செர்பிய நாவலாசிரியரான மிலோராட் பாவிக் நேர்காணலின் ஒரு பகுதி .
தமிழில்: லதா ராமகிருஷ்ணன்.

தானாஸிஸ்: கற்பனாதீதம் (fantasy) என்பது வாழ்க்கையின் உண்மைகளுக்கெதிராகப் போரிட ஒருவர் பயன்படுத்தும் ஆயுதமா?
பாவிக்: மெய்யுலகிற்கும், கற்பனையுலகிற்கும் இடையே தெளிவான, திட்டவட்டமான வரம்பெல்லைகள் என்று எதுவும் கிடையாது. ஒரு சுதந்திர மனிதன் அந்த இரண்டு உலகங்களுக்கும் இடையேயான வரம்பெல்லைகளை அழுத்தி, அடக்கி வைக்கிறான். ஒரு எழுத்தாளனாக இந்த உணர்வு எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது. ஒரு எழுத்தாளனிடம் இடம் பெற்றிருக்க வேண்டிய மிக முக்கிய ஆற்றல் மெய்ம்மையும், கற்பனாதீதமும் ஒரே உலகத்தைப் பிரதிபலிக்கக் கூடிய அந்தக் குறிப்பிட்ட புள்ளியை எட்டுவது தான் என்று உண்மையாக நம்புகிறேன். அப்படி எட்டிய பின்பு விஷயங்கள் இயல்பாக உருப்பெறும். அவை உருவாக வேண்டிய விதத்தில் தானே வளர்ச்சியடையும்
தானாஸிஸ்: சிந்தனையைத் தவிரப் படைப்பாளிக்கு வேறு என்ன தேவைப்படுகிறது?
பாவிக்: காதல்! வேறுவிதமாகச் சொல்வதென்றால் நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதன் மீது உங்கள் மனம் காதல் வயப்பட்டிருக்க வேண்டும். தவிர நீங்கள் எழுதிக் கொண்டிருப்பது அந்த அழிவற்ற சக்தியின் வழியாக மாறுவதற்கான சந்தர்ப்பம் இருந்தால் அதனை நீங்கள் முடக்கலாகாது. இந்தச் சக்தியை உங்களுடைய புத்தகத்தினூடாய் பாய்ந்தோட நீங்கள் அனுமதித்தால் அந்த படைப்பு வாசகனைச் சென்றடைவதற்கான வழியைத் தானே கண்டுபிடித்துக் கொள்ளும் என்பது உறுதி
••
நன்றி
அட்சரம் இதழ் 2002