சார்ஜா புத்தகத்திருவிழா குறித்து பத்திரிக்கையாளர் கமால் பாஷா எழுதியுள்ள குறிப்பு
•••
ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் கடந்த 36 ஆண்டுகளாக பன்னாட்டு புத்தகத்திருவிழா நடைபெற்றுவருகிறது.
பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் பணிபுரிந்துவருவதால், இந்த புத்தகத்திருவிழா பலனுள்ளதாக இருக்கிறது.
இந்த திருவிழாவில் உலகின் பல நாடுகளில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான அரங்குகளில் லட்சக்கணக்கான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
இந்தியாவிலிருந்து உருது, ஹிந்தி, மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட பல மொழி நூல்கள் கிடைக்கின்றன. ஆனால், தமிழ் மொழியில் பிரசுரிக்கப்பட்ட நூல்கள் அங்கே எந்த அரங்கிலும் கிடைப்பதில்லை. தமிழ் நூல் விற்பனைக்காக எந்த அரங்கும் அமைக்கப்பட்டதில்லை. தமிழகத்திலிருந்து எந்த பதிப்பகத்தாரும் அதற்கான முயற்சியை மேற்கொண்டதில்லை. இது அங்கு பணிபுரியும் தமிழர்களுக்கு மிகுந்த மன வருத்தமாகவே இருந்தது.
அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முக்கிய நபர்களை அழைத்து அரங்கு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அவர்களிடமெல்லாம், தமிழக பதிப்பாளர்களிடம் கூறி சார்ஜா புத்தக திருவிழாவில் தமிழ்நூல் விற்பனைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பலன் ஏதும் கிட்டவில்லை. ஆனால், சென்றவருடம் துபாய்க்கு அழைக்கப்பட்ட எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஆக்கப்பூர்வமானதும், அறிவுத்தாகத்திற்கு தேவையானதுமே என்று உணர்ந்த இராமகிருஷ்ணன் தமிழகம் திரும்பிய உடனேயே வலைதளத்தில் தமது மனநிலையைத் தெரிவித்தார். அது மட்டுமின்றி “தி இந்து தமிழ்” நாளிதழிலும் தமது கவலையை தெரிவி்த்திருந்தார்.
தொடர்நடவடிக்கையாகதென்னிந்திய புத்தக பதிப்பாளர் அமைப்பான ”பபாசி”யினரிடமும் பேசி அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி சார்ஜாவில் தொடங்கி நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் புத்தக திருவிழாவில் ’பபாசி” யின் சார்பாக தமிழ் நூல்கள் விற்பனைக்காக இரண்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அதற்கான நூல்களும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி அமீரக தமிழ் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
பலரிடம் அமீரக தமிழர்கள் தங்கள் கோரிக்கையை வைத்த போதும், எஸ்.ராவிடம் வைத்ததன் மூலம் வெற்றியடைந்திருக்கிறது.
’இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண்விடல்’ என்ற திருக்குறள் நினைவிற்கு வருகிறது.
( குறள் எண்:517)
அரபுலகில் வாழ்வாதாரத்தைத் தேடும் தமிழ் உடன்பிறப்புக்களின் அறிவு தாகத்தை தீர்க்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !
நன்றி :
கமால் பாஷா