பல்வேறு நாடுகளிலுள்ள நாடோடி இசைக்கலைஞர்களைப் பற்றிய சிறந்த ஆவணப்படம் லாட்சோ டிரோம்
டோனி கேட்லிஃப் இயக்கிய இந்தப் பிரெஞ்சு ஆவணப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது.
ரோமானி என்று அழைக்கப்படும் ஜிப்சிகள் உலகெங்கும் வாழுகிறார்கள். இவர்களின் பூர்வீகம் இந்தியா எனவும், 11ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் என்றும் கருதுகிறார்கள்
இந்தியாவின் தார் பாலைவனத்தில் தொடங்கி எகிப்து, துருக்கி, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் பிரான்ஸ் வழியாக நாடோடி இசைக்குழுவினர்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.
குறிப்பாக ஆரம்பக் காட்சிகளில் வரும் சிறுவனின் பாடலும் அவர்களின் பயணமும், ராஜஸ்தானில் நடைபெறும் நடனமும் மறக்கமுடியாதது. படம் முழுவதும் வெளிப்படும் மயக்கும் இசையும் .நடனமும் ,வியப்பூட்டும் வாழ்க்கை முறையும் அரிய அனுபவத்தைத் தருகிறது
நாம் இதுவரை கேட்டிராத குரல்களைத் திரையில் கேட்கும் போது பரவசம் ஏற்படுகிறது. ரோமானிகளின் வாழ்க்கை என்பதே கொண்டாட்டம் தான். இரண்டாம் உலகப்போரின் போது ரோமானிகள் துரத்தி வேட்டையாப்பட்டார்கள். அவர்களின் நாடோடி வாழ்க்கை ஒடுக்கப்பட்டது. தடைகளை மீறி பயணித்த ரோமானிகள் கொல்லப்பட்டார்கள். இந்த ஆவணப்படம் உலகின் எந்த மூலையில் வசித்தாலும் ரோமானிகள் சந்தோஷத்தைப் பரவவிட்டபடியே இருக்கிறார்கள் என்பதையே உணர்த்துகிறது.