இசையே வாழ்க்கை

நகலிசைக் கலைஞன் என்ற நூலை நண்பர் ஒருவர் நேற்று பரிசாக அனுப்பியிருந்தார். அதை நேற்றிரவு வாசித்தேன்

எங்கள் பகுதியில் ஊருக்கு ஊர் பொருட்காட்சி நடைபெறும். அதன் சிறப்பே மிகச்சிறந்த மெல்லிசை நிகழ்ச்சிகள்.
எம்.எஸ்.வி. சங்கர் கணேஷ், கங்கை அமரன் துவங்கி உள்ளுர் கலைஞர்கள் வரை பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரபலமான பாடகர்களும் வருதுவண்டு. ஏழு மணிக்கு துவங்கி இரவு பனிரெண்டரை வரை கச்சேரி நடைபெறும். சில நாட்கள் கச்சேரி நீண்டு மூன்று மணியாகியிருக்கிறது. மக்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். புகழ்பெற்ற பாடகர்களின் குரலை அப்படியே பிரதிபலிக்கும் நகல் குரல்களைக் கேட்கும் போது வியப்பாக இருக்கும். அதில் சிலர் அதே பாவனைகள். கையசைப்புகள் வேறு செய்வார்கள். நேயர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்களை மறுக்காமல் பாடுவார்கள். இசை நிகழ்ச்சிகளுக்குத் தான் அதிகப் பட்ச கூட்டமிருக்கும்.
இனிய குரலின் வழியே நம்மை மயக்கும் அந்த மனிதர்களின் வாழ்க்கை பற்றியோ, சுகதுக்கங்கள் பற்றியோ நாம் அறிந்து கொள்வதேயில்லை. இசை தான் அவர்களின் உலகம். பாடுவதற்காக அவர்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். தாங்கள் பிரபலமான பாடகர்களுக்குக் குறைந்தவர்களில்லை என்று ஒவ்வொரு நாளும் மேடையிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
என் கல்லூரி நண்பன் ஜான் கிறிஸ்தோபர் சிறந்த கிதார் இசைக்கலைஞன். அவனும் அவனது சகோதரர்களும் அற்புதமாக கிதார் இசைப்பார்கள். வீட்டில் இரண்டு மூன்று கிதார்கள் இருக்கும்.
கிறிஸ்துவ இசை நிகழ்ச்சிகளில் மட்டும் தான் கலந்து கொள்வார்கள். அப்படி ஒரு இசைநிகழ்விற்கு என்னையும் அழைத்துப் போயிருந்தான் கிறிஸ்தோபர். மறக்கமுடியாத அனுபவமது.
அவனது வீட்டிற்குப் போனால் சில நேரம்  விருப்பமான சினிமா பாடலையும் வாசித்துக் காட்டுவான். பெரிய இசைக்கலைஞராக வருவான் என நினைத்த கிறிஸ்தோபர் சமய பிரச்சாரகராக மாறி இன்று முழுநேர இறைஊழியம் ஆற்றி வருகிறார். காலம் தான் எத்தனை விசித்திரமானது.
தமிழில் நினைத்தாலே இனிக்கும் தான் மெல்லிசை குழுவை பற்றிய சுவாரஸ்யமான திரைப்படம். விக்ரமன் படத்திலும் மெல்லிசை குழு இடம்பெற்றிருக்கிறது ஆனா மெலோ டிராமா அதிகம்.
எழுதப்படாத அந்த மெல்லிசை குழுவின் உலகை ஜான் சுந்தர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
கவிஞரும் பாடகரும் இசைக்குழு ஒன்றை நடத்தி வருபவருமான ஜான் சுந்தர், மெல்லிசை குழுவின் அனுபவங்களை மிகச்சிறப்பான கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். நினைவில் எழும் சங்கீதம் போல இந்தத் தொகுப்பு மிகுந்த கிளர்ச்சியூட்டியது. மெல்லிசை கலைஞர்களின் உலகை மிக யதார்த்தமாக, நிஜமாக எழுதியிருக்கிறார். டேனியலைப் பற்றிய கட்டுரை  அற்புதம் சந்தோஷமும் கேலியும் வலியும் சோகமும் கலந்த மறக்கமுடியாத அனுபவங்கள். இசையைப் பற்றிய புத்தகம் என்பதால் எழுத்தும் இனிமையோடிருக்கிறது.
வாழ்த்துகள் ஜான் சுந்தர்
••
0Shares
0