வி.கெ. என் மலையாளத்தில் முக்கியமான எழுத்தாளர். அவரது பையன் கதைகள் தமிழில் சாகித்ய அகாதமி வெளியீடாக வந்துள்ளது. 2014ல் கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா வி.கெ.என் பையன் கதைகளில் சிலவற்றை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். அவர் மொழியாக்கம் செய்த கதை ஒன்றை நான் வாசிக்கும்படி அப்போது மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருக்கிறார். நானும் அவரைப் பாராட்டி பதில் எழுதியிருக்கிறேன். அந்த மின்னஞ்சலை இன்று பார்த்தபோது ஸ்ரீபதி சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன நினைவு மனதில் ஆழமான வலியை உருவாக்கியது. நிறையக் கனவுகளுடன் இருந்தவர். நாலைந்து முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
விகெஎன்னின் நகைச்சுவை அலாதியானது. இந்தக் கதை அதற்குச் சிறந்த உதாரணம்
••
பையன் கதைகள்
மலையாளத்தில் : வி.கெ.என்.
தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா
அமெரிக்காவில் ஸிராக்யூஸ் நகரத்தில் நடந்த புத்தகச் செமினாரில் இந்தியாவின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட இரண்டு பிரபலங்கள்:
இட்டூப்பு முதலாளியும் பையனும்.
ஆங்கிலத்தைச் சரளமாகக் கையாள முடியாது என்கிற குறைபாடு பையனுக்கு இருந்தது. கருவூலத்தில் கிட்டத்தட்ட இருபது இங்கிலீஷ் சொற்களை மட்டுமே மூலதனமாக வைத்திருக்கும் இட்டூப்புக்கு இது எதுவும் பிரச்னையேயில்லை. கருத்துப் பரிமாற்றம் சுலபமாக நடந்தது. அவர் எங்கேயும் பிரகாசித்தார். தனித்துத் தெரிந்தார். கமிட்டிக் கூட்டங்களிலும் குழு விவாதங்களிலும் ஆராய்ச்சிக் குழுவிலும் பிரசங்க மேடையிலும் கலக்கித் தள்ளினார். தலைவரின் வாய்ச்சாதுர்யத்துக்கு முன்னால் செமினார் பலமுறை ஸ்தம்பித்து நின்றது.
என்ஜாய் என்கிற புதிய சொல்லை அவர் அமெரிக்காவுக்குக் கொண்டு போயிருந்தார்.
புத்தக விற்பனையின் டெக்னிக்குகளை விவாதிக்கிற அமர்வில் பேச இந்தியப் பிரதிநிதிகளைச் சேர்மன் அழைத்தார்.
இட்டூப்பு ரகசியமாகப் பையனிடம் கேட்டார்:
நீ பேசறியாடா?
பையன் சொன்னான்: வேண்டாம்.
இட்டூப்பு எழுந்தார்.
மி வாண்ட் ஸ்பீக். (நான் பேச விரும்புகிறேன்.)
உலகெங்குமிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் இந்தியக் கதாபாத்திரத்தை ஆர்வமாய்ப் பார்த்தார்கள். இட்டூப்பு வெள்ளமாகப் பிரசங்கித்தார்:
சேல்ஸ்-பெஸ்ட்-லைப்ரரி சீசன்-ஸ்கூல் சீசன்-ஃபிஃப்டி கமிஷன்-சேல் அன்ட் என்ஜாய்.
ஆழமான இந்தச் சொற்பொழிவின் பொருளை ஓரளவு இவ்வாறு தொகுக்கலாம்: புத்தகம் விற்பதற்குச் சிறந்த காலம் லைப்ரரிக்காரர்கள் மார்க்கெட்டுக்கு வருகிற சீசனும், பள்ளிகள் திறக்கும் காலமும்தான். இந்தக் காலத்தில் கொஞ்சமும் நேரத்தை வீணாக்காமல் பரபரப்பாய் விற்று லாபம் சம்பாதியுங்கள். ஐம்பது சதவீதம்கூடக் கமிஷன் கொடுக்கலாம். (குறிப்பு: என்ஜாய் என்றவார்த்தை இங்கே லாபம் என்று பொருள்படும்.)
இட்டூப்பு வார்த்தைகளை நேராகவும் தலைகீழாய்த் திருப்பியும் பிரயோகித்தார். புத்தகத்தை உயர்த்திக் காண்பித்தார். விற்பதைப் போல் அபிநயம் பிடித்தார். காசு வாங்கிப் பாக்கெட்டில் போடுகிற விதத்தையும் காண்பித்தார். சொற்பொழிவு முடிந்தபோது அரங்கில் கரகோஷம்.
