கோடை இடியின் உக்கிரம், மின்னல்வெட்டின் வலிமை, காற்றோடு கூடிய மழை, தோழர் எஸ் ஏபி வீட்டிலிருந்து மழையைப் பார்த்துக் கொண்டிருநதேன், மகிழ்ச்சியான அனுபவம்
மழைக்குப் பிறகான மதுரை சற்று குளிர்ந்திருக்கிறது,
வழக்கமான பணிகள் அத்தனையும் தூக்கி ஒரம் கட்டி வைத்துவிட்டு படிப்பது, இசை கேட்பது, படம் பார்ப்பது, பயணம் என ஒய்வாக கழிகிறது நாட்கள்
வீணையின் குரல் என்ற எஸ். பாலசந்தர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வாசித்தேன்,
எஸ். பாலச்சந்தரின் பல்துறை சார்ந்த ஆளுமையைப் பற்றி அரிய தகவல்கள், நிகழ்வுகளை விக்ரம் சம்பத் சிறப்பாக எழுதியிருக்கிறார்
The Railway Man படம் பார்த்தேன், ஜப்பானிய ராணுவத்தால் பிடிக்கபட்ட பிரிட்டீஷ் ராணுவ வீரர் எரிக் பர்மா ரயில்வே பணியில் ஈடுபடுத்தபடுகிறார், அங்கே அவர் சந்தித்த நெருக்கடிகள், வன்முறைகள் அவருக்குள் பல வருஷங்களுக்குப் பிறகும் துர்கனவைப் போல தொடருகின்றன,
கடந்த காலத்தின் வலியைத் தாங்கமுடியாமல் த்ன்னைச் சித்ரவதை செய்த ஜப்பானிய ராணுவ அதிகாரியைத் தேடி கண்டுபிடிக்க முற்படுகிறான் எரிக்,
இசையும் ஒளிப்பதிவும் அற்புதமாக உள்ளன, Colin Firth ன் இயல்பான நடிப்பு, ஜப்பானிய ராணுவதத்தின் குரூர முகத்தைக் காட்டும் காட்சிகள், மறக்கமுடியாத படம்,
கார்ல் மார்க்ஸிற்கும் ஜென்னிக்குமான காதலை,மார்க்ஸின் குடும்ப வாழ்க்கையை ,நெருக்கடியான, வறுமையான வாழ்க்கைச் சூழலை விவரிக்கும் Love and Capital/ Mary Gabriel நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்,
மார்க்ஸின் இரண்டு மகள்கள் எதனால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள் என்பதைப் பற்றிப் படிக்கும் போது மிகுந்த வேதனையாக இருந்தது
மார்க்ஸின் வாழ்க்கையை மிகவும் துல்லியமாக விவரிக்கிறது இந்த நூல்
***
