மோட்சமென்பது

Understanding Moksha என்ற ஆவணப்படத்தை இணையத்தில் பார்த்தேன். சமீர் குமார் இயக்கியது. காசியில் எடுக்கபட்ட மிகச்சிறந்த படமது.  இசையும் படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் அபாரம். படம் காசியின் ஊடாக மெய்தேடலை முன்வைக்கிறது. குறிப்பாக மோட்சம் என்பதை புரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதலை மேற்கொள்கிறது.
பனிகாலத்தின் காசியை காட்சிகளாக பார்க்கையில் நினைவுகள் பீறிடுகின்றன. இந்த பனிக்குள் நானும் அலைந்து திரிந்திருக்கிறேன். காசி எனக்கு மிகவும் விருப்பமான ஊர்.
காசியின் தொன்மை பற்றி ஒரு பேராசிரியர் பேசுகிறார். அப்போது காசி ஒரு அறிவு மையம். பல்துறை அறிஞர்கள் சங்கமிக்கும் இடம். நூற்றாண்டுகளாகவே காசி உயிர்துடிப்புடன் இயங்கி வருகிறது என்கிறார்.
குயவன் பானை செய்யும் காட்சி, படகில் செல்லும் யாத்ரீகர்கள். பறந்து செல்லும் பறவைகள். ஒடிவிளையாடும் சிறார்கள். கங்கையின் ஒளிரும் காட்சிகள். உடன் இணைந்த புல்லாங்குழல் ஒசை. கடவுள் வேஷமிட்ட மனிதர்கள். ராம்லீலாவில் பற்றி எரியும் ராவணனின் காட்சி. நகரெங்கும் ஒளிரும் மஞ்சள் வெளிச்சம். திசையெங்கும் நெருப்பு. என படம் சிறந்த அனுபவத்தை உருவாக்குகிறது
படத்தில் இளந்துறவிகளின் நேர்காணல்கள் சிறப்பாக உள்ளன. இறந்த உடல் ஒன்றை பாடையில் வைத்து  குறுகலான வீதியின் வழியாக கொண்டு வரும் காட்சியில் ஒரு டெய்லர் தலையை லேசாகத் திருப்பிவிட்டு தன் வேலையில் கவனமாக இருக்கிறார். காசியில் வசிப்பவர்களுக்கு மரணம் பழகிய விஷயம். இரவில் கங்கா ஆர்த்தி நடப்பதைக் காட்டுகிறார்கள். என்னவொரு வசீகரம். காசி நகரின் வாழ்க்கையை படம் மிகவும் கவித்துவமாக பதிவு செய்துள்ளது இந்த ஆவணப்படம்.
இசையும் பாடலும் வெகு அற்புதமாக பயன்படுத்தபட்டுள்ளன.  கடைசி காட்சிகளில் ஒலிக்கும் பாடல் படம் முடிந்தபின்பும் நம்  காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
காசியின் அழகை அவசியம் பாருங்கள்
••
0Shares
0