கூர்க்காவின் பகல்


விழித்துக் கொண்டிருந்த எத்தனையோ பின்னிரவுகளில் அந்த நடைச்சப்தத்தை கேட்டிருக்கிறேன். யாருமற்ற தெருவில் தனியே விசில் அடித்தபடியே சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்லும் நாற்பது வயதை கடந்த  கூர்க்காவை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். என்ன வேலையிது. எதற்காக இந்த மனிதன் தெருத்தெருவாக இரவில் சுற்றியலைகிறான் என்று புரியாமலும் கூட இருக்கும்.



ஒரு நாள் நேரத்திற்கு உறங்காமல் போனால் அடுத்தநாள் நமக்கு வேலை ஒடுவதில்லை. சதா எரிந்து விழுகிறோம். தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்கின்றவர்கள் கூட வருசம் முழுவதும் விழித்திருப்பதில்லை. இவர்கள் ஏன் தங்களை இப்படியொரு பணிக்கு ஒப்பு கொடுத்துவிட்டார்கள்.



நாம் உறங்க சென்ற பிறகு தான் கூர்க்காவின் உலகமே துவங்குகிறது. கூர்க்காவின் கண்கள் அடைத்து சாத்தபட்ட கதவுகளையும், யாருமில்லாத வீதிகளையுமே மட்டுமே காண்கிறது. அவனது காலடி படாத வீதிகளே இல்லை. இவ்வளவு மாபெரும் நகரை நுôற்றுக்கும் குறைவான கூர்க்காகள் பாதுகாக்கிறார்கள்.



தோற்றத்தில் ஒன்று போல இருந்தாலும் கூர்க்காகள் ஒவ்வொருவரும் விசித்திரமானவர்கள். குணமாற்றம் கொண்டவர்கள். தேர்ந்த உடற்கட்டும், கூர்மையான பார்வையும் இயல்பாகவே அவர்களுக்கு அமைந்திருக்கிறது.


ஆனால் நான் அறிந்த கூர்க்காகள் பலரும் தங்களுக்கு கிடைத்த ஒரு வேலை என்று மட்டுமே காவல்பணியை செய்கிறார்கள். அவர்களுக்கும் நம்மை போலவே பயமும் இயலாமையும் உள்ளது. வருமானம் போதாமல் கடன்வாங்கி விட்டு வட்டிக்காரர்களிடமிருந்து தப்பியோடும் கூர்க்காகள் சிலரை அறிந்திருக்கிறேன்.



நாம் பயத்தை வெளிப்படுத்திவிடுகிறோம். கூர்க்காகள் வெளிப்படுத்துவதில்லை. பயம் மனித இயல்பில் ஒன்று.  அதை சந்திப்பதற்கான துணிச்சல் மட்டும் நம்மிடமில்லை. அவர்கள் துணிச்சலானவர்கள்.


சென்னைக்கு வந்த புதிதில் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கூர்க்கா எனக்கு அறிமுகமானார். முப்பது வயது கடந்த தோற்றம். கையில் டார்ச்லைட்டும், பழைய சைக்கிள் ஒன்றும் அவரிடமிருந்தது.  கொச்சையான தமிழில் அவரால் பேச முடிந்தது.


நான் அறையில்லாமல் சென்னையில் அலைந்த நாட்களது. ஒரு நண்பனின் அறையில் படுக்க இடமில்லாமல் இரவெல்லாம் சுற்றியலைந்துவிட்டு தேநீர் குடிப்பதற்காக கடை தேடி அலைந்து கொண்டிருந்த மூன்று மணியளவில் அவர் என்னை தெருவில் நிறுத்தி விசாரணை செய்தார்


நானும் உங்களை போலவே இரவில் உறக்கமற்று சுற்றிதிரிகின்றவன் , உங்களுக்கு சம்பளம் தருகிறார்கள் எனக்கு அப்படி யாரும் தருவதில்லை என்று சொன்னேன். அவருக்கு சிரிப்பு வந்தது. எதற்காக இரவில் இப்படி சுற்றுகிறாய் என்று கேட்டார்.


எந்த ஒரு சிறப்பான காரணமும் இல்லை.  பகலில் உள்ள பரபரப்பு இல்லாத வீதிகளும் வீடுகளும் அடைத்து சாத்தபட்ட கடைகளும் எனக்கு பிடித்திருக்கின்றன,


தெருவை ஒரு முறை நன்றாக திரும்பி பாருங்கள். எத்தனை பெரிய இரும்புகதவுகள், எவ்வளவு பூட்டுகள், வெளிகதவை மூடி, வாசற்கதவை மூடி, படுக்கையறையை மூடி என எத்தனை பாதுகாப்பு வளையங்கள். மனிதர்கள் யார் மீது இவ்வளவு பயம் கொண்டிருக்கிறார்கள். ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் இடையில் ஒரு தும்பை செடி வளர்வதற்கு கூட இடமில்லாமல் ஏன் வீடு கட்டிக் கொள்கிறோம்.


இந்த இரவில் மின்னும் இத்தனை கோடி நட்சத்திரங்களும் இவ்வளவு ஏகாந்தமான காற்றும், பின்னிரவின் ஆகாசமும், பூ உதிரும் மரங்களும் ஏன் மனிதர்களுக்கு தேவையற்று போய்விட்டது என்று கேட்டேன். அவருக்கு நான் வேடிக்கையான ஆளாக தோன்றியிருக்க வேண்டும். கொஞ்சம் நடந்து போனால் டீக்கடை இருக்கும். ஒரு தேநீர் குடிக்கலாமா என்று கேட்டார்.


