கவிஞனும் கவிதையும் 3 கவிதையின் ரசாயனக்கூடம்

மிரோஸ்லாவ் ஹோலுப் செக்கோஸ்லோவாகியாவின் புகழ்பெற்ற கவிஞர். தி.ஜானகிராமன் பாரீஸ் சென்ற போது ஹோலுப்பை சந்தித்து உரையாடியிருக்கிறார். விஞ்ஞானத்தையும் கவிதையினையும் எவ்வாறு ஒன்றிணைப்பது என்பதைப் பற்றி ஹோலுப் பேசியதை ஜானகிராமன் நினைவுகொண்டு எழுதியிருக்கிறார்.

ஹோலுப் தலைசிறந்த விஞ்ஞானி. நோய்குறியியல் துறையில் பணியாற்றியவர். அவரது கவிதைகளில் அறிவியல் சிந்தனைகள் வெளிப்படுகின்றன. கவிதையும் ஒரு சோதனைக்கூடம் தான் அங்கே சொற்கள் மூலகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் சிந்தனைகளே என்னை வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன என்கிறார் ஹோலுப்

ஹோலுப் சொல்வது உண்மையே. கவிதையும் கண்டுபிடிப்பைத் தான் முதன்மைப்படுத்துகிறது. ஒவ்வொரு கவிஞனும் குறிப்பிட்ட சில பொருட்கள். இயற்கைக் காட்சிகள், பறவைகள் அல்லது விலங்குகள் மீதே தொடர்ந்து எதிர்வினை செய்து வருகிறான். அவற்றை உண்மையில் ஆழ்ந்து ஆராய்கிறான். அறிவு வரையறை  செய்துள்ள புரிதலைத் தாண்டி அவற்றைப் புரிந்து கொள்ள முயலுகிறான். கவிதையில் வெளிப்படுத்துகிறான். கவிதையில் பறக்கும் பறவை என்பது வெறும் பறவை மட்டுமில்லை. அது ஒரு குறியீடு. அடையாளம். நிலையின்மை. மற்றும் நகர்ந்து செல்லும் மௌனம்.

தொடர் கேள்விகளின் வழியே அறிவியல் தன்னை விரித்துக் கொள்வது போலவே கவிதையும் கேள்விகளை முதன்மைப்படுத்துகிறது. அறிவியலைப் போலவே கவிதையும் தனக்கெனப் பிரத்யேக பயன்பாட்டினைக் கொண்டிருக்கிறது. அந்தப் பயன்பாடு எது என்பதை வரையறை செய்வதில் நிறைய மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. ஆனால் கவிதையை நேசிக்காத சமூகமேயில்லை. வணிகர்களே அதிகம் கவிதைகளை நாடுகிறார்கள். கவிஞர்களை ஆதரிக்கிறார்கள். இது விநோதமான முரண்.

தேவதச்சனின் கவிதைகளில் அறிவியல் புதிய வடிவத்தில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. அவர் அறிவியல் சிந்தனைகளை அன்றாட வாழ்வின் காட்சிகளுடன் இணைத்து ரசவாதம் செய்கிறார்.

மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகளை வாசிக்கும் போது வேதியல் கூடத்தில் இருப்பதைப் போலவே உணருகிறோம். சில நேரம் ஒரு விஞ்ஞானியின் உரையைக் கேட்பது போலவும் உணருகிறோம். அவரது கவிதைகள் வாசிக்கக் கடினமானவை. கணித சூத்திரங்களைப் போலிருக்கின்றன. காரணம் அவர் கவிதை இதுவரை செல்லாத இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இயற்கையைப் பிரதானமாகக் கொண்ட கவிகள் அதனை ஆராதிப்பது போல அறிவியலை ஆராதிக்கிறார். மீதேனும் பால்வீதியும் நோய்கிருமிகளும் கிரேக்க தொன்மங்களும் கொண்ட இவரது கவிதையை மரபான வாசிப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியாது. இக்கவிதைகள் தனித்துவமான வாசிப்பை வேண்டுகின்றன.

போய்க் கதவைத் திற

ஒருவேளை வெளியே ஒரு மரம் இருக்கலாம்

அல்லது ஒரு காடு

ஒரு தோட்டம்

அல்லது ஒரு மாயநகரம்

எனத் துவங்கும் அவரது புகழ்பெற்ற கதவு கவிதையைப் புரிந்து கொள்ள நாம் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தை வாசித்திருக்க வேண்டும். காரணம் மேக்பெத்தில் மரங்கள் நடந்து வருகின்றன. அது ஒரு முன்னறிவிப்பாகச் சொல்லப்படுகிறது.

