.
நண்பர் ஆம்பூர் அசோகன் ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய இலக்கியங்களை மிகவும் விரும்பிப் படிக்கக்கூடியவர். சமீபத்தில் அவர் எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார்
What’s to Become of the Boy? Or, Something to Do with Books என்ற அந்தப் புத்தகம் ஜெர்மன் எழுத்தாளர் ஹென்ரிக் போலின் இளமைப்பருவம் பற்றியது. சுயசரிதையாக மட்டுமின்றி ஹிட்லரின் எழுச்சி மற்றும் நாஜிகளின் ஆதிக்கம் வளர்ந்த விதம் பற்றியும் எழுதியிருக்கிறார்.
82 பக்கங்களே கொண்ட சிறிய நூல். இதை வாசிப்பதன் வழியே ‘ஹென்ரிக் போலின் படைப்புகளைப் புரிந்து கொள்ள முடியும்.
ஹென்ரிக் போல் 1972 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர் ஜெர்மனியின் கொலோனிலுள்ள ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் .
1981 இல் எழுதப்பட்ட இந்த நினைவுக்குறிப்புகள் பெரிதும் ஹென்ரிக் போலின் பள்ளி நாட்களைப் பற்றியது,
நாஜிகளால் புத்தகங்கள் எரிக்கப்பட்ட நிகழ்வைப் பற்றிய அவரது குறிப்பு முக்கியமானது. நூலகங்களிலும் தனிநபர் சேமிப்பிலுமிருந்து அரிய இலக்கிய நூல்களைப் பறிமுதல் செய்து கொண்டுவந்து பொது இடத்தில் வைத்துத் தீயிட்டதை அவர் கண்ணால் பார்த்திருக்கிறார். புத்தகங்களின் சாம்பல் காற்றில் பறந்ததைப் பற்றி அவர் எழுதியிருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியது 1930களில் ஹிட்லரின் இளைஞர் படையில் சேர போல் மறுத்துவிட்டார்.
கொலோன் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் இலக்கியத்தில் ஆய்வு செய்வதற்கு முன்பாக அவர் சில காலம் ஒரு புத்தக விற்பனையாளரிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்
பழைய புத்தகக் கடைகளில் மலிவான விலையில் கிடைத்த பால்சாக் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகங்கள் பற்றியும். அந்தக் காலத் திரையரங்குகள். அதன் கட்டண விபரம்.கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட சிகரெட்டுகள் பற்றியும் எழுதியிருக்கிறார்
ஹிட்லரால் ஒரு போதும் வெற்றியடைய முடியாது என்று அவரது அம்மா கருதினார். ஹிட்லர் ஒரு மோசமான மனிதர் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். நல்லவேளை ஹிட்லரின் எழுச்சியைக் காண அவர் உயிரோடில்லை என்று போல் எழுதியிருக்கிறார்
.1930 களின் பிற்பகுதியில் ஜெர்மன் பள்ளிகள் முழுமையாக நாஜிகளின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. ஆகவே மாணவர்கள் ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்திருக்கிறார்., பள்ளி அதிகாரிகள் பாசிச எதிர்ப்பாளராகத் தங்களைக் காட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள். பயிற்சிகள். ஆசிரியர்கள் பற்றிய நினைவுகளையும் மெல்லிய கேலியோடு பகிர்ந்திருக்கிறார்.
அவரது குடும்பம் நாஜி எதிர்ப்புக் கருத்துக் கொண்டிருந்த போதும் தங்களை எதிர்ப்பாளராகக் காட்டிக் கொள்ளவில்லை. ஹிட்லரின் எழுச்சிக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறிப் போவதைப்பற்றி அவர்கள் கற்பனை கூடச் செய்ததில்லை. பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலை குறித்தே அவரது பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள். ஹென்ரிக் போலின் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பிவிடலாம் என்று கூடப் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால் அப்படி நடைபெறவில்லை.
ஜெர்மன் ராணுவத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய போல் போர்கைதியாக அமெரிக்க ராணுவத்திடம் பிடிபட்டு சிறை வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்.
நாஜி ஆட்சி துர்கனவு போலவே இருந்தது. தன் கண்முன்னே தனது நண்பர்கள். உறவினர்கள் மறைந்து போனதன் துயரமே தன்னை எழுத வைத்தது என்கிறார்.
அவரது நாவல்களில் பயணம் ஒரு முக்கியப் பொருளாக இடம்பெறுகிறது. விடைபெறுதல் முக்கியமான நிகழ்வு. இனி சந்தித்துக் கொள்ள முடியுமா என்று கேள்வி திரும்பத் திரும்ப எழுப்பப்படுகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துகள் தன்னை மிகவும் பாதித்தன எனக்கூறும் போல் 1933க்கு பிறகு ஜெர்மானியராக இருப்பது அதிகமான குற்றவுணர்வை ஏற்படுகிறது. ஆகவே தனது நிலைப்பாட்டினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் ஹென்ரிக் போல்.
தஸ்தாயெவ்ஸ்கி மீது தீவிர ஈடுபாடு கொண்ட ஹென்ரிக் போல் 1969 இல், “The Writer and His City: Dostoevsky and St. Petersburg” என்ற ஆவணப்படத்தினை உருவாக்கியிருக்கிறார்.. இதன் திரையிடலுக்காக ரஷ்யா சென்றிருக்கிறார். இவரது படைப்புகள் ரஷ்ய மொழியில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. சோல்செனிட்சன் பிரச்சனையில் ரஷ்யாவிற்கு எதிர்நிலை எடுத்த காரணத்தால் இவர் விமர்சிக்கப்பட்டார்.
தனது பள்ளிச் சான்றிதழில் பிறந்த தேதி, வருஷம் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது எனக் கேலியாகச் சொல்லும் ஹென்ரிக் குழப்பமும் இருளும் சூழ்ந்த காலத்தில் வளர்ந்திருக்கிறார். அதன் சாட்சியமாகவே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டிருக்கிறது.
••.