இருவரும் நடந்து போனோம். கடை திறந்திருந்தது.தேநீர் அருந்தியபடியே கூர்க்காவிடம் நீங்கள் இரவில் உறங்கி எவ்வளவு வருசமாகியது என்று கேட்டேன். அவர் சிரித்து கொண்டே அது பழகி போய்விட்டது. ஒரு நாளைக்கு ஆறுமணி நேர துôக்கம் போதும். நேரம் கிடைக்கும் போது துôங்கி கொள்வேன் என்றார்.


இவ்வளவு வீடுகள் இவ்வளவு வீதிகளை சுற்றி வந்து உங்கள் பார்வையில் நகரம் எப்படியிருக்கிறது  என்று கேட்டேன். அவர் தேநீர் குடித்தபடியே சொன்னார்


மனிதர்கள் இல்லாத போது தான் தெருக்கள் அழகாக இருக்கின்றன. பகலில் தான் எத்தனை சண்டை, சச்சரவு போராட்டங்கள். நல்லவேளை உறக்கம் என்ற ஒன்று மனிதர்களுக்கு இயல்பாக ஏற்பட்டுவிடுகிறது. இல்லாவிட்டால் எவ்வளவு பிரச்சனை யோசித்து பாருங்கள் என்றார்


அவர் சொன்னது முழுமையான உண்மை. மனிதர்கள் உறங்கும் போது அவர்கள் மட்டும் நிம்மதி கொள்வதில்லை. அவர்களோடு சேர்ந்து ஊரும் உலகமும் நிம்மதி கொள்ளவே செய்கிறது.


கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு பிறகு அவர் விடை பெற்று சென்றார். அதன் பிறகு சில வாரங்களுக்கு பிறகு ஒரு நாள் தேவிதியேட்டரின் பின்புறம் உள்ள ஒரு உணவகத்தில் அதே கூர்க்காவை சந்திக்க நேர்ந்தது. அவரோடு அவரது சகோதரன் போலவே சாயலில் இருந்த இன்னொரு கூர்க்கா இருந்தான். அவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். என்னை பார்த்து சிரித்தபடியே கையசைத்தார்.


கூர்க்காவின் அறைக்கு நான் வரலாமா என்று கேட்டேன். அவர் வெட்கத்துடன் மிகச்சிறிய அறை என்று சொன்னார். பரவாயில்லை போகலாம் என்றதும் என்னை அவரது அறைக்கு அழைத்து போனார்.


புறாக்கூண்டு போன்று இருண்டு போயிருந்த ஒற்றையறை. அதனுள் மெல்லிய நாற்பது வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. ஒரேயொரு சூட்கேஸ். நாலைந்து உடைகள். சிவப்பு நிற பிளாஸ்டிக் வாளி. கெரசின் ஸ்டவ். நாலைந்து பாத்திரங்கள்.


கூர்க்கா தன் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை காட்டினார். புகைப்படத்தில் தனது குடும்பத்தோடு இருந்த அவரது முகத்தில் இருந்த சிரிப்பு இப்போது இல்லை.  தனக்கு மாசம் ஆயிரத்தி இருநூறு ரூபாய் சம்பளம் என்றும் அதில் முந்நுôறு ருபாய் போக மீதமுள்ளதை ஊருக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என்று சொல்லி நேப்பாளத்தில் அதன் மதிப்பு அப்படியே இரண்டு மடங்கிற்கும் மேல் என்று சொன்னார். அவர்களைப் பொறுத்தவரை நமது ஊர் தான் வெளிநாடு.


இரவெல்லாம் விழித்து காவலிருக்கும் கூர்க்காவின் பகல் எப்படியிருக்கும் என்று கேள்வி மனதில் எழுந்தது. நான் கேட்காமலே அவரே சொல்லத் துவங்கினார்.


காலை அறைக்கு வந்தவுடனே உறங்க முடியாது. ஆறரை மணிக்கு உறங்கி பத்துமணிக்கு எழுந்துவிடுவேன். அதன்பிறகு சமைக்க வேண்டும். துணி துவைக்க வேண்டும். மதியம் சில மணி நேர துôக்கம். அவ்வளவு தான் எங்கள் வாழ்க்கை. இந்த வேலையில் விடுமுறை என்பதே கிடையாது. ஊருக்கு ரெண்டு வருசத்திற்கு ஒரு முறை செல்வோம். அப்போது தேவையான அளவு உறங்கி கொள்வது உண்டு என்றார்


யோசிக்கையில் நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தை பார்க்கையில் கூர்க்காவிற்கு தன் பிள்ளைகள் நினைவிற்கு வராமலா போவார்கள். அல்லது பின்னிரவில் பூக்கும் மலர்கள் அவனுக்கு மனைவியை நினைவுபடுத்தாமலா இருக்கும். கூர்க்காவின் தனிமை சொல்லில் அடங்காதது. அது ஒரு ரகசிய வலி .


குடும்பத்தையும் குழந்தைகளையும் பிறந்த மண்ணையும் பிரிந்து வாழ்கின்றவர்கள் இயல்பிலே உறக்கமற்று போனவர்கள் தானே. கூர்க்காகளின் விழிப்பிற்கும் இது தான் காரணமா?


**


இது போன்ற கட்டுரைகளை உள்ளடக்கிய குங்குமம் இதழில் நான் எழுதிய  ஆதலினால் என்ற கட்டுரைத் தொடர் தனிநூலாக விஜயா பதிப்பகத்தால் வெளியீடப்பட்டுள்ளது. அத்துடன் நான் மொழி பெயர்த்த ஆலீஸின் அற்புத உலகம் என்ற லூயிகரோலின் குழந்தைகள் நாவலும் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.


தொடர்பிற்கு :  விஜயா பதிப்பகம் 20 , ராஜ வீதி. கோவை. தொலைபேசி. 2394614. 2382614



 

0Shares
0