கதவை திற என்பது ஆலோசனையா அல்லது உத்தரவா என நாம் யோசிக்கிறோம். எதிர்பாராமையைச் சந்திக்கக் கதவை திறக்க வேண்டியிருக்கிறது. இதனால் ஏற்படும் மாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. எந்தக் கதவு நம்மையும் உலகையும் பிரித்து வைத்திருக்கிறது. அதை எப்போது எப்படித் திறக்க போகிறோம் என்பதைப் பற்றியே ஹாலுப் பேசுகிறார். அதே நேரம் செக் நாட்டின் அன்றைய அரசியல் சூழலை விமர்சிப்பதாகவும் இக்கவிதை உள்ளது..

மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகளை வாசிக்கும் போது வேதியல் கூடத்தில் இருப்பதைப் போலவே உணருகிறோம். சில நேரம் ஒரு விஞ்ஞானியின் உரையைக் கேட்பது போலவும் உணருகிறோம்.

அவரது கவிதைகள் வாசிக்கக் கடினமானவை. கணித சூத்திரங்களைப் போலிருக்கின்றன. காரணம் அவர் கவிதை இதுவரை செல்லாத இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இயற்கையைப் பிரதானமாகக் கொண்ட கவிகள் அதனை ஆராதிப்பது போல அறிவியலை ஆராதிக்கிறார். மீதேனும் பால்வீதியும் நோய்கிருமிகளும் கிரேக்க தொன்மங்களும் கொண்ட இவரது கவிதையை மரபான வாசிப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியாது. இக்கவிதைகள் தனித்துவமான வாசிப்பை வேண்டுகின்றன.

போய்க் கதவைத் திற

ஒருவேளை வெளியே ஒரு மரம் இருக்கலாம்

அல்லது ஒரு காடு

ஒரு தோட்டம்

அல்லது ஒரு மாயநகரம்

எனத் துவங்கும் அவரது புகழ்பெற்ற கதவு கவிதையைப் புரிந்து கொள்ள நாம் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தை வாசித்திருக்க வேண்டும். காரணம் மேக்பெத்தில் மரங்கள் நடந்து வருகின்றன. அது ஒரு முன்னறிவிப்பாகச் சொல்லப்படுகிறது.

கதவை திற என்பது ஆலோசனையா அல்லது உத்தரவா என நாம் யோசிக்கிறோம். எதிர்பாராமையைச் சந்திக்கக் கதவை திறக்க வேண்டியிருக்கிறது. இதனால் ஏற்படும் மாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. எந்தக் கதவு நம்மையும் உலகையும் பிரித்து வைத்திருக்கிறது. அதை எப்போது எப்படித் திறக்க போகிறோம் என்பதைப் பற்றியே ஹாலுப் பேசுகிறார். அதே நேரம் செக் நாட்டின் அன்றைய அரசியல் சூழலை விமர்சிப்பதாகவும் இக்கவிதை உள்ளது..

கவிதையைப் பற்றிய வரையறைகளைத் தன்னால் ஏற்கமுடியாது எனக் கூறும் ஹாலுப் மகிழ்ச்சியான விளையாட்டினைப் போலவே தான் கவிதை எழுதுவதாகச் சொல்கிறார்.

கவிதை எழுதும் செயல்பாட்டினை விவரிக்க முற்படும் தேவதச்சன் அதனைக் குண்டு பல்ப்பின் ஒளியாக மாற்றுகிறார்.

கவிதை எழுதுவது

என்பது

ஒரு

குண்டு பல்பை

ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது

முழுமையானதின்

அமைதியை ஏந்தி

பல்ப்

ஒளி வீசத் தொடங்கியது

ஒரு

மெல்லிய இழை

நிசப்தத்தில்

எவ்வளவு

நீள

நன் கணம்

கவிதையும் அறிவியலும் இணைந்து படைப்பை உருவாக்க வேண்டும் என ஹோலுப் விரும்பியதன் அடையாளம் போல இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது

முன் எப்போதும் கவிதை இப்படி வரையறை செய்யப்படவில்லை. பொதுவாகக் கவிதையை வரையறை செய்யும் போது சமயசிந்தனையின் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டிருக்கிறேன். புனிதமான, தெய்வீகமான, புரிந்து கொள்ள முடியாத செயலாகக் கவிதை வரையறைக்கபடுவதைத் தாண்டி இக்கவிதை குண்டுபல்பை ஹோல்டரில் மாட்டுவதை உதாரணம் சொல்கிறது.

