கடைசிப் போராட்டம்

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்த இந்தியாவைச் சித்தரிக்கும் ஆங்கிலப் படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பெரும்பான்மை அமெரிக்கப்படங்கள். அவர்களின் வணிக லாபங்களுக்காக இந்தக் கதைக்களனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ராணுவத்தின் பெருமை பாடுவதே இந்தப் படங்களின் தலையான நோக்கம். இப்படங்கள் இந்தியர்களை முட்டாள்கள். போக்கிரிகள் மற்றும் ஏமாற்று பேர்வழிகளாகவே சித்தரிக்கின்றன.

போவானி ஜங்ஷன் என்பது கற்பனையான ஒரு ரயில் நிலையம். ஜான்சி ரயில் நிலையத்தின் சாயலில் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.

Bhowani Junction ஜான் மாஸ்டர்ஸ் எழுதிய நாவல். இதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் George Cukor இயக்கியுள்ளார் 1956 ல் வெளியானது. பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதி நாட்களில் கதை நடக்கிறது.

பிரிட்டீஷ் அரசாங்கம் இந்தியாவிலிருந்து விடைபெற்றுவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி விக்டோரியாவிற்குள் எழுகிறது. ஆங்கிலோ இந்தியன் என்ற முறையில் அவள் பாதி இந்தியர் பாதி வெள்ளைக்காரி. ஆகவே அவளால் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று தெரியவில்லை.

படம் ராணுவ அதிகாரி சாவேஜ் விடைபெற்றுச் செல்வதில் துவங்குகிறது. ரயில் நிலையத்தில் அவரை வழி அனுப்பி வைக்கிறார்கள். ராணுவ இசைக்குழுவின் அணிவகுப்பு நடைபெறுகிறது. அவரது ரயில் பெட்டிக்கு வரும் விக்டோரியாவை அவர் முத்தமிட்டு விடைகொடுக்கிறார். இந்தியாவிலிருந்த போது அவரது ராணுவ அனுபவங்கள் எப்படியிருந்தன என்பது பிளாஷ்பே காட்சிகளாக விரிவடைகிறது.

நான்கு ஆண்டுகள் ராணுவ தலைமையகத்தில் பணியாற்றிவிட்டு ஓய்விற்காகச் சொந்த ஊரான போவானிக்கு வருகிறாள் விக்டோரியா. அங்கே அவளது குடும்பம் அவளுக்காகக் காத்திருக்கிறது.

அவளது தந்தை ஒரு பிரட்டீஷ் விசுவாசி. சிறுவயது முதலே அவளைக் காதலித்து வரும் ரயில்வே சூப்ரடெண்ட் டெய்லர் அவளைத் திருமணம் செய்து கொள்ளக் காத்திருக்கிறான். ஆனால் அவளுக்கு அந்தத் திருமணத்தில் ஈர்ப்பு உருவாகவில்லை.

இதற்கிடையில் இந்தியச் சுதந்திரப் போராட்டம் தனது இறுதிக் கட்டத்தில் உள்ளது. எங்கே ரயில்கள் தடுத்து நிறுத்தப்படக்கூடுமோ என நினைத்து ரயில் நிலையங்களுக்குக் கூடுதல் பாதுகாப்புத் தருகிறார்கள். அமைதி வழியில் போராடும் சாத்வீக போராளிகள் ஒருபுறம் தலைமறைவாகச் செயல்படும் கம்யூனிச போராளிகள் மறுபுறம். இவர்களை ஒடுக்க முனைகிறது பிரிட்டிஷ் அரசு. இதற்காக கர்னல் ரோட்னி சாவேஜ் தலைமையிலான ஒரு கூர்க்கா படைப்பிரிவு வந்து இறங்குகிறது.

அதிகரித்து வரும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் நாசவேலைச் செயல்களை தடுத்து ரயில்வேயைப் பாதுகாப்பதே கர்னலின் முக்கியப் பணியாகும்,

பேட்ரிக் மற்றும் விக்டோரியா இருவரும் ரயில்வேயில் பணியாற்றிய அனுபவம் காரணமாக கர்னல் சாவேஜுடன் இணைந்து பணிபுரிய உத்தரவிடப்படுகிறார்கள். . விக்டோரியா ஏற்றுக் கொள்கிறாள். அவளது தந்தை ராணுவ உயரதிகாரியின் பழக்கம் அவர்களுக்குத் தேவையான நலன்களைச் செய்யும் என நம்புகிறார்.

போவானியில் ஒரு நாள் காந்திய வழியில் போராட்டம் நடக்கிறது. அமைதியாக நடக்கும் அந்தப் போராட்டத்தில் கருங்காலிகள் கலந்து கொண்டு வன்முறையை உருவாக்குகிறார்கள். அதில் கலவரம் ஏற்படுகிறது. இதை ஒடுக்கப் பிரிட்டீஷ் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. இதை நேரடியாக விக்டோரியா பார்வையிடுகிறாள்.

இந்த நெருக்கடியான சூழலில் போவானி ரயில் நிலையத்தில் பணியாற்றும் சீக்கியரான ரஞ்சித் பிரிட்டிஷ் எதிர்ப்பு மனநிலை கொண்டிருக்கிறான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

போவானி ரயில் நிலையம். அவர்களின் குடியிருப்பு. போராட்டம் நடக்கும் இடங்கள். ராணுவ அதிகாரிகளின் அலுவலகம் யாவும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பேட்ரிக் டெய்லருக்கும் விக்டோரியாவிற்கும் வீட்டில் நடக்கும் வாக்குவாதமும் அவளது நிலைப்பாடும் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. டெய்லர் அவளை மிகவும் நேசிக்கிறான். அவளை மணந்து கொள்ளக் காத்திருக்கிறான். அவனிடம் முழுமையான பிரிட்டீஷ் விசுவாசம் உள்ளது.

