ஏங்கெல்ஸின் மனைவி

கார்ல் மார்க்ஸின் இணைற்ற நண்பனாகவும், சிறந்த தோழனாகவும் விளங்கியவர் ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸ்

ஏங்கெல்ஸின் மனைவி லிடியா எனப்படும் லிசி பென்ஸ் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய நாவல்-Mrs Engels வெளியாகியுள்ளது. ஐரீஷ் எழுத்தாளரான கெவின் மெக்ரே இதனை எழுதியிருக்கிறார்.

லிசி பென்ஸ் தோழர் ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸின் துணைவி. ஐரீஷ் பெண்ணான இவர் பஞ்சாலை ஒன்றில் சாயமிடும் தொழிலாளியின் மகள்., அவரது சகோதரி மேரி பர்ன்ஸை தான் ஏங்கெல்ஸ் காதலித்தார். மான்செஸ்டரில் மேரியுடன் ஏங்கெல்ஸ் ஒன்றாக வாழ்ந்த போது அவர்களுடன் இணைந்து வாழ்ந்தபடியே வீட்டினை நிர்வாகம் செய்து கொண்டிருந்தார் லிடியா.

ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸ் ஜெர்மனியில் பிறந்தவர். பருத்தி ஆலை உரிமையாளர் ஒருவரின் மகன், அவரது தந்தை ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸை வியாபரத்தில் ஈடுபடுத்த முனைந்தார். இதன்பொருட்டு அவரை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார்,, தனது 22 வயதில் தனது தந்தை பங்குதாரராகவிருந்த பஞ்சாலை ஒன்றை நிர்வாகம் செய்ய இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் சென்றார். அங்கே தான் மேரியின் அறிமுகம் கிடைத்தது.

பாட்டாளி வர்க்கத்தினைச் சேர்ந்த பெண்கள் என்பதால் லிடியாவும் மேரியும் ஏங்கெல்ஸிற்குத் தொழிலாளர்களின் உண்மையான நிலைமையைப் புரியவைக்க மான்செஸ்டரின் வீதிவீதியாக அழைத்துப் போனார்கள்.. தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தைக் கண்டு அதைக் கண்டித்து ஏங்கெல்ஸ் எழுதத் துவங்கினார்

மேரியும் ஏங்கெல்சும் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்துவந்தார்கள். 1863 ஜனவரி 7ல் மேரியின் மரணமடைந்தார். அதன்பிறகு லிடியாவோடு ஏங்கெல்ஸ் சேர்ந்து வாழத்துவங்கினார்.

இந்நாவல் லிடியா எப்படி ஏங்கெல்ஸை புரிந்து கொண்டார். அவர்களின் வாழ்க்கை எப்படியிருந்தது. மார்க்ஸ் ஜென்னி மற்றும் புரட்சிகர உலகோடு லிடியாவிற்கு என்னவகையான உறவிருந்தது என்பதை விளக்குகிறது.

1878 செப்டம்பரில் கடுமையான நோயுற்று மரணத்துடன் போராடினார் லிடியா. திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த லிடியா தனது மரணத்தின் முன்பு முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். இதன்பொருட்டு வீட்டிலே பாதிரியை அழைத்துவந்து ஏங்கெல்ஸ் லிடியாவை திருமணம் செய்து கொண்டார். அடுத்தச் சில மணி நேரங்களில் லிடியா இறந்து போனார்.

அவரது மறைவு ஏங்கெல்ஸை மிகவும் பாதித்தது. லிடியாவின் கல்லறையில் அவர் ஏங்கெல்ஸின் மனைவி என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்.

கொந்தளிப்பான வரலாற்று  நிகழ்வுகளுக்கு நடுவே நிழல் போல ஊடாடியிருக்கும் ஒரு பெண்ணின் கதை என்ற வகையில் இந்நாவல் லிடியாவின் வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

0Shares
0