ஒளியின் நிசப்தம் பற்றிக் கவிதை பேசுகிறது. தேவதச்சனுக்கு இயற்பியலில் நாட்டம் அதிகம். அறிவியல் கருதுகோள்களை அதன் பெயர்களைச் சுட்டாமலே பயன்படுத்தக்கூடியவர். நேரடியாகப் பெயர் சுட்டியே இதனைப் பாம்பாட்டி சித்தன் தனது கவிதைகளில் வெளிப்படுத்துகிறார்.அது வேறுவிதம். கவிதையைச் சில வேளைகளில ஒரு மைக்ராஸ்கோ போல பயன்படுத்துகிறார் ஹோலுப். சில வேளைகளில் டெஸ்ட் டியூப் போல மாற்றிவிடுகிறார்.

கவிதை என்பது வெறுமைக்கு எதிரான இருப்பு என நம்பும் ஹோலுப் வெறுமை இடைறாமல் கசிந்து ஒழுகுவதாகச் சொல்கிறார். அதை அன்றாட வாழ்வில் பல இடங்களில் காண முடிவதையும் சுட்டிக்காட்டுகிறார்.

கவிதை அதனை வாசிப்பவனின் ஞாபகத்தால் தான் அவிழ்க்கபடுகிறது. ஆகவே ஒவ்வொரு முறை வாசிக்கும் போது கவிதை வேறுவேறு நினைவுகளைத் தொட்டு விரிவதாகி விடுகிறது. தன்னைப் பொறுத்தவரை கவிதை என்பது ஒருவகை விளையாட்டு. சிறிய இயந்திரத்தை உருவாக்குவது போன்ற பணி. உலகை தனது டெஸ்ட்டியூப்பில் போட்டு ஆராய்ந்து கொண்டிருக்கிறது கவிதை. அதன் முடிவுகள் வியப்பானவை என்கிறார் ஹோலுப்.

The Poetry Pharmacy என்ற William Sieghart புத்தகத்தில் நமது உடல் மற்றும் மனம் நலமடைவதற்கான கவிதைகள் தொகுக்கபட்டிருக்கின்றன. எல்லா நோய்களுக்கும் மருந்தாகக் கவிதைகள் இருக்கின்றன.த னிமை, தைரியமின்மை, மனவேதனை, நம்பிக்கையின்மை, அல்லது அதிகப்படியான ஈகோ ஆகியவற்றால் அவதிப்படுகிறவர்களுக்குக் கவிதையை மருந்தாகத் தரமுடியும் அவற்றால் மனநிலையை மாற்றவும் குணப்படுத்தமுடியும் என்கிறார் வில்லியம் சீகார்ட். இந்தக் கவிதைத்தொடரை பிபிசி ரேடியோ ஒலிபரப்புச் செய்திருக்கிறது

வேதியல் பொருள் துளி அதிகமாகிவிட்டாலும் மாத்திரையின் இயல்பு மாறிவிடும். கவிஞர்கள் மருந்து தயாரிப்பவர் போலத் துல்லியமாகச் சொற்களைக் கையாளுகிறார்கள். ஆகவே கவிஞர்களைச் சிறந்த மருத்துவர்களாகக் கருதுகிறேன் என்கிறார் வில்லியம் சீகார்ட்

நாஜி படையெடுப்பு மற்றும் ரஷ்யர்கள் செக்கோஸ்லோவாக்கியாவை ஆக்கிரமித்ததது என இருபெரும் நிகழ்வுகளுக்குள் வாழ்ந்த ஹோலுப் வரலாற்றைக் கேள்வி கேட்கிறார். கேலி செய்கிறார்

அவரது சரித்திரப்பாடம் கவிதையில் நெப்போலியன் என்ற பெயரில் ஒரு வளர்ப்பு நாய் இடம் பெறுகிறது. அதைப் பற்றிய கதையைக் கேட்டு மாணவர்கள் வருந்துகிறார்கள். அவர்களுக்கு வரலாற்றில் அறியப்படும் நெப்போலியன் வெறும் தகவல் மட்டுமே.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுடன் தன்னை அடையாளம் காணுதல் இவையே தன்னை எழுத வைக்கின்றன என்கிறார் ஹோலுப்

ஹோலுப்பின் கவிதையில் வரும் கதவைப் போலவே அவரை வாசிக்கும் போது நாமும் எதிர்பாராமையைச் சந்திக்கிறோம். அதற்குள் ஆட்படுகிறோம். கவிதைக்கு வெளியே நடைபாதையில் காலடிச் சத்தங்களையும் கதவுகள் திறந்து மூடுவதையும் நாம் கேட்கிறோம். புற உலகம் கவிதையின் நீட்சியாகவே தோற்றம் தருவதை வியப்போடு பார்க்கிறோம். நமக்குள் கவிதையின் நிசப்தமான வெளிச்சம் நிரம்புகிறது..

.

0Shares
0