பல்வேறு நாடுகளிலும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதமாக அவரது உருவப்படம் கொண்ட பணத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதுவும் அவர்களின் கதையுலகின் காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.







இந்திய எழுத்தாளர்களுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் கௌரவம் தபால்தலை அல்லது சிறப்புத் தபால் உறை வெளியிடப்படுவது தான். தி.ஜானகிராமன் நினைவாகச் சிறப்புத் தபால் உறை வெளியிடப்பட்ட நிகழ்வு ஒன்றில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். 2016ல் நடந்ததாக நினைவு.

கையெழுத்துப் பிரதிகள். முதற்பதிப்புகளைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. மகாகவி பாரதியின் குரல் எப்படியிருக்கும் என்று நமக்குத் தெரியாது. இவ்வளவிற்கும் அவர் காலத்திலிருந்த பலரது குரல்பதிவுகள் இன்று கேட்கக் கிடைக்கின்றன.

ரஷ்யாவில் குற்றமும் தண்டனையும் நாவலில் இடம்பெற்றுள்ள இடங்களைக் காணுவதற்காகச் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். விருப்பமான வாசகர்கள் ஒன்று கூடி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஸ்கோல்னிகோவ் சென்ற இடங்களுக்கு எல்லாம் நடந்து போகிறார்கள்.

இது போலவே ஜேம்ஸ் ஜாய்ஸ் நாவலுக்கும். வர்ஜீனியா வுல்ப் குறிப்பிட்டுள்ள லண்டன் வீதிகளுக்கும் பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஹெமிங்வே, மெல்வில் பிறந்த நாளில் அவரது நாவலை ஆளுக்கு ஒரு பக்கம் என வாசகர்கள் ஒன்று கூடி மாரத்தான் வாசிப்பு நடத்துகிறார்கள். நமது நூலகங்களே இது போன்ற வாசிப்புப் பயணங்களை முன்னெடுக்கலாம்.

டிக்கன்ஸ் காலத்தில் பூங்காவில் மேடை அமைத்து எழுத்தாளர்கள் கதை சொல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. தனது புதிய கதையை மக்கள் முன்பாக அவர்கள் படிப்பார்கள். திரளாக மக்கள் திரண்டு கேட்டிருக்கிறார்கள். இது போன்ற கதைவாசிப்பு நிகழ்வுகள் கட்டணம் கொடுத்துக் கேட்கும் நிகழ்வாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன.
சாகித்திய அகாதமி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு கதைவாசிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்டு நான் புதிய சிறுகதை ஒன்றை வாசித்தேன்.
பார்வைதிறனற்றவர்கள் தாங்கள் கேட்பதற்காக எழுத்தாளரின் குரலிலே அவரது கதைகள் ஒலிப்பதிவு செய்து தரப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தனது குரலிலே தனது சில கதைகளைப் பதிவு செய்து பொதுவான இணையதளம் ஒன்றில் பகிர்ந்து தரலாம்.
பொது நூலகங்களைப் புத்தகங்கள் இரவல் தரும் இடமாக மட்டும் கருதாமல் பண்பாட்டு வெளியாக மாற்ற வேண்டும். அங்கே கதை வாசித்தல். எழுதும் பயிற்சிமுகாம்களை நடத்துவது. சிறார்களுக்கான வாசிப்பு முகாம். எழுத்தாளர் திருவிழா, அரிய நூல்களின் அறிமுகம், பதிப்புத்துறை மற்றும் இலக்கியம் சார்ந்த கண்காட்சிகள். போன்றவை நடத்தப்பட வேண்டும்
கோடையில் சிறார்களுக்கெனச் சிறப்புப் புத்தகக் கண்காட்சி ஒன்றினை சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் சிறார்களின் வாசிப்பு மேம்படுவதுடன் சிறார் இலக்கியமும். சிறார் நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும் வளர்ச்சியடையத் துவங்கும்.
••