கவிஞர் க.வை. பழனிச்சாமி
‘இடக்கை’ நாவலின் மையம் எது? நாவலின் திறவுகோல் எங்கே இருக்கிறது? தூமகேது தான் நாவலின் திறவுகோல்.

இரண்டாவது அத்தியாயம் இப்படித் தொடங்குகிறது…..”முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் இறந்துபோன இரண்டாம் நாள், சத்கரில் ஆட்டுத்தோல் பதப்படுத்துபவனும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையும் இடக்கைப் பழக்கம் கொண்டவனும் வறியவனுமான தூமகேது திருட்டுக் குற்றம் சுமத்திக் கைது செய்யப்பட்டான்.அதே இரவில் ஒளரங்கசீப்பின் அந்தப்புர பணியாளரும் அரவாணியும் மஹல்தாருமான அஜ்யா பேகம் அஹமது நகர் அரண்மனையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாள்.”
மொகலாய மன்னனின் தனிமை, மனப்போராட்டம் என்று தொடங்கும் நாவல் அரசனை ஒதுக்கிவிட்டு மக்களிடம் நகர்கிறது. வரலாறு சுட்டாத, பதிவு செய்யாத தனி மனிதர்களின் வாழ்க்கையைப் பேசத் தொடங்குகிறது. நாவல் முடிகிறபோது தூமகேதுவின் வலி மக்களின் வலியாக மாறுகிறது
மறுக்கப்பட்ட நீதி வாசக மனதில் பிம்பமாக அதிர்கிறது.ஒளரங்கசீப்பை மக்களுக்குத் தெரியும்.அவர் காலத்து மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளைத் தெரியாது. பிஷாடன் போன்ற மன்னர்களின் வாழ்க்கையை வரலாற்றில் படிக்க முடியும்.தூமகேதுவின் குடும்பம் சிதைந்த வாழ்வை வரலாற்றில் காண முடியாது. அதையே நாவல் முன்வைக்கிறது
சிறை வாழ்விலிருந்து வெளியில்வந்த தூமகேது குழந்தைகளை மனவியைத் தந்தையைத் தேடிப்போகிறபோது யாருமற்ற வெளியில் மோதிக்கொள்கிறான். அவனது மனம் கேள்வி கேட்கிறது ”இவ்வளவுதானா வாழ்க்கை?”.நாவலில் பிறந்து அதற்குள்ளாகவே அடையாளமற்று இறந்துபோகிற எண்ணற்ற மக்களின் கேள்வியும் அதுதான். நாவலின் சாரமே அதிகாரமற்றவர்களின் வாழ்வெளியை வாசக மனதில் பதியச் செய்வது தான். நாவலின் எல்லாக் கதைகளும் இந்தக் கண்ணியில்தான் இணைக்கப்பட்டிருக்கிறது.