மலர்களை நேசிக்கும் நாய்

மேரி ஆலிவரின் கவிதை ஒன்றை கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியன் மொழியாக்கம் செய்து தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் நல்ல கவிதை. விலங்குகளைப் பற்றிய மேரி ஆலிவரின் கவிதைகள் தனித்துவமானவை. இந்த கவிதையில் வரும் நாய் மலர்களைத் தேடிச் செல்கிறது. ரோஜாவைக் கண்டதும் நின்றுவிடுகிறது. வழியில் காணும் மலர்களை ஆராதிக்கிறது. மனிதர்கள் ஒரு மலரை ஆராதிக்கும் போது அடையும் உணர்வுகளை போலவே தானும் அடைகிறது எனலாமா,

ஒருவேளை நாம் தான் அப்படி புரிந்து கொள்கிறோமோ என்னவோ

உண்மையில் ஒரு நாயிற்கு மலர் அபூர்வமான பொருளாக தோன்றக்கூடும். அதை பறித்துத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒரு போதும் நாயிற்கு தோன்றாது. அது மலரை வாசனையின் உருவம் போலவே நினைக்க கூடும். மலரை தன் மூக்கால் உரசும் போது உலகம் இத்தனை மிருதுவானதா என வியந்திருக்கும். நம்மைப் போல நாய் மலர்களில் பேதம் காணுவதில்லை. ஒரு நாய் தன் மகிழ்ச்சியின் அடையாளமாகவே மலரை ஆராதிக்கிறது.

வாசிக்க வாசிக்க கவிதை ஒரு மலரைப் போலவே விரிந்து கொண்டே போகிறது. அபூர்வமான தருணங்களைப் பதிவு செய்யும் போது கவிதை உன்னதமாகிவிடுகிறது. மேரி ஆலிவரின் கவிதைகளும் அப்படியானதே.

லூக் – மேரி ஆலிவர்

தமிழில் ஷங்கர ராமசுப்ரமணியன்

மலர்களை நேசித்த

ஒரு நாய்

என்னிடம் இருந்தது.

வயல் வழியாக பரபரப்பாக

ஓடும்போதும்

தேன்குழல் பூ

அல்லது ரோஜாவுக்காக

நின்றுவிடுவாள்

அவளின் கருத்த தலையும்

ஈர மூக்கும்

ஒவ்வொரு மலரின் முகத்தையும்

பட்டிதழ்களோடு ஸ்பரிசிக்கும்.

மலர்களின் நறுமணம்

காற்றில் எழும்வேளையில்

தேனீக்கள்

அவற்றின் உடல்கள்

மகரந்தத் துகள்களால் கனத்து

மிதந்துகொண்டிருக்கும்

போது

அவள் ஒவ்வொரு பூவையும்

அனாயசமாக ஆராதித்தாள்

இந்த பூ அல்லது அந்தப் பூவென்று

கவனமாக

நாம் தேர்ந்தெடுக்கும்

தீவிரகதியில் அல்ல-

நாம் பாராட்டும் அல்லது பாராட்டாத வழியில் அல்ல-

நாம் நேசிக்கும்

அல்லது

நேசிக்காத வழியில் அல்ல—

ஆனால் அந்த வழி

நாம் ஏங்குவது-

பூவுலகில் உள்ள சொர்க்கத்தின் மகிழ்ச்சி அது-

அந்தளவு மூர்க்கமானது

அவ்வளவு விரும்பத்தக்கது.

***

0Shares
0