இட்டூப்புப் பையனிடம் கேட்டார்: எப்டிடா இருந்துச்சு?
பையன் சொன்னான்: நீங்க கலக்கிட்டீங்க.
அப்ப நீ ஏறிப் பேசீருக்க வேண்டீதுதானேடா?
பையன் சொன்னான்: நீங்க இருக்கும்போது நான் சோபிக்க மாட்டேன்.
மாலை நேர செஷன் முடிந்தபோது செமினாரே பிரவாகமாக வந்து இட்டூப்பை மூடியது. மஹாராஜாக்களுடைய, மணிநாகங்களுடைய, அரைகுறை ஆங்கிலம் பேசுபவர்களின் நாடான இந்தியாவிலிருந்து வந்த இட்டூப்பை அவர்கள் வாரியெடுத்துக் கொண்டார்கள்.
அவருடைய கையைக் குலக்கி, தோளில் தட்டி, கையெழுத்து வாங்கினார்கள். டின்னருக்கும் லஞ்சுக்கும் காக்டெய்லுக்கும் அவரை அழைத்தார்கள். அல்லோ, அல்லோ என்றும் என்ஜாய் என்ஜாய் என்றும் இட்டூப்பு கூவினார்.
(இங்கே அல்லோ (ஹலோ) என்பதற்குச் சந்தோஷம் என்பதும் என்ஜாய் என்பதற்கு அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்பதும் பதவுரை.)
டி.எஸ். எலியட்டின் கவிதைகளைப் பற்றி டைம்ஸ் லிட்டரரி சப்ளிமென்டில் கட்டுரை எழுதிய பையன் இந்த நேரம் முழுவதும் ஃபோயரின் ஒரு மூலையில் சப்ளீஸாக நின்றுகொண்டிருந்தான். கூட்டம் கலையத் துவங்கியபோது இட்டூப்புப் பையனைத் தேடி வந்தார்.
நீயேண்டா மூலையில வந்து நிக்கறே?
பையன் சொன்னான்: ஒண்ணுமில்ல.
ஒன் மூஞ்சியேண்டா சோந்துபோயிருக்கு?
பசிக்குது.
இட்டூப்பு சொன்னார்: வாடா. ம்ம ஓட்டலுக்குப் போயி கொஞ்சம் கஷாயமும் எறச்சியும் அடிக்கலாம்.
பையன் எதிர்ப்பைத் தெரிவித்தான்: அதெப்படி? ஏழு மணிக்கு ஹவாய் ஹோட்டல்ல காக்டெய்லுக்கு வர்றதா பஹாமாஸ் க்ரூப்கிட்ட நீ சொன்னதைக் கேட்டேனே?
இட்டூப்பு சொன்னார்: டே, நீ, இங்கிலிசு பேசி இங்கயே கெட. இவனுக கூடக் குடிச்சா நம்முளுக்கெல்லாம் என்னடா ஏறும்?
அப்ப நீ போகலியா?
இட்டூப்பு பையனின் கையைப் பிடித்து இழுத்தார்: நீயி வாடா. ம்ம ஓட்டலுக்குப் போலாம்.
வசந்த காலம். பனியும் கொடுங்குளிரும். இரவு விரைவாகவே வந்தது. அறையின் சாவிகளை வைத்திருந்த ஹோட்டல் பெண் குட்நைட் வெல்கம் எல்லாம் கூறியபடி சாவிகளை நீட்டினாள்.
இட்டூப்புப் பையனிடம் கேட்டார்: குட்டி எப்டிடா?
பையன் சொன்னான்: சரக்கெல்லாம் இல்ல.
அவனின் அறிவுப்புச் சரிதான். ஒரு சராசரி அமெரிக்கப் பெண். செம்பட்டை முடி. வெள்ளைத் தோல். தோலின் மேல் கறுப்புப் புள்ளிகள். மொத்தமாக அவளிடம் அனுகூலமாயிருந்தது அவளுடைய வயசு மட்டுமே. இருபது வசந்தங்களுக்கு மேல் போகாது. அப்படிப் போனால், பையன் நினைத்துக் கொண்டான்: அப்புறம் வசந்தங்களுக்கே அர்த்தமில்லை.
சாவியை வாங்கி எதிரில் லாபியிலிருந்த சோஃபாவில் அமர்ந்த பிறகு இட்டூப்பு கேட்டார்: ஒனக்கு குட்டிய பிடிக்கல, இல்லடா?
பையன் உணர்த்தினான்: அவ்வளவொண்ணும் நல்லாயில்ல.
