இரவிற்கு எல்லாம் தெரியும்

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப்படையால் படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் குறித்து நிறைய ஆவணங்கள், புனைகதைகள், நாடகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆனி பிராங்கின் நாட்குறிப்புகள், (The Diary of Anne Frank)

பதிமூன்று வயதான யூதச்சிறுமி எழுதிய இந்த நாட்குறிப்புகள் வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஆனி பிராங்க் டச்சு மொழியில் இந்த டயரியை எழுதியிருக்கிறாள்

ஜுன் 14 1942ல் டயரி துவங்குகிறது, முதல் 22 நாட்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையை விவரிக்கும் இந்த நாட்குறிப்பு அதன் பிறகு 1944 வரையான அவர்களின் ஒளிந்துவாழும் காலத்தைப் பதிவு செய்துள்ளது

ஆனி தனது டயரிக்கு கிட்டி என்று பெயர் சூட்டியிருக்கிறார், ஒரு தோழியிடம் நடந்த செய்திகளைச் சொல்வதைப் போலவே நாட்குறிப்புகளை எழுதியிருக்கிறாள்.

காகிதம் மனிதர்களை விடவும் பொறுமையானது, அந்தப் பொறுமையை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு இடத்தில் ஆனி குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது,

ஹிட்லர் ஆட்சியின் போது யூதர்கள்  எப்போதும் மஞ்சள் நட்சத்திரச் சின்னத்தை அணிந்து கொண்டிருக்க வேண்டும், டிராம்களில் பயணிக்கவோ, வாகனம் ஒட்டவோ அனுமதி கிடையாது, மாலை மூன்று மணியில் இருந்து ஐந்து மணிக்குள் மட்டுமே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவேண்டும், இரவு எட்டுமணிக்கு மேலே வெளியே வரக்கூடாது, வீட்டின் முற்றத்தில் அமரக்கூடாது, நாடகம் சினிமா பார்ப்பது கண்டிக்கதக்கது,

நீச்சல், விளையாட்டுபோட்டிகள், எதிலும் பங்கேற்க கூடாது, யூதர்களுக்கான தனிப்பள்ளியில் மட்டுமே சேர்ந்து படிக்க வேண்டும், பொது இடங்களில் சைக்கிளை தள்ளிக் கொண்டு தான் போக வேண்டும், என்பது போன்ற  கடுமையான தடை சட்டங்கள் இருந்தன, அந்தச் சூழலுக்குள் தான் ஆனி வாழ்ந்தாள்,

இன்னொரு பக்கம் இனத்தூய்மை செய்வதாக யூதர்களை மொத்தமாக முகாமில் அடைத்து விஷவாயு செலுத்திக் கொன்று குவித்தது நாஜி ராணுவம், குழந்தைகளை கூடத் தலையை மொட்டையடித்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தது ஹிட்லரின் ராணுவம், இது  போன்ற கொடுமையான சித்ரவதை முகாமில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பதற்காக யூதக் குடும்பங்கள் ரகசிய இடங்களில் ஒளிந்துவாழத் துவங்கினார்கள்,

அதில் ஒன்று தான் ஆனி பிராங்கின் குடும்பம், அப்பா ஒட்டோபிராங்கின் அலுவலகத்தில் உள்ள ரகசிய அறை ஒன்றில் ஒளிந்து வாழ்ந்த ஆனி தனது இருண்ட வாழ்க்கையின் அவலங்களை, வலியை, வேதனைகளை நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறாள்,

60க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ள இந்த நூல் ஆனியின் 13 மற்றும் 14வது வயதில் எழுதப்பட்டதாகும், தனது 15வது வயதில் அவள் ஹிட்லரின் ராணுவத்தால் கண்டுபிடிக்கபட்டு பெர்ஜன் பெல்சன் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே  நோயுற்று இறந்து போனாள், அவர்கள் குடும்பத்தில் தப்பி பிழைத்த ஒரே நபர் அவளது அப்பா ஒட்டோ பிராங்க் மட்டுமே

ஜெர்மனியின் பிராங்பெர்ட் நகரில் 1929 ஜுன் 29ல் ஆனி பிறந்தாள்,  அவளது அப்பா ஒட்டோ பிராங்க், அம்மா எடித், சகோதரி மார்க்காட், ஹிட்லரின் அடக்குமுறைக்கு பயந்து ஆனின் குடும்பம் ஆம்ஸ்டர்டாமிற்குத் தப்பி சென்றது, 1942ம் ஆண்டு ஆனின் 13வது பிறந்தநாள் அன்று அவளுக்குப் பிறந்தநாள் பரிசாக ஒரு டயரி கிடைத்தது, அதைப்பயன்படுத்தி அவள் தனது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்யத் துவங்கினாள்,

13 மற்றும் 14 ஆகிய இரண்டு வருசங்களில் அவள் எழுதிய நாட்குறிப்பில் இருந்து தொகுக்கபட்டது தான் இந்த நூல், அவளது டயரியின் சில பகுதிகள் காணமல் போய்விட்டன, சில கிழிக்கபட்டிருக்கின்றன

இந்த டயரி உண்மையானதில்லை, இது ஒரு போலி என சில விமர்சகர்கள் குரல் எழுப்பினார்கள், ஒட்டோ பிராங்க் தனது மகளின் உண்மையான நாட்குறிப்பின் பக்கங்களை வெளியிட்டு அந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார், ஆனி பிராங்கின் நாட்குறிப்பு திரைப்படமாகவும் வெளியாகி உள்ளது

