கடைசிப் பெண்

ஆங்கிலத்தின் வருகை பல ஆதி இனக்குழுக்களின் மொழியை உலகிலிருந்து முற்றிலும் அழித்து ஒழித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பூர்வகுடி மக்களின் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று தொன்மையான மொழியறிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்றாக்கி விட்டது ஆங்கில அதிகாரம்.



சமீபத்தில்  அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென்மத்திய பகுதியில் பல ஆயிரம் வருட பராம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசி பெண் மேரி ஸ்மித்  ஜோன்ஸ்  இறந்து போனார். இவள் தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண். அவளது மரணத்தோடு உலகிலிருந்து ஒரு மொழி முற்றிலுமாக மறைந்து போனது. இனி அந்த மொழி பேசும் இனக்குழு உலகில் யாருமில்லை.


பல்கலைகழகங்களின் முயற்சியால் அந்தச் மொழி சொற்கள் சேகரிக்கபட்டுள்ளன. ஆனால் அதை பேசத்தெரிந்த பூர்வகுடி மனிதர் எவரும் இனி உலகில் இல்லை.


இப்படி உலகெங்கும் ஆயிரக்கணக்கான மொழிகள் அழிந்து கொண்டுவருகின்றன. சீனாவில் பெண்கள் மட்டுமே பயன்படுத்திய  நூசு (nu shu  )என்றொரு மொழியிருந்தது. அந்த மொழியை அந்தரப்புரங்களில் சுகப்பெண்களாக இருந்தவர்கள் உருவாக்கினார்கள். நூசு என்றாலே பெண் எழுத்து என்று சீனமொழியில் பொருள். இதை ஆண்கள் அறியாத ரகசிய மொழியை போல பெண்கள் தங்களுக்குள் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் 1940களுக்கு பின்பு சீன அரசாங்கம் இந்த மொழியைப் பயன்படுத்த தடை விதித்தது.



யாங் ஹூனாய் (Yang Huanyi  )என்ற பெண் இந்த மொழி அறிந்த கடைசிப்பெண். அவள்  2004 ம் ஆண்டு தன்னுடைய 98 வயதில் இறந்து போனாள். அன்றோடு இந்த ரகசியமொழி அழிந்தது.



ஈயாக் மொழி பேசிய பூர்வகுடிகள் மிக புராதானமானவர்கள். அலாஸ்காவின் மத்தியபகுதியில் வசித்த இவர்கள் கொஞ்சம் கொஞ்சம் இடம் பெயர்ந்தார்கள். அப்படி தன்னுடைய பூர்வ நிலத்திலிருந்து வெளியேறி வந்தவள் தான் மேரி ஸ்மித் ஜோன்ஸ்.  ஆங்கிலம் பேசுகின்றவரை திருமணம் செய்து கொண்டாள். அவளுக்குக் குழந்தைகள் பிறந்த போது எவரும் ஈயாக் மொழியை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆங்கிலம் பேசுகின்றவர்களாகவே வளர்க்கபட்டார்கள். ஆகவே தனது மொழியைப் பகிர்ந்து கொள்ள யாருமில்லாத அக நெருக்கடியில் பல காலம் அவதிப்பட்டிருக்கிறார் மேரி ஜோன்ஸ்


பூர்வகுடிகளின் நலன்களை பாதுகாக்க போராடிய மேரி அலாஸ்கா பல்கலைகழக உதவியுடன் ஈயாக் மொழியின் சொற்களை தொகுத்து ஒரு அகராதியை உருவாக்கினார். இன்று ஈயாக் போலவே இருபதிற்கும் மேற்பட்ட அலாஸ்கா பகுதி மொழிகள் அழியும் தருவாயில் உள்ளன.


சொர்க்கத்திற்கு செல்வதற்காக பேபல் எனப்படும் கோபுரத்தை கட்ட துவங்கிய போது மனிதர்கள் சொர்க்கத்திற்கு வந்து சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொருவருக்கும் ஒரு மொழியை உண்டாக்கி அவர்களுக்குள் பேதமும் சச்சரவும் புரியாமையும் உண்டாக்கியதாக பைபிளில் வருகிறது.


மொழி உண்டாக்கபட்டதே பிரிவினைக்குத் தானோ என்று இன்றும் பல நேரங்களில் உணர முடிகிறது.


