பூங்காவில் அந்த மனிதர் பேசிக் கொண்டிருப்பதை ஒரு இளைஞன் கேட்டுக் கொண்டிருந்தான்.
“ என் வீட்டின் ஜன்னல்களை எண்ணமுடியாது.. ஒவ்வொரு ஜன்னலைத் திறக்கும் போது நான் காணும் காட்சிகள் வேறு வேறானவை. மனிதர்கள் நிறைய ஜன்னல்கள் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும். எந்த ஜன்னல் வழியாக உலகை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று தெரியாது. வெட்டவெளி கற்றுத்தராததை ஜன்னல்கள் கற்றுத் தந்துவிடக் கூடியது என்றார் அந்த மனிதர்
“உங்கள் வீடு எங்கேயிருக்கிறது “எனக்கேட்டான் அந்த இளைஞன்
“மாதா கோவில் பின்புறமுள்ள தெரு. கடைசி வீடு. பெரிய மாமரமிருக்கும்“ என்றார்.
“நான் உங்கள் வீட்டிற்கு வரலாமா“ எனக்கேட்டான் இளைஞன்
“கண்டிப்பாக வரலாம்“ எனப் புன்னகைத்தார் அந்த மனிதர்
மறுநாள் மாலை அவரது வீடு தேடிச்சென்றான். வெளியே. மாமரம் தென்பட்டது. அவன் நினைத்தது போலப் பெரிய வீடில்லை. சராசரியான சிறியதொரு வீடு. அதில் ஒரு மாடி. வெளியே இருந்து பார்த்தால் இரண்டே ஜன்னல்கள்.
ஏன் இந்த மனிதர் இப்படிப் பொய் சொன்னார் எனக்குழம்பியபடியே காலிங்பெல்லை அடித்தான். அவரே கதவைத் திறந்தார்
“ஏன் இப்படிப் பொய் சொல்லுகிறீர்கள் “எனச் சற்றே கோபமாகக் கேட்டான் இளைஞன்
“என்ன பொய். எதற்கு இவ்வளவு கோபம். உள்ளே வா தம்பி “என்றார் அந்த மனிதர்
“எண்ண முடியாத ஜன்னல்கள் இருப்பதாகச் சொன்னீர்களே“ எனக்கேட்டான் இளைஞன்
“அதுவா.. ஜன்னல் என்றதும் மரஜன்னல் நினைவிற்கு வந்தால் அதற்கு நானா பொறுப்பு“ எனக்கேட்டுச் சிரித்தார்
“மரமோ கண்ணாடியோ இரும்போ எதுவாயினும் ஜன்னல்கள் வெளியே தெரியும் தானே“ என்றான் இளைஞன்
“வா மாடிக்குப் போகலாம்“ என அழைத்துக் கொண்டு போனார். அங்கே சுவர் முழுவதும் மரரேக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். எழுதும் மேஜையில், கட்டிலில், தரையில் என வரிசை வரிசையாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன.
“இது தான் நான் சொன்ன எண்ணிக்கையற்ற ஜன்னல்கள். புத்தகம் தான் எனக்கான ஜன்னல். அதைத் திறந்தவுடன் என் வீட்டின் எதிரில் உள்ள காட்சிகள் தெரியாது. ஆனால் தொலைதூர உலகம் தெரியும். அதன் மனிதர்கள் தெரிவார்கள். மாமன்னர்களைக் கூட இருந்த இடத்திலே காண முடியும். ஓராயிரம் குதிரைகள் ஒரு புத்தகத்திற்குள் ஓட முடியும்.
உலகிற்கு இவை வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள். எனக்கோ என் அறிவிற்கான, அனுபவத்திற்கான ஜன்னல்கள்..
மரமும் கல்லும் இரும்பும் கொண்ட வீட்டிற்கே பத்து பன்னிரண்டு ஜன்னல்கள் தேவை என்றால் ,பெருவாழ்க்கை வாழ முற்படும் மனிதனுக்கு எத்தனை ஜன்னல்கள் தேவை.. நீயே யோசித்துப்பார். “
அவன் வியப்போடு ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். ஸ்பினோசாவின் எதிக்ஸ் என்ற புத்தகமது. அதன் முகப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எனக் கையெழுத்துப் போட்டிருந்தது. அவன் வியப்போடு கேட்டான்
“ஐன்ஸ்டீன் படித்த புத்தகமா. “
“பார்த்தாயா. ஒரு புத்தகம் எழுதப்பட்டவனால் மட்டுமில்லை வாசித்தவனாலும் புகழ் பெறுகிறது. இந்தப் புத்தகம் என் பிறந்த நாளுக்கு எனது அமெரிக்க நண்பர் கொடுத்த பரிசு
புத்தகங்களுக்குள் காடும் கடலும், மலையும் அருவிகளும், பாலையும் பள்ளத்தாக்கும் இருக்கின்றன. உலகில் நீ காணும் சகல உயிரினங்களும், சந்திர சூரியர்களும் கூட புத்தகங்களுக்குள்ளே இருக்கிறார்கள். புத்தகங்களுக்குள்ளும் நல்ல மனிதர்கள், கெட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். புத்தகங்கள் சூழ வாழுகிறவனின் மகிழ்ச்சியை உன்னால் புரிந்து கொள்ள முடியாது
பாடப்புத்தகங்களுககு வெளியே எதையும் இதுவரை படிக்கவில்லை இன்றே வாசிக்கத் துவங்கு. உன் ஜன்னல் திறக்கும் போது அதன் புதிய வெளிச்சத்தையும்,காற்றையும்,முன்னறியாத காட்சிகளையும் நீ காணுவாய், உணருவாய். உன்னை விரிவடையச் செய்யும் போது உலகமும் சேர்ந்து விரிவடையும்“
அந்தப் பையன் ஆசையோடு கேட்டான்
“இங்கேயே அமர்ந்து இந்தப் புத்தகத்தைப் படிக்கலாமா“
“சந்தோஷமாக “என்றார் அந்த மனிதர்
அந்த இளைஞன் ஐன்ஸ்டீன் படித்த ஸ்பினோசா புத்தகத்தைப் புரட்டினான்.
நூற்றாண்டு காலம் ஒரு நொடியில் மறைந்து புத்தம் புதியது போலப் புத்தகம் அவனை வரவேற்றது.
சொற்களின் வழியே அவன் பறக்கத் துவங்கியிருந்தான்.
••