நகுலன் “எட்டு வயது பெண் குழந்தையும், நவீன மலையாளக் கவிதையும்” என்றொரு கதை எழுதியிருக்கிறார். இந்தக் கதைஅவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் சிமி என்ற சிறுமியைப் பற்றியது. ஒரு நாள் அவள் நகுலனிடம் படிக்க ஏதாவது புத்தகம் வேண்டும் என்று கேட்கிறாள். அவர் குஞ்சுண்ணி என்ற மலையாளக் கவிஞரின் புத்தகத்தைத் தருகிறார்.
மறுநாள் அந்தக் கவிதைகளை வாசித்து முடித்துவிட்டு அந்தச் சிறுமி ஒரு கவிதை எழுதிக் கொண்டு வருகிறாள்
“சிமி
குமி
உமிக்கரி” என்ற அந்தக் கவிதையை வாசித்துச் சந்தோஷப்படுகிறார். அது குஞ்சுண்ணி கவிதை போலவே எழுதப்பட்டிருக்கிறது. அதே சொற்சிக்கனம். சந்தம். கவிதையில் வரும் கேலியான குரல். அந்தச் சிறுமியை பாராட்டும் நகுலன்.”கவிதை என்பது சப்த ஒழுங்கால் உருவாவது என்று சிறுமிக்குப் புரிந்திருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.
கவிஞர் ஆசையின் மகன் மகிழ் ஆதன் எழுதிய நான் தான் உலகத்தை வரைந்தேன் என்ற சிறார் கவிதை நூலை வாசித்தபோது அதே சந்தோஷத்தை அடைந்தேன்.
மகிழ் ஆதனுக்கு இப்போது ஒன்பது வயது. நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறான். அவனது தந்தை ஆசை தமிழின் முக்கியக் கவிஞர். சிறந்த பத்திரிக்கையாளர்.

பள்ளி வயதில் பலரும் பாடப்புத்தகங்களில் உள்ள கவிதைகளை மனப்பாடம் செய்து எழுதவே தடுமாறும் போது மகிழ் ஆதன் தானே புனைந்து அற்புதமான கவிதைகளை எழுதியிருக்கிறான். அவனது 75 கவிதைகளை ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். வானம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
ஆதனிடம் இயல்பாகக் கவித்துவ உணர்வு பீறிடுகிறது. அவன் சொற்களை எப்படிக் கையாளுவது என்று அறிந்து கொண்டிருக்கிறான். அவனது உலகில் பறவைகளும் வானமும் ஒளியும் மழைத்துளியும் பூக்களும் தானிருக்கின்றன. அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் எதுவுமில்லை. கண்ணாடிக் கோளம் ஒன்றில் வசிப்பவன் போல தன்னை உணருகிறான். குட்டி இளவரசன் புதிய கிரகத்தை கண்டுவியப்பதை போலவே ஆதனும் வியக்கிறான்.

பெருநகரங்களில் வசிக்கும் குழந்தைகளைப் பற்றி எப்போதுமே நான் கவலை கொள்ளுவேன். அவர்கள் இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் ஆதனைப் போன்ற சிறுவர்கள் இந்தப் பெருநகர வானில் பறக்கும் பறவைகளை, மழையை, பூக்களை, சூரியனை, நிலவை, மரங்களை நேசிக்கிறார்கள். ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம் ஆதனின் பெற்றோர்கள். அவர்கள் அந்த ஜன்னலைத் திறந்துவிட்டிருக்கிறார்கள். பறவைகளை, வானை, மழையின் அற்புதத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அவனுடன் தொடர்ந்து உரையாடியிருக்கிறார்கள். ஏழெட்டு வயதில் இசை கற்றுக் கொள்ளப் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆனால் மகனைக் கவிதையுலகிற்கு அறிமுகம் செய்து அவனுக்குள்ளிருந்த கவித்துவத்தினை வெளிப்படச் செய்யும் பெற்றோர்கள் குறைவே.
அந்த வகையில் ஆசையும் அவரது துணைவியார் சிந்துவும் பாராட்டிற்குரியவர்கள். இசைக்கருவி இல்லாமல் சொற்களைக் கொண்டே இசையை உருவாக்குவது தானே கவிதை.
ஆதனின் உலகில் கோபமேயில்லை. அது ஒரு தூய உலகம். அவனது அப்பா அம்மா தம்பி அவன் நால்வர் மட்டுமேயான சிறிய உலகம். இந்தச் சிறிய உலகத்திற்குள் இருந்தபடியே வானம், சூரியன், நட்சத்திரம், மழை வெளிச்சம் இருள் என இயங்கும் பிரபஞ்சத்தினை வரவேற்று நடனமாடுகிறான் ஆதன். வானைத் தொடப் பறக்கும் பட்டத்தைப் போலவே ஆதனும் செயல்படுகிறான்.
அவன் கவித்துவமான சொற்களைத் தேர்வு செய்யவில்லை. எளிய சொற்களை நீர்க்குமிழிகளைப் போல மாற்றிப் பறக்கவிடுகிறான். உண்மையில் அவனது விளையாட்டு போலத் தான் கவிதையும் செயல்படுகிறது. காற்று அடைக்கபட்டவுடன் பலூனுக்கு ஒரு வசீகரம் உருவாவது போலவே கவிதையில் இடம்பெற்றவுடன் எளிய சொற்கள் அழகாகிவிடுகின்றன.
மகிழ் ஆதனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.
மகிழ் நிறைய எழுது. உலகை வண்ணமாக்கு.
ஒரு கவிஞனாக வளர்வது தனித்துவமானது.
••
என் தேன்சிட்டை
என் மூக்கில் உட்கார்ந்து
கவிதை சொல்ல வைப்பேன்
அந்தக் கவிதை
என் முகத்திலிருந்து
பளிச்சின்னு தெரிகிறது
••
ரோஜாப்பூ
என்னை மோந்து பார்த்து
மோந்து பார்த்து
பார்த்தே விட்டது
••
என் வெயில்
என் முகத்திலே பட்டு
நினைவாய் ஆகிறது
••
என் பட்டத்தில்
நான் பறப்பேன்
நான் பறக்குறதை
அந்தக் காற்று கண்டுபிடித்து
என்னைக் கட்டிப்பிடிக்கும்
••
என் நிழல்
எப்படி வருது தெரியுமா
என் மனசாலே வருது
என் இருட்டிலே
பிறந்தது அது
வடிவம் இல்லை
அது பிரகாசம்
••
கண்ணாடி ஒளி
என் மேலே பட்டு
ஒரு அற்புதமான ஒளி வரும்
அந்த ஒளி
என்னை வெயிலாக வரையும்
••
நான் தான்
உலகத்தை வரைந்தேன்
வானத்தில் மிதந்தேன்
வானத்தை நான்
கையில் பிடித்துக் கூட்டிச் சென்றேன்
வானம் ன்னைக்
காற்றால் கட்டிப் போட்டது
கட்டுப் போடும் நேரத்தில்
சூரியன் என்னை வரைந்தது
••