இருந்தாலும், நம்முளுக்கு ஒராளு வேணுமில்லடா?
எதுக்கு?
குளுருதில்லடா?
என்ன குளிரு? ஏர் கண்டிஷன் செஞ்ச ஹோட்டல்ல மிதசீதோஷ்ண நிலைதானே?
இட்டூப்பு கோபித்தார்: டேய், நீயி சாகித்தியம் பேசினேன்னு வச்சுக்கோ! மித சீதோஷ்ணத்தில தனியாப் போத்திட்டுப் படுத்துக்கறதுக்காடா இம்மாந் தூரம் வந்திருக்கோம்?
வேறென்ன வேணும்?
குட்டிகிட்ட போயி கேளுடா.
பையன் சிரித்தான்: நீ கேட்டாலே போதும்.
இட்டூப்பு எழுந்தார்: ஒனக்குத் தகிரியம் பத்தாதுடா, வா.
பாருக்குப் போனார்கள். இட்டூப்பு இரண்டு பேர்பன் விஸ்கியும் இரண்டு கிலோகிராம் பன்றியிறைச்சியும் அடித்தார். பையன் இரண்டு விஸ்கியும் ஐநூறு கிராம் வாத்துமுட்டையும்.
இட்டூப்பு கேட்டார்: கிளம்பலாமாடா?
மீண்டும் லாபியையே வந்தடைந்தார்கள்.
பையன் சொன்னான்: நீ போகாம இருந்தது சரியில்ல. பஹாமாக்காரங்க உன்னை எதிர்பார்த்து நின்னுட்டிருப்பாங்க.
சாவி கவுன்ட்டரிலிருந்த பெண்ணின் மேல் கவனத்தைத் திருப்பி இட்டூப்பு சொன்னார்: அதுககிட்டப் போயி வேலயப் பாக்கச் சொல்லுடா.
பையன் சொன்னான்: சரி, ரூமுக்குப் போலாம்.
இட்டூப்பு கேட்டார்: ஒன்னால கேக்க முடியுமாடா?
யாருகிட்ட?
அந்தக் குட்டிகிட்ட.
முடியாது.
இட்டூப்பு சொன்னார்: அப்டின்னா, நாங்களே கேட்டுக்கறோம்.
பையன் தடுத்தான்: வேண்டா, இட்டூப்பு!
போடா!
இட்டூப்பு கவுன்டரை நோக்கி நடந்தார். அந்தப் பெண் சிரித்தபடி முன்னால் வந்தபோது தொண்டையைக் கனைத்துக் கொண்டு கெஞ்சுகிற குரலில் சொன்னார்:
சிஸ்டர் – இந்தியா ஹாட் – அமெரிக்கா கோல்ட் – வாண்ட் கம்பெனி – ஐ பே – ரூம் 635 – யெஸ் – கம் – நோ – சாரி.
கீர்த்தனைமாலையின் பரிபாஷை: அன்பே, இந்தியா சூடான தேசம். அமெரிக்காவோ குளிர் தேசம். எனக்குத் துணை தேவைப்படுகிறது. பணம் தருகிறேன். என்னுடைய ரூம்நம்பர் 635. சம்மதமென்றால் வாருங்கள். இல்லையென்றால் மன்னித்து விடுங்கள்.
பையன் விழித்து நிற்கையில் அந்தப் பெண் கன்னங்களில் மத்தாப்பூ பூக்க சிரித்து நாக்குக்குள் இட்டு உருட்டி விழுங்கும் அமெரிக்கன் ஆங்கிலத்தில் கேட்டாள்:
வை வோன்ட் யூ கால் மி ஆஃப்டர் எய்ட், படீ?
இட்டூப்பு கெஞ்சும் குரலில் பையனிடம் கேட்டார்: என்னடா சொல்லுது குட்டீ?
பையன் சொன்னான்: எட்டு மணிக்கப்புறம் அவளைக் கூப்டறதாம்.
இட்டூப்பு தலை வணங்கி அவளைத் தொழுதார். (நான் கூப்டறேன்.)
எட்டரை மணியளவில் பையன் தன் அறையில் மாலை நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தபோது டெலிபோன் ஒலித்தது. இட்டூப்பு!
டேய்…
என்ன?
குட்டி வந்திருக்குடா.
நல்லது.
வாடா.
நான் வரல.
உனக்கு வேண்டாமா?
வேண்டா.
ஏண்டா?
பையன் சொன்னான்:
பொறாமை.
****
நன்றி
ஸ்ரீபதி பத்மநாபா மலைகள் இணையஇதழ்