டால்ஸ்டாய் வரவேற்கிறார்.

P பொன் மாரியப்பன்

தூத்துக்குடி

டால்ஸ்டாய் என்பவர் யார்? நான் ஏன்? அவரைத் தெரிந்துகொள்ளவேண்டும், பல கேள்விகளோடு நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.

டால்ஸ்டாய் பற்றி நான் வாசித்த முதல் நாவல் இதுதான். முதல் தொடக்கமே உள்ளம் உருக வைத்தது. முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை டால்ஸ்டாய் என் பக்கம் இருப்பதை உணர்ந்து கொண்டேன். அந்த வயது முதிர்ந்த டால்ஸ்டாயின் அட்டை படம் புதிய வாசனையாக என்னைச் சூழ்ந்தது.

நான் வாசிக்கும் போது அவரும் வாசித்தார். நான் துயரம் கொள்ளும்போது அவரும் துயரம் கொண்டார்.

யஸ்னயா போல்யான பண்ணையில் நுழைவு வாயிலுக்குள் டால்ஸ்டாய் என்னை அழைத்துச் செல்வது போன்ற பிரமை இருந்தது.

கிறிஸ்துமஸ் என்றவுடன் வீட்டில் தொங்கவிடப்படும் நட்சத்திரமும், கேக்குகளும், புத்தாடைகளும் தான் நினைவுக்கு வரும். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு 15 நாட்கள் முன்னதாகவே ஸ்டார்கள் தொங்க விடப்படும்.

டால்ஸ்டாய்க்கு பண்டிகையை விட எழுத்து தான் அவரது நிரந்தரக் கொண்டாட்டம். நிகரற்ற சந்தோசம்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் சிவப்பு அங்கி அக்ஸின்யா இறந்து விடுகிறாள் யார் இந்த அக்ஸின்யா ? எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்தாளுமையில் வாசகனைத் தேட வைக்கிறது .

8ம் வகுப்பு படித்த எனக்கு ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயை அறிமுகம் செய்தது, மண்டியிடுங்கள் நாவலின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களையே சாரும்.

டால்ஸ்டாய் பற்றித் தெரியாதவர்களுக்கெல்லாம் இந்த நாவல் ஒரு கொடை என்றே சொல்லலாம்.

சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தன் எழுத்து ஆளுமையாளும் எளிய நடையாலும் வெற்றியும் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். வாசிக்கும் ஒவ்வொரு வாசகர்களுக்குள் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு “தந்தையே வணக்கம் ! தந்தையே வணக்கம் !! என்று முழங்கிட வைக்கிறது.

வெளியானவுடனே நாவலை வாசித்து, அதன் அனுபவங்களைத் தங்களிடம் முதன்முதல் வாசகனாகக் கூற விரும்பினேன். ஆனால் காலம் கடந்துவிட்டது.

இந்த எழுத்துக் கண்ணாடியில் இரண்டு முகம் தெரிகிறது. ஒரு முகம் டால்ஸ்டாய் , மற்றொரு முகம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். நான் வாழும் வாழ்க்கையின் பிம்பங்களை அந்தக் கண்ணாடி தான் வெளிக்காட்டுகிறது.

மண்டியிடுங்கள் தந்தையே நாவலில் முதல் அத்தியாயம் சிவப்பு அங்கி அக்ஸின்யா முதல், கடைசி அத்தியாயம் நினைவின் மலர்கள் வரை, எல்லா வாக்கியங்களுக்கும் கோடு போட்டுக் கொண்டே தான் வாசித்து வந்தேன். கடைசி அத்தியாயம் அற்புதமான நினைவின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விடுகின்றன.

