“இந்த பூமியில் மனிதனுக்குத் தேவை ஏழடி நிலம் தான்“
“இல்லை, சவத்திற்குத் தான் ஏழடி நிலம் வேண்டும், மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும்
வேண்டியுள்ளது“
எனத் தனது குறிப்பேடு ஒன்றில் செகாவ் கூறுகிறார்.
இந்தக் குறிப்பை வாசிக்கும் போதெல்லாம் மனது மிகுந்த கிளர்ச்சி அடைகிறது.
டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதை How Much Land Does A Man Need , இதில் ஆறு அல்லது ஏழு அடி தான் ஒரு மனிதனுக்குக் கடைசியில் தேவை என்பதை டால்ஸ்டாய் வலியுறுத்துகிறார். ருஷ்யர்களுக்கு ஏழு அடி தேவைப்படுகிறது, நமக்கு ஆறடி போதும்
உயிருள்ள மனிதனின் தேவையும் இறந்தவர்களின் தேவையும் ஒன்றில்லை, செகாவ்வின் இந்த வாசகம் வாழ்வின் மீதான அவரது பற்றுதலின் வெளிப்பாடு.
ஆன்டன் செகாவின் வாழ்க்கை, அவரது சிறுகதைகள், அவர் குறித்த புத்தகங்கள், சினிமா எனச் செகாவைக் கொண்டாடும் விதமாகச் செகாவ் வாழ்கிறார் என்ற ஒரு புதிய தொடரை ஏப்ரல் உயிர்மை இதழில் துவங்கியுள்ளேன்.செகாவ் குறித்து வாசிப்பதும் உரையாடுவதும் எழுதுவதும் மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.