அமெரிக்கன் கிளாசிசிஸ்ட்: தி லைஃப் அண்ட் லவ்ஸ் ஆஃப் எடித் ஹாமில்டன் என்ற புத்தகத்தை விக்டோரியா ஹவுஸ்மேன் எழுதியிருக்கிறார்.
இது எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஹாமில்டனின் பால்ய நினைவுகள், அவரது பெற்றோர். வளர்ந்த சூழல் மற்றும் கிரேக்க இலக்கியங்கள், லத்தீன் மொழி மீது கொண்ட ஆர்வம் குறித்து விரிவாகப் பேசுகிறது
குடும்பச் சூழல் காரணமாகப் படித்து முடித்தவுடனே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது தந்தை ஒரு குடிகாரர். தாயும் சகோதரியும் நோயாளிகள். ஆசிரியராகப் பணியைத் துவங்கி ஹாமில்டன் தனது அயராத உழைப்பால் தலைமை ஆசிரியராக உயர்வு பெற்றார். 25 ஆண்டுகள் அந்தப் பணியில் நீடித்திருக்கிறார். அதன் பின்பு விருப்ப ஒய்வு பெற்றுக் கொண்டு தனக்கு விருப்பமான கிரேக்க இலக்கியங்களைத் தொன்மங்களை மொழியாக்கம் செய்யத் துவங்கினார்.
வாழ்க்கை எவ்வளவு கசப்பானதும் இனிமையானது என்பதைக் கிரேக்கர்கள் முழுமையாக அறிந்திருந்தனர். மகிழ்ச்சியும் துக்கமும் கிரேக்க இலக்கியத்தில் கைகோர்த்து நிற்கின்றன, ஆனால் அதில் எந்த முரண்பாடும் இல்லை. கிரேக்கர்கள் ஒரு போதும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது என்கிறார் ஹாமில்டன்.
எடித் ஹாமில்டன் தனது அறுபத்தி இரண்டு வயதில் தான் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார்.
பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய எடித் கிரேக்க, ரோமானிய தொன்மங்கள். இலக்கியங்கள் குறித்து ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது மொழியாக்கத்தில் வெளியான கிரேக்க வரலாறு மற்றும் தொன்மங்கள் பற்றிய புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகியுள்ளன.
கிரேக்கத் சிந்தனையாளர்கள் மற்றும் கடவுளரின் கதைகளை இவர் சமகால அமெரிக்க வாழ்க்கையோடு அரசியலோடு தொடர்பு படுத்தி விவாதித்தார். கிரேக்க இலக்கியங்களிடமிருந்து இன்றைய தலைமுறை என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்தார்.
சிறுவயதிலிருந்தே லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளைப் படித்திருந்த ஹாமில்டன். தனது நூல்களுக்கான ஆய்வுகளுக்காக. ஹாமில்டன் நிறையப் பயணம் செய்திருக்கிறார்,
இவரது பங்களிப்பிற்காக ஏதென்ஸின் கௌரவக் குடிமகனாகக் கௌரவிக்கபட்டார்.
இவரது The Greek Way ல் பண்டைய கிரேக்கர்களிளை உலகின் முதல் நவீன குடிமக்களாகக் குறிப்பிடுகிறார். அவர்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் உலகம் பற்றிய புரிதல்களை வியந்து எழுதியிருக்கிறார்.
கிரேக்க செவ்வியல் இலக்கியங்களை ஆழ்ந்து கற்க வேண்டும் என்பதை எடித் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அதற்காகக் காரணங்களை அவர் தெளிவாகப் பட்டியலிடுகிறார்.
கிரேக்க கடவுள்கள் பற்றிய கதைகளை வெறும் தொன்மக்கதைகளாகப் பாராமல் சமகாலத்தில் நடப்பது போல அதிகாரத்திற்கு எதிரான செயல்கள் மற்றும் அடிபணிய மறுத்த நாயகர்களின் கதைகளாக அடையாளப்படுத்தினார். அதன் காரணமாகவே அமெரிக்காவில் பலராலும் விரும்பி வாசிக்கபட்டார்.
கிரேக்க சிந்தனையாளர்கள் மற்றும் செவ்வியல் எழுத்துகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு ஹாமில்டன் நல்ல துவக்கமாக இருப்பார் என்பதே நிஜம்.