ரயில் நிலையத்தைச் சுற்றிய பகுதிகள். பாலம். அதன் மேலே நின்று பார்வையிடும் விக்டோரியா, ரயில்வே அலுவலகம். அதன் பணியாளர்கள் அறை.. அங்கிருந்து ரயில் நிலையத்தைக் காணும் காட்சிகள் என அழகான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

ஒரு இரவு அவள் தனியே வீடு திரும்பும் போது விக்டோரியா கேப்டன் மெக்டானியல் என்பவரால் வல்லுறவு கொள்ளத் தாக்கப்படுகிறாள் ஆத்திரமான விக்டோரியா ஒரு இரும்பு கம்பியால் தாக்கி மெக்டானியலை கொன்றுவிடுகிறாள். இந்த நிகழ்வைக் கண்ட ரஞ்சித் அவளைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மறைத்து வைக்கிறான். உடலை அப்புறப்படுத்த முனைகிறான்.

மெக்டானியலிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய ரஞ்சித் மீது விக்டோரியாவிற்கு அன்பு உருவாகிறது. மெல்ல அவள் தான் ஒரு ஆங்கிலோ இந்தியரில்லை. இந்தியப் பெண் என்று உணருகிறாள். இந்நிலையில் தன்னைக் காக்க ஒரு சென்ட்ரி இறந்து போனது அவளை மிகவும் மனவருத்தம் கொள்ள வைக்கிறது.

மெக்டானியேல் கொலை தொடர்பான விசாரணை முடிவடையும் போது, ரஞ்சித்தை விட்டு விலகி ஓடுகிறாள்.

இதற்கிடையில், கன்ஷியாம் இராணுவ சரக்கு ரயிலில் இருந்து வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் திருடி பயணிகள் ரயில்களை தடம் புரளச் செய்கிறான் இதனால் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் இருவருக்கும் உயிர் இழப்பு ஏற்படுகிறது. இத்தோடு விக்டோரியாவை பணயக்கைதியாக ஈடுபடுத்த வேண்டும் என்று வேறு திட்டம் ஒன்றையும் தீட்டுகிறான். . இதை தொடர்ந்து வேறு குழப்பங்கள் உருவாகின்றன. முடிவில் உண்மை ராணுவ உயரதிகாரி சாவேஜிற்குத் தெரிய வருகிறது. அவள் அவரைக் காப்பாற்றுகிறார். .

பொதுவாக இது போன்ற பிரிட்டிஷ் ராணுவத்தின் பார்வையில் அமைந்த படங்களில் இந்தியர்கள் பற்றித் தரக்குறைவான பார்வையும் காட்சிகளுமே இடம் பெறுவது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் அப்படியான காட்சிகளில்லை. ஆனால் படம் முழுவதும் பிரிட்டிஷ் அரசின் தியாகம் போற்றப்படுகிறது.

ஆங்கிலோ இந்தியர்களின் அடையாளச் சிக்கலைப் பேசும் படம் என்ற விதத்தில் இப்படம் அவர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதை விளக்குகிறது.

விக்டோரியா ஜோன்ஸாக அவா கார்ட்னர் சிறப்பாக நடித்திருக்கிறார். போவானிக்கு அவர் வந்து சேரும் ஆரம்பக் காட்சிகள் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளன.

இப்படம் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்ட ஒரு அமெரிக்கத் திரைப்படமாகும்.

இந்தத் திரைப்படத்திற்காக. இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற எம்ஜிஎம் நிறுவனத்தின் கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்தது, ஆகவே பாகிஸ்தானின் லாகூரில் படமாக்கியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷ் திரைப்படத் துறையை மேம்படுத்துவதற்கு அமெரிக்கத் திரைப்பட நிறுவனங்களுடன் நிறைய ஒப்பந்தங்களைப் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்படுத்தியது. இதன் காரணமாக எம்ஜிஎம் போன்ற முக்கிய அமெரிக்க ஸ்டுடியோக்கள் இங்கிலாந்தில் ஸ்டுடியோக்களைக் உருவாக்க நிதி அளிக்கபட்டது. கூடுதலாக வரிச்சலுகையும் தரப்பட்டது

இதன் காரணமாகவே படத்தில் கம்யூனிசப் போராட்டம் மற்றும் போராளிகள் பற்றித் தவறான சித்தரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது

பிரிட்டிஷ் காலனித்துவத்தைப் பற்றிய விமர்சனம் படத்தில் அதிகமில்லை. அவர்களின் தியாகத்தை, சேவையைப் பாராட்டும் தொனியே மேலோங்கி காணப்படுகிறது

வெள்ளையனே வெளியேறு இயக்கம் உண்மையில் நடந்த விதம் வேறு. அதை ஒட்டி நடந்த போராட்டங்களும் அடக்குமுறைகளும் இந்திய வரலாற்றில் முக்கியமானவை. ஆனால் அவற்றின் சுவடுகள் எதுவும் இதில் இடம்பெறவில்லை.

0Shares
0