லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாவலாசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் இன்று காலமானார், மார்க்வெஸ் எனது ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர், அவரது கதைகளை எழுத்து எண்ணிப் படித்திருக்கிறேன்
எண்பதுகளின் துவக்கத்தில் மார்க்வெஸின் புத்தகங்கள் கிடைக்காமல் அதை வாங்குவதற்காகவே சென்னை, திருவனந்தபுரம், மும்பை, எனச் சுற்றியலைந்திருக்கிறேன்
கோணங்கி மார்க்வெஸின் படைப்புகளுக்காக கல்குதிரையில் சிறப்பிதழ் ஒன்று கொண்டுவந்திருக்கிறார், அந்தப் பணியில் அவர் கூடவே அலைந்த போது பகலும் இரவுமாக மார்க்வெஸ் பற்றிப் பேசியிருக்கிறோம்,
The Fragrance of Guava என்ற மார்க்வெஸின் நீண்ட நேர்காணல் தொகுப்பு எப்போதும் என் விருப்பத்திற்குரியது, அடிக்கடி அதை எடுத்து வாசிப்பது என் வழக்கம்.
நூற்றாண்டுகாலத் தனிமை நாவல் (One Hundred Years of Solitude ) போல ஒன்றை யாராலும் எழுதிவிட முடியாது, அது நம் காலத்தின் மகத்தான நாவல், கவிஞர் சுகுமாரன் இந்த நாவலை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். மார்க்வெஸின் சிறுகதைகளும் அபாரமானவை.
பத்திரிக்கையாளராகத் தனது வாழ்க்கையைத் துவக்கிய மார்க்வெஸ் தனது கதை சொல்லும் மொழியின் மூலம் மேஜிகல் ரியலிசம் என்ற புதுவகை எழுத்தை உருவாக்கினார்
நம் காலத்தின் மகத்தான படைப்பாளியின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
**