அன்பு மொழி

நேற்று எனது பிறந்த நாள்.

இந்நாளில் எனக்குத் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் முகநூலிலும் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள். அன்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் குடும்பத்தில் ஒருவரது பிறந்த நாளைக் கொண்டாடுவது போல வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உங்கள் நேசமும் வாழ்த்துக்களும் தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றன. இத்தனை நல்ல உள்ளங்களின் அன்பைப் பெற்றிருக்கிறேன் என்பது எனது பேறு.

அயல்நாட்டிலிருந்து மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அழைத்துப் பேசி வாழ்த்து தெரிவித்தார்கள். அலைபேசித் தொடர்பு சீராக இல்லாத காரணத்தால் சிலரது அழைப்பை ஏற்கமுடியவில்லை. உங்கள் அழைப்பினையே வாழ்த்தாக எண்ணிக் கொள்கிறேன். காலை ஐந்து மணி துவங்கி இரவு பனிரெண்டு வரை மின்னஞ்சலில் வாழ்த்துச் செய்தி வந்தபடியே இருந்தது. வாட்ஸ்அப்பிலும் முகநூலிலும் நிறைய வாழ்த்துச் செய்திகள்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன். வண்ணதாசன். கலாப்ரியா துவங்கி இலங்கையிலுள்ள சாந்தன். கருணகாரன் வரை முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அவர்களுக்கு என் அன்பும் தீராத நன்றிகளும்.

எனது குடும்பம் என்பது ஆயிரமாயிரம் அன்பு உள்ளங்கள் தான்.

தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள். அரசியல்பிரமுகர்கள். திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள். மருத்துவர்கள். நீதியரசர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள். கல்வியாளர்கள். பதிப்பாளர்கள். என அவ்வளவு பேரும் வாழ்த்து சொன்னது எழுத்தையும் எழுத்தாளனையும் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே நினைக்கிறேன்.

வழக்கமாகப் பிறந்தநாளை ஒட்டிச் சிறிய சந்திப்பு நடைபெறும். நேற்று பெருந்தொற்று முடக்கம் காரணமாக அதை ஏற்பாடு செய்ய இயலவில்லை. ஆனாலும் நெருக்கமான நண்பர்கள் என்னைச் சந்திக்க நேரில் வந்திருந்தார்கள். அவர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.

நேற்றைய நாளை மிகுந்த கொண்டாட்டமாக்கிய அனைவருககும் இதயப்பூர்வமான நன்றிகள்

••

0Shares
0