித்து வெளியான விமர்சனக்குறிப்புகள்

•••

முகமது அலியின் கையெழுத்து

கோ.புண்ணியவான்

(மலேசியத் தமிழ் எழுத்தாளர் கோ.புண்ணியவான் எனது சிறுகதை குறித்து எழுதியுள்ள விமர்சனக்குறிப்பு)

••

வாசிப்பின்பத்தை நல்கிய நல்ல சிறுகதை. முகம்மது அலியின் கையெழுத்து. உள்ளபடியே பிழைப்புவாதிகள் தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பற்றியே கவலைப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்து கழித்துவிடுவார்கள்.. கலையின் மகத்துவம் பற்றியோ ரசிகர்களை ஆர்வத்தோடு வைத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் பற்றியோ சராசரி மனிதர்களுக்கு எந்தவித அக்கறையும் கிடையாது. முகமது அலியின் கையெழுத்தை விற்க வந்த அந்த ஆளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்,

முகம்மது அலியிடம் கையெழுத்து வாங்கிய அவருடைய அப்பா இருந்திருந்தால் அதனைக் கிடைத்தற்கரிய பொக்கிஷம்போலப் பாதுகாப்பாக வைத்திருந்திருப்பார். ஆனால் அவர் மகனுக்கோ வயிற்றுக்காக மட்டும் ஓடும் சாதாரண மனிதர்களுக் கோ , உலகப் பிரசித்தி பெற்ற நட்சத்திரங்கள் பற்றியோ கிஞ்சிற்றும் அக்கறை இல்லை என்பதைக் கதை சொல்லிச்செல்கிறது..

கலைக்கும் அதே நிலைதான். , முகம்மது அலியை ஒரு கலைஞனாகப் பார்க்கத் தவறிய இந்த மனிதர்கள் வாழும் வாழ்க்கையைப் பற்றி நினைக்கும்போது கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது. இவ்வாறான மனிதர்களால்தான் எல்லாவிதக் கலைகளும் மதிப்பிழந்து நிற்கிறது. முகம்மது அலியின் கையெழுத்து மேலை நாடுகளில் என்ன விலைக்குப் போயிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

கீழை தேச மனிதர்களுக்கு அந்தச் சாதனையை மதிக்கத்தெரியவில்லை என்று நினைக்கும்போது வலிக்கத்தான் செய்கிறது. இங்கே வாழ்க்கை என்பதே வயிற்றுப்பாடுதான் என்ற குறுகிய மனப்பான்மை இருக்கும் வரை சாதனையை / கலையைக் காலுக்குக் கீழேதான் வைத்திருப்பார்கள். சாதனையாளரை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை ஒப்பீட்டளவில் வைத்துப் பார்க்கிறேன். இதில் மேலை தேசத்தவர் கலையை/ விளையாட்டை ஆராதிக்கும் போக்கு நமக்கு எப்போது கைவரும் என்றும் தெரியவில்லை.

•••

“இரவுக்காவலாளியின் தனிமை” சிறுகதையினை முன்வைத்து…

ந. பிரியா சபாபதி

‘இரவு’ என்பது, அனைவருக்கும் நிசப்தமானது அல்ல. அது பலருக்கும் பலவிதமான உள்ளோசைகளை எழுதிப்பிக்கொண்டே இருப்பதாகும். இரவு காவலாளிக்கு இரவானது இரவல்ல. அவர்களுக்குப் பரிதியின் நிழல் படாத மற்றொரு இடமாகும்.

இந்தச் சிறுகதை நிகழும் களம் தேவாலயம். எழுத்தாளர் தமது எழுத்துத் தூரிகையால் வாசகர் நேரில் தேவாலயத்துக்குள் சென்று பார்த்து போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

ஆழ்கடல் அதிசயம் என்பார்களே அது போல் மனிதர்களின் மனமானது பல அதிசயங்களை உடையது. அது மட்டும் அல்ல, பல இரகசியங்களையும் அது உள்ளடக்கியதாகும்.

நாம் நம் ஆழ் மனத்தில் உள்ளவற்றை உரியவர்களிடம் பகிர்ந்தாலும் யாருக்கும் சொல்லாத புதையல் ஒன்று நம் மனத்தின் அடியில் புதைந்து வளர்ந்து கொண்டே இருக்கும். அதை வளர விடாமல் பக்குவமாய்ப் பார்த்துக் கொண்டிருப்போம். இதனை எழுத்தாளர், “ஆணும் பெண்ணும் சில ரகசியங்களைக் குடும்பம் அறியாமல் கடைசிவரை ஒளித்துக் கொள்கிறார்கள். அந்த ரகசிய செடி இரவில் மட்டுமே மலர்கிறது” என்கிறார்.

இரவு காவலர்களின் இரவு வாழ்க்கையையும் அவர்களுக்குள் ஊசலாடிக் கொண்டிருக்கும் நட்பு, காதல், துயரம் எனப் பலவற்றையும் இந்தச் சிறுகதையில் நுண்சித்திரங்களாக எழுத்தில் வடித்துள்ளார் எஸ்.ரா.

‘ஆண்கள் அழக் கூடாது. துணிவுடன் வாழ வேண்டும்’…. இன்ன பிறவற்றையும் இச்சமுதாயம் பெரிய சாக்குப் பைகளில் கட்டி அவர்களின் தலையில் சுமத்தியுள்ளது. ஆண்கள் அதைச் சுமந்தே தீரவேண்டிய நிலையில் உள்ளனர்.

‘அவர்கள் இந்தச் சுமையை இறக்கி வைக்கவும் கூடாது, சுமையைத் தூக்கிச் சுமக்க முடியவில்லையே என்று நினைக்கவும் கூடாது. வருந்தி அழவும் கூடாது.’ என்று சமுதாயத்தால் வலியுறுத்தப்படுகின்றனர். ஆண்களின் வாழ்வானது எளிதானதல்ல.

ஆண்கள் தனித்திருக்கிறார்கள். தங்களை விலக்கியும் அவர்கள் தனித்த தனிமையில் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் தெரியாமல் அழத்தான் செய்கிறார்கள். ஆணின் கண்ணீரைப் பார்க்கும் பெண் நிச்சயமாக அந்த ஆணின் ஆழ்மனத்தில் குடியிருப்பவளாகத்தான் இருப்பாள். இந்த உண்மையை மறைமுகமாக, “ஆண்களும் அழ விரும்புகிறார்கள். ஆனால் யார் முன்பு எதற்காக என்பதில் தான் மாறுபாடு இருக்கிறது” என்று சுட்டியுள்ளார் எஸ்.ரா. துயரங்களின் நினைவுப் பயணமாகவே இக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

••

0Shares
0