இந்த நாவலின் வழியாக டால்ஸ்டாயை பற்றி நன்கு புரிந்து தெரிந்து கொண்டேன். டால்ஸ்டாயை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்நாவலை வாசித்து முடித்த பின்பு பக்கம் வெற்றுப்பக்கத்தைத் தேடினேன். இன்னும் அதிகப் பக்கங்களை எழுதியிருந்தால் டால்ஸ்டாய் எல்லா உள்ளங்களிலும் முழுமையாக வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

நாவலின் ஒவ்வொரு வாக்கியத்தையும் கோடு போட்டுக் கொண்டே இருக்கும் போது கண்ணீர்த் துளிகள் தான் அளவுகோலாகப் பயன்பட்டது.

அக்ஸின்யா யார்?ஏன்? பண்ணை வீட்டில் வந்து வேலை செய்து இறந்து விடுகிறாள். என்ற கேள்விக்குப் பின்னே ஒரு வாழ்க்கையே மறைந்திருக்கிறது.

என்னைப் பண்ணை வீட்டில் விட்டு விட்டு அங்கே நடக்கும் சம்பவங்களைச் சந்தோசமாகக் கண்டு களித்திடச் செய்கிறார் எழுத்தாளர்

சிவப்பு அங்கி அக்ஸின்யா ஒவ்வொரு முறையும் டால்ஸ்டாயின் வருகைக்காகவும் வாசத்திற்காகவும் வீட்டின் முன் முற்றத்தில் காத்திருக்கிறாள். நினைத்துப் பார்க்கையில் அந்தக் காட்சி என் மனதை வருடியது. தெரியாத பருவ பிழையின் காரணமாக இருவருக்குள்ளும் நடந்த தவறுகளுக்குத் தங்களைத் தானே வருத்திக் கொண்டார்கள்.

ஆனால் இருவரும் நியாயம் கேட்கவில்லை. உரிமை கோரவில்லை டால்ஸ்டாய் மனதிற்குள்ளாகத் தினம் தினம் வருந்திக் கொள்வதை நாவலில் நன்றாக உணரமுடிகிறது. அக்ஸின்யா டால்ஸ்டாயின் வாரிசைச் சுமப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறாள். அவர்கள் இருவரும் சந்தித்த காட்சிகளை எழுத்தாளர் கூறும் போது ஆழமான கண்ணீர் பொங்கியது .

அக்ஸின்யா கையில் குழந்தை திமோஃபி வைத்துக் கொண்டு, திக்கற்றவளாக நிற்கையில் டால்ஸ்டாயின் பண்ணையிலேயே வேலைக்குச் சேர்ந்து கொள்கிறாள்.

அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகக் கண்ணன் இருப்பதுபோல டால்ஸ்டாயின் குதிரை வண்டிக்கு குதிரைக்காரனாக வருகிறான் திமோஃபி. தாயின் அரவணைப்பிலிருந்த திமோஃபிக்கு அன்றுதான் தந்தையின் வாசம் நெருக்கமாகிறது.

அந்த மணத்தை நம்மாலும் உணரமுடிகிறது. தாயின் அரவணைப்பில் விருப்பு வெறுப்புடன் வாழ்ந்த திமோஃபிக்கு ஏற்பட்ட உள்ளுணர்வுகளைக் குழந்தை முதல் பால்ய வயது வரை உள்ள கோபம், தாபம் வாசிப்பில் தொய்வு ஏற்படாதபடி எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுத்து நடையில் நம்மைச் சிறப்பாக வழிநடத்துகிறார்.

சிறுவயது முதல் பால்ய வயது வரை கூடவே வரும் நண்பன் முட்டாள் டிமிட்ரியிடம் எல்லாமே கற்றுக் கொள்ளலாம். இது தான் நாவலின் தொடக்கம்.

இந்நாவலை வாசிக்க எல்லாக் கதாபாத்திரங்களுடன் ஒன்றிணைந்து அவர்களில் ஒருவனாக நானும் வாழ்ந்து விட்டேன்.

நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள் இதில் நிறைய உள்ளன.

மண்டியிடுங்கள் தந்தையை நாவல் ஒரு நாள் ரஷ்யாவின் உயரிய விருதைப் பெறும் அன்று எஸ் ராமகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டி மண்டியிட்டு தலை வணங்குவேன்

0Shares
0