மனிதர்கள்  அதி நாகரீக வளர்ச்சி அடைந்த போது செய்த பெருந்தவறு தங்களது மண்ணின் பூர்வ மொழிகளை காரணமின்றி அழித்ததும், அப்படி அழிக்கபட்டது குறித்து எவ்விதமான குற்றவுணர்வுமின்றி இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதுமே. இந்தியாவிலும் இப்படி பல சிறிய மொழிகள் அழிக்கபட்டிருக்கின்றன. இன்றும் ஆயிரக்கணக்கான மொழிகள் உலகெங்கும் அழியும் தருவாயில் உள்ளதாக மொழியியல்அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்


மேரி ஜோன்ஸ் என்ற கடைசிப்பெண்ணிற்குள் தேங்கிய ஈயாக் சொற்கள் அவளை எவ்வளவு படுத்தியிருக்கும். தனது சொந்த மொழி வழியாக தனக்குள் உருவான நினைவுகளை சுமந்து கொண்டு அவள் எவ்வளவு வேதனை பட்டிருப்பாள்.


ஒரு இனத்தை அழிப்பதற்கு முதலில் அதன் மொழியை அழிப்பார்கள் என்று சொல்வார்கள். இன்று பூர்வகுடி இனமும் மொழியும் ஒருங்கே அழிக்கபட்டு அந்த மொழி வெறும் அடையாள குறியீடாக மட்டுமே எஞ்சி நிற்கிறது


இவளை போலவே அமெரிக்க பூர்வகுடி மொழியான  கடஹ அறிந்த பூர்வகுடியான Carlos Westez  சில வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். அவர் தான் அந்த மொழியின் கடைசி மனிதன். பாடகரான இவர் தன் மொழியின் சாசகங்களை பாடல்களாக்கி பாடுவதில் விற்பன்னர். சிவப்பிந்தியர்களை பற்றி அறிந்து கொள்ள விரும்பிய பலர் இவரை தேடி சென்று பாடி கேட்டு விபரம் அறிந்து போனார்கள். ஆனால் இவரது மரணத்தோடு அந்த பெரிய பராம்பரியம் முற்றிலுமாக உலகிலிருந்து துண்டிக்கபட்டது.



இப்போது அர்ழ்ங் என்ற எத்தியோப்பிய மொழி அறிந்த கடைசி ஆள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த மொழியில் அவரோடு பேசிக் கொள்ள யாருமில்லை. அது புரிந்து கொள்ளபட முடியாத பெருந்துயரம்



இப்படி ஒவ்வொரு நாளும்  மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக உலகிலிருந்து மறைந்து வருகின்றன.



நூசு என்ற சீனப்பெண்களின் ரகசியமொழியின் வரிவடிவங்களை ஆராய்ந்த மொழியியல் ஆய்வாளர் அதன் ஒவ்வொரு சொல்லும் அற்புதமான  பூ போல உருவாக்கபட்டிருக்கிறது என்று வியக்கிறார்.


பேசும்மொழி யாதாகினும் பெண்கள் உலகெங்கும் ஒரு ரகசிய மொழியை கைக்கொண்டிருக்கிறார்கள். அந்த மொழியின் பெயர் கதை. உலகின் மிகப்பெரிய கதை சொல்லி ஆயிரத்தி ஒரு அராபிய இரவுகள் கதைகளை சொன்ன அரபு நாட்டைச்சேர்ந்த ஷுரஷாத் என்ற இளம்பெண்ணே.



இன்றைய உலகம் மனிதர்களின் பேரழிவையே கண்டு கொள்ளாமல் முன்சென்று கொண்டிருக்கிறது. மொழிகளின் அழிவை கேட்பதற்கும் புரிந்து கொள்ளவும் யார் இருக்க போகிறார்கள்.



காற்றில் அடித்து செல்லப்படும் மணலின் விதியை எவரும் கைகொண்டு தடுக்கமுடியாது என்பது போல உலகிலிருந்து ஆதிமொழிகள் கரைந்து மறைவதையும் பார்த்துக் கொண்டு மட்டும்தானிருக்க முடிகிறது.



ஆனால் இத்தனை கோடி தமிழ் மக்கள் வாழ்கின்ற சொந்த நிலத்தில் பல்லாயிரம் வார்த்தைகளும் வளமான உச்சரிப்பு முறையும் இலக்கிய பாரம்பரியமும் கொண்ட தமிழும் உலகின் அழிந்து வரும் மொழி ஒன்றைப் போல வீடுகள், அலுவலகம், கல்வியகம் ஊடகம் என எங்கும் விலக்கபட்டு புறந்தள்ளப்படுவது தான்  புரிந்து கொள்ள முடியாத முரண்.



**


 

0Shares
0