எஸ்.இராமகிருஷ்ணனின் சஞ்சாரம் மனித மனங்களின் சிதறல்களை,வாழ்வின் தவிர்க்க இயலா யதார்த்தத்திற்கும்,மனங்களின் எல்லைகளுக்குமிடையிலான போராட்டங்களைக் காண்பிக்கிறது.
பக்கிரியின் கதை நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞனின் சுயமரியாதையை வெளிப்படுத்துகிறது.
“மனுசன் அற்பப்புழு,
இசைக்கு தாய்ப்பாலு நாதஸ்வரம்”
கலையை நேசிக்கும் மனிதர்களின் மனதில் தான் இப்படிச் சொற்கள் உருவாகும்.
எலுமிச்சை மணம் என்பது கடந்த காலத்தையும் நினைவுகளையும் இணைக்கும் மரணத்தை மாலிக்கபூருக்கு அளிக்கிறது லட்சய்யாவின் இசை.உண்மையில் எல்லா மனங்களின் ஆழங்களும் ஏதோ ஒரு வாசத்தில் மரணத்தை,காலங்களை நினைவூட்டும்.மணம் என்பதே இங்கு ஒரு குறியீடு தான்.
கரிசல் மண்ணின் இசையை எஸ்.இராமகிருஷ்ணன் மிக யதார்த்தமாய்,உண்மையாய் பதிவு செய்திருக்கிறார்.ஊரோடிகள் என்னும் பறவைகள் பற்றிய பதிவுகள் மிக அற்புதமானவை.இலக்கியத்தில் உணரும் அந்தரங்கத் தருணங்கள் இப்படிப்பட்டவையே என்று நான் எண்ணுவதுண்டு.
‘மண்ணு வேணுமா,பொன்னு வேணுமா’என்று கேட்கப்படும் தருணம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு.நாம் தான் தேர்ந்தெடுக்க வேணும்.இங்கே மண் என்பது மழையை,வளமையைக் குறிப்பதாக உணர வைக்கிறார் எஸ்ரா.
ஒரு சொட்டுக் கண்ணீரில் துளிர்க்கும் வேம்பு கரிசலின் அடையாளமாகக் கூறப்படும் தருணம் அற்புதமானது.
செருப்புத் தைக்கும் கருப்பையாவிற்கு நாதஸ்வரம் கற்பிக்கும் கண்ணுசாமி நாயனகாரரும்,மாட்டிக் கொண்ட திருடனுக்கு ஏழு வீட்டுச் சோறு போடச் சொல்லும் கொண்டம்மாக் கிழவியும் கரிசல் மண்ணின் அடையாளங்களாய் புனைவில் சஞ்சரிக்கிறார்கள்.
கச்சியப்ப சாமிகள்,ராசையா என்று ஒவ்வொருவரும் தனித்த ஆடையாளங்கள். நாதஸ்வரம் கற்றுக் கொள்ள வரும் ஹாக்கின்ஸ்,அவனுடன் மடத்திலுள்ளவர்களின் உறவு என்று அழகாக எழுதுகிறார் எஸ்ரா.இறுதியில் அவன் லட்சுமியைத் திருமணம் செய்வது கவிதை…
கொடுமுடியில் பக்கிரியும் ரெத்தினமும் தலைமறைவாக இருக்கையில் இருவருக்கும் உண்டாகும் மனத் தாங்கல்கள் யதார்த்தமானவை.பக்கிரி என்னும் மனிதனின் கதை மூலம் இசையை,நாதஸ்வரத்தை,மனித வாழ்வின் சஞ்சலமான தருணங்களை,கரிசல் மண்ணை உணரவைக்கிறது நாவல்.மிக அற்புதமான வாசிப்பனுபவம்.
