உறுபசி -வாசிப்பனுபவம்

அருளானந்தம்


சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்கு பிறகு என்று தொடங்குகிறது இந்த நாவல். சம்பத்தின் நண்பர்களான அழகர், ராமதுரை, மாரியப்பன் மற்றும் யாழினி இவர்களின் வழியே சம்பத்தின் மனைவியாகிய ஜெயந்தியும் அவரவர் பார்வையில் சம்பத்.

யார் இந்த சம்பத்?
அவன் ஏன் 42 வயதில் இறந்தான்?

பதின் பருவத்தின் கனவுகள் மிகவும் அலாதியானவை கனவுகள் மட்டுமல்ல ஆச்சரியங்கள், நம்பிக்கைகள், மூடத்தனங்கள் மற்றும் புத்திசாலித்தனங்கள் அனைத்தும் தான்.
கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை முதன்மை பாடமாகக் கொண்டு பயிலும் மாணவனாக சம்பத்.
தமிழின் மீதான பேரார்வம், கம்பராமாயணம் புத்தகத்தை எரித்து நான் ஏன் நாத்திகனானேன் பகத்சிங்கை படித்து, கல்லூரியில் இடைநின்று, தமிழை அரசியலாகக் கொள்ளும் அரசியல் கட்சியில் பேச்சாளராக மாற்றி விட்டது சம்பத்தை; ஓரிடத்தில் நிலை கொள்ள இயலாத சம்பத் மதுவின் மயக்கத்தால் யாரும் கண்டு கொள்ளப்படாமல் கட்சி கைவிட்டது.

சம்பத் இறந்திருக்கமாட்டான்:
யாழினியுடனான காதல் கை கூடி இருந்தால்…
தீப்பெட்டி தொழிற்சாலையிலேயே பணி புரிந்திருந்தால்…
தினசரி இதழில் பிழை திருத்துபவராக
சற்றே குற்ற உணர்வு கொள்ளாமல் இருந்திருந்தால்….
லாட்டரி சீட்டு வாங்காமல் இருந்திருந்தால்….
ஆதாமின் பெருங்காமக் கனவுகள் கைக்கொண்டு 25 வயதிற்குள் திருமணம் நடைபெற்று இருந்தால்….
செடிகளைப் போல தன் விருப்பம் போல வாழாதிருந்தால்…
மேடைப்பேச்சு எனும் தொற்றுநோய் தாக்காதிருந்தால் .. .
தமிழ் இளங்கலை பட்டம் சேராதிருந்தால்….
நண்பர்கள் இன்னும் கொஞ்சம் கருணையோடு இருந்திருந்தால். ..
மாமிசத்தை கிழிக்கும் கோரைப் பற்களை இந்தச் சமூகம் காட்டாமல் இருந்திருந்தால்…
சிறுவயதில் தங்கை சித்ராவின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்ற குற்றத்தின் தீராத மன வேதனை இல்லாமல் இருந்திருந்தால். ..
சம்பத்தின் அப்பா கட்டைகளைக் கொண்டு ரத்தம் வழிய வழிய அடிக்காமல் விட்டிருந்தால்…
கடற்கரையில் திரியும் காகம் மணலில் கிடைப்பதை எல்லாம் கொத்தி அலைவது போல் இல்லாமல் இருந்திருந்தால்…
சில்வண்டாக மாறி பிரச்சனைகளில் இருந்து தப்பித்து இருந்தால். …
துருப்பிடித்த சன்னல் கம்பியும் இரத்தக்கறைத் தோய்ந்த மருத்துவமனையும் இல்லாதிருந்தால்…

மனிதன் வாழ்வதற்கு பற்பல இலக்கணங்களை வகுத்துள்ளது இந்தச் சமூகம்.பொருள் ஈட்டல் சமூகத்தின் அடிப்படை தேவை யாகிறது. நிர்வாண உடலின் மேல் பற்பல வண்ண ஆடைகளுடன் வாசனை திரவியங்களும் இணைந்து மானுட உள்ளத்தின் உண்மை நிலையை மறைப்பதற்கு இந்த இலக்கணங்கள் உதவுகின்றனவோ?

அடிப்படையில் ஏற்படுகின்ற குற்ற உணர்வு அந்த குற்ற உணர்வின் காரணமாக ஏற்படும் பயம் இவை இரண்டும் மனப் பிறழ்விற்கு காரணிகள்

யார் இந்த சம்பத்? நோயாளியா ,மனநோயாளியா, காமுகனா , தமிழ் ஆர்வலனா .குடிகாரனா ,பிச்சைக்காரனா

இவன் யாருமல்ல, ஆம்! மேற்கண்ட அனைத்தும் தான்! சமூகத்தால் கட்டமைக்கப்படுள்ள ஒழுக்கங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாது விதிமீறல்களில் ஒருவனாக இருந்து வாழ்க்கையில் நிறைவுற்றவன்.

சம்பத்தை நாம் எளிதில் கடந்து செல்லலாம் ஆனால் சம்பத்தின் மனைவி ஜெயந்தியை என்றுமே கடக்க முடிவதில்லை!

உங்கள் பள்ளி அல்லது கல்லூரி நண்பர்கள் யாரேனும் இன்னும் உயிரோடு இருந்தால் அவர்கள் முகவரிக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் அல்லது தொலைபேசியில் ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்பையோ மேற்கொள்ளுங்கள்…

சம்பத்தின் இறப்பை நம்மாலும் தள்ளிப்போட முடியும் தானே?!

••

0Shares
0