ஆனின் நாட்குறிப்புகளில் மூன்று விஷயங்கள் தீர்க்கமாக எழுதப்பட்டிருக்கின்றன, ஒன்று  பதின்வயதுள்ள அவளது காதல் உணர்ச்சிகள், அதில் ஏற்படும் தவிப்புகள், இனம்புரியாத இன்பம்,

குறிப்பாக பீட்டரோடு அவளுக்கு இருந்த ஆண் நட்பு, அதை அவள் உணரும் விதம், ரகசிய அறைக்குள்ளாக வளரும் அவர்களின் காதல், முடிவற்ற உரையாடல்கள், அதில் ஏற்படும் மனசஞ்சலம், கவலை,அம்மாவோடான சண்டை, மற்றும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாத காதலின் உற்சாகம் நுட்பமாக விவரிக்கபடுகிறது

ஆனி உலகவிஷயங்களைத் தெரிந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வமானவளாக இருக்கிறாள், குறிப்பாக மன்னர்கள், அவர்களின் அகபுற உலகம் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறாள், ரேடியோக் கேட்பதன் வழியே யுத்தகால நெருக்கடிகளை, அரசியல் சூழல்களை அவள் அறிந்து கொள்கிறாள், ஆனி பிராங்க் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அதிகம் பேசவும் விவாதிக்கவும் விரும்புகிறவளாகவே இருக்கிறாள், ஆனால் அதைப்பற்றி பெண்கள் அதிகம் பேசிக்கொள்வதில்லை என்பதால் அவள் தனக்குத்தானே அவற்றைச் சொல்லிக் கொள்கிறாள்,

ஒளிந்துவாழும் ரகசிய இடத்தில் அவள் ஆண்களோடு பேசிப்பழகுவது அம்மாவிற்கு பிடிக்கவில்லை, பதின்வயதுப் பெண்களின்  ஒழுக்கம் குறித்து அம்மா மகளுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது, அப்பா அவளை எப்போதுமே பரிவுடன் நடத்துகிறார், ஆனிற்கும் அப்பாவின் மீது தான் அதிக பாசமிருக்கிறது.

மொழிபெயர்ப்பு செய்வது, பிரெஞ்சு கற்றுக் கொள்வது, சுருக்கெழுத்துபடிப்பது என்று அவள் தனது புறஉலகின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஏதேதோ செய்ய முயலுகிறாள், ஆனால் அடிமனதில் வதைமுகாமின் மரண அச்சம் அவளை பிடித்தாட்டுகிறது, இந்த மனநிலைக்கு மாற்றுமருந்தாக அமைவது அவளிடம் உள்ள புத்தகங்களே,

ஆம் நண்பர்களே, இருண்ட வாழ்விற்குள்ளும் புத்தகங்களே அவளை உயிரோடு வைத்திருந்தன, புத்தகங்களே அவளை ஆறுதல்படுத்தின, புத்தகங்களே அவளுக்கு வெளியுலகின் சாளரமாக இருந்தன, தான் படித்த புத்தகங்களோடு ஆனி பேசினாள், ஒரு கதாபாத்திரம் போல புத்தகத்தினுள் கரைந்து போய்விட மாட்டோமா என்று ஆசைப்பட்டாள், புத்தகங்களே வாழ்வின் மீதான கடைசிப் பிடிப்பாக இருந்தன

ஆனியின் டயரியிலுள்ள மூன்றாவது அம்சம் தனது குடும்பம் எப்படி நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதை இயல்பாக சுட்டிக்காட்டுவதாகும், குறிப்பாக ஒளிந்துவாழும் காலத்தில் உடனிருக்கும் ஒருவரின் மனைவி தனது அப்பாவை மயக்குவதற்கு செய்யும் முயற்சிகள் அவளுக்கு எரிச்சலூட்டுகின்றன, குளிப்பதற்கு இடமில்லாமல் அம்மா இருட்டில் நின்று குளிப்பது அவளுக்குக் கவலை தருகிறது,  உணவுத்தட்டுபாடு, ராணுவம் பிடித்துக் கொண்டு போய்விடுமோ என்று பயந்து நாள் எல்லாம் மௌனமாக இருப்பது, மின்சாரமில்லாத அறையினுள் சவக்குழியில் வாழ்வது போன்ற மனநெருக்கடியை உணர்வது என்று ஆனி நாட்குறிப்பில் தனது அகநெருக்கடிகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறாள், பல இரவுகளில் அவள் உறக்கமில்லாமல் விழித்துக் கொண்டு படுத்திருக்கையில் இரவிற்கு எல்லாம் தெரியும் , அது யாரையும் காட்டிக் கொடுப்பதில்லை என்று உணருகிறாள், ஒருவகையில் இரவு அவளுக்கு மீட்சி தருகிறது, அதிகார நெருக்கடிகளில் இருந்து மீட்டு ஆறுதல் அளிக்கிறது

பின்னொரு நாள் ஒட்டோ பிராங்கின் தலைமறைவு வாழ்க்கை கண்டுபிடிக்கபட்டு நாஜி ராணுவம் அவர்களை வதைமுகாமிற்கு இழுத்துக் கொண்டு போனது, ஆனி தