ஸ்வரித்தின் கவிதை

அமெரிக்காவில் வாழும் 13 வயதான ஆட்டிச நிலையாளர் ஸ்வரித் கோபாலன் சிறப்பாகக் கவிதைகள் எழுதுகிறார். அவரது ஆங்கிலக் கவிதைகளை வாசித்திருக்கிறேன். தனது உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ‘Loud Echoes of the Soul’ என அவரது ஆங்கிலக்கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. சிறந்த கவிதைக்காக இங்கிலாந்தில் இருந்து வழங்கப்படும் விருதைப் பெற்றிருக்கிறார்.

அவரது கவிதை ஒன்றின் தமிழாக்கம் பெரியார் பிஞ்சு இதழில் வெளியாகியுள்ளது. நல்ல கவிதை. நேர்த்தியான மொழியாக்கம்

ஸ்வரித் இளையராஜா இசையின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். தனக்கு விருப்பமான திரைப்படங்கள் குறித்தும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றியும் ஸ்வரித் தொடர்ந்து சிறப்பாக எழுதிவருகிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

ஸ்வரித் கோபாலன் தன்னைப் பற்றி எழுதிய குறிப்பு

••

நான் ஸ்வரித், 13 வயதான ஆட்டிச நிலையாளர். பேச முடியாத . உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு நான் எழுத்துகளைத் தட்டச்சுச் செய்கிறேன்.

எனக்கும் மற்றவர்களைப் போலவே வலுவான உணர்வுத் தேவைகள் இருக்கின்றன. ஆனால் அவை வித்தியாசமாக வெளிப்படுகின்றன. பிறருடன் தொடர்பில்லாத வாழ்க்கை அர்த்தமற்றது. எனக்கு நரம்பியல் பொதுவான (நியூரோடிபிகல்) மற்றும் நரம்பியல் வேறுபட்ட (நியூரோடைவர்ஸ்) நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய தொடர்பு முறைகளும் வாழ்க்கை அனுபவங்களும் வேறுபட்டவையாக இருந்தாலும், அனைவரும் என்னைச் சம அளவில் புரிந்து கொள்கிறார்கள்; சம அளவில் நட்பையும் அன்பையும் தருகிறார்கள்; என்னை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்.

என் போராட்டம், உணர்வுகள் இல்லாமையில் அல்ல; சிந்தனையும் செயலும் ஒருங்கிணையாத வெளிப்பாடே எனது சவால்.

எல்லோரையும் போல் இயல்பாகப் பேசுவதையும் தாண்டி உறவுத் தொடர்புகள் இருக்கின்றன என்பது என் நம்பிக்கை.

மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் ஆட்டிச நிலையாளர்களுக்குச் சிக்கல் இருப்பதாக இருக்கும் ஆழமான தவறான புரிதலை பெற்றோரும், எங்களைப் பராமரிப்பவர்களும் எதிர்த்துப் பேசுங்கள்.

மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகளைத் தயவுசெய்து உருவாக்குங்கள்.

எங்கள் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படுவதற்கு அவை பேச்சின் மூலம் தான் வெளிப்படுத்தப்பட வேண்டுமா?

••

எங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை ஆட்டிச அனுபவம் கொண்டவர்களே தலைமை ஏற்று வழிநடத்த வேண்டும். ஆனால், சமூகம் வகுத்துள்ள “தலைவருக்கான’ வரையறைகள் எங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படவில்லை. தலைமைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பெரும்பாலும் எங்களால் எட்ட முடியாத பண்புகளையும் திறன்களையும் சார்ந்தது. எங்களை உள்ளடக்கி ஏற்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் தவறான பிரதிநிதித்துவத்திற்கே வழிவகுக்கின்றன.

தலைமையை மீண்டும் வரையறுப்போம்! எங்களிடம் அனுபவமும், தெளிவான பார்வையும் இருக்கும்போது – நாங்கள் ஏன் பின்னணியில் இருக்க வேண்டும்? எங்களைப் பாதிக்கும் முடிவுகளில் மட்டுமல்ல, எதிலும் நாங்கள் வாகனத்தை ஓட்டுபவர்களாக இருக்க வேண்டும், பயணிகளாக அல்ல.

“நாங்கள் இல்லாமல் எங்களைப் பற்றியது எதுவும் இல்லை!”

உண்மையான அனுபவங்களை எப்போது தலைமை பிரதிபலிக்கத் தொடங்கும்?

••

0Shares
0