உலகப் புத்தக தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.
••
இன்று A russian Childhood என்ற நூலை வாசித்தேன். தஸ்தாயெவ்ஸ்கி காலத்தை சேர்ந்த Sofya Kovalevskaya என்ற இளம்பெண் தான் எழுதிய சிறுகதையை தஸ்தாயெவ்ஸ்கி படிக்க வேண்டும் என்பதற்காக தபாலில் அனுப்பி வைத்திருக்கிறார். ஒரு இளம் எழுத்தாளரின் கதையை படித்து தேவையான ஆலோசனைகளை சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்தஸ்தாயெவ்ஸ்கி.
பின்பு அந்த பெண் அவரைத் தேடி வந்து நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அவர்கள் சந்திப்பு எப்படியிருந்தது. தஸ்தாயெவ்ஸ்கி எப்படி நடந்து கொண்டார் என்பதை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். சோபியாவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நூல், அவரது சமகால ஆளுமைகளையும் உள்ளடக்கியதாகயிருக்கிறது.
••
தஸ்தாயெவ்ஸ்கி தனது உதவியாளராகப் பணியாற்றிய அன்னாவை எப்படி காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் என்பதை Twenty Six Days from the Life of Dostoyevsky திரைப்படம் அழகாக விவரிக்ககூடியது. இதே நிகழ்வை மையமாகக் கொண்டு மலையாளத்தில் பெரும்படவம் ஸ்ரீதரன் நாயர் ஒரு சங்கீர்தனம் போல என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் காதலுக்கும் ஒரு மலையாள எழுத்தாளருக்குமான தொடர்பை பிரதானமாகக் கொண்டு In Return: Just a Book என்றொரு மலையாள ரஷ்ய கூட்டுதயாரிப்பு படம் வெளியாகியுள்ளது. படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவர் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா.
••
சீன குறுநாவல்களின் தொகுப்பாக வெளிவந்த உடலும் உணர்வும் நூலை வாசித்திருக்கிறீர்களா. சியாங்லியாங், ஷாங் எழுதிய மிகச்சிறந்த இரண்டு குறுநாவல்களைக் கொண்டது. இப்போது மறுபதிப்பு வெளியிடப்படவில்லை. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய குறுநாவல்கள். குறிப்பாக பாரப்பேருந்து ஒட்டுனரின் கதை எனப்படும் கைப்பு ஊற்று மிகச்சிறப்பானது. இரண்டு குறுநாவல்களும் திரைப்படமாக வெளியாகியுள்ளன.