நம்பி கிருஷ்ணன்

சொல்வனம் இணைய இதழில் நம்பி கிருஷ்ணன் எழுதி வரும் உலக இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒரே வார்த்தையில் சொன்னால், அற்புதம்.

தீவிர வாசிப்பும், செறிவான புரிதலும்.  அந்தப் புரிதலை நூறு சதவீதம் தமிழில் வெளிப்படுத்தும் மொழித்திறனும், சிறந்த மொழியாக்கமும் கொண்ட ஒருவரை நான் கண்டதேயில்லை. அவரது எழுத்து வியக்க வைக்கிறது.

நம்பி கிருஷ்ணன் யார். எங்கே வசிக்கிறார் என எதுவும் தெரியாது. ஆனால்  சொல்வனத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளை நானே ஒரு PDF ஆகத் தொகுத்து வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப வாசித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் அவரை வியந்து பாராட்டுகிறேன்.

அவரது கட்டுரைகளில் இருந்து அவரது இலக்கிய வாசிப்பின் நினைவுகளை அறிந்து கொள்ள முடிகிறது. தஸ்தாயெவ்ஸ்கி பற்றியும், லத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்தும், ஜார்ஜ் பெரெக், சால் பெல்லோ, பின்ச்சன், ஜூலியன் பார்ன்ஸ், கிரேக்க நாடகங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் மிக மிக முக்கியமானவை.

நம்பி கிருஷ்ணன் அறிமுகப்படுத்திய வில்லியம் காஸை (வில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள் ) தொடர்ந்து வாசித்து வருகிறேன். மிகச்சிறந்த எழுத்தாளரை அடையாளம் காட்டியதற்கு நன்றி

நம்பியால் பரிந்துரை செய்யப்படும் புத்தகங்களையும் வாங்கி வாசித்து வருகிறேன். உலக இலக்கியத்தின் புதிய சாளரங்களைத் திறந்துவிட்ட நம்பி கிருஷ்ணனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

அவர் தனது கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.  அந்த நூல் உலக இலக்கியம் குறித்த முக்கிய வழிகாட்டியாக அமையும் என்பதே என் எண்ணம்.

https://solvanam.com/2018/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-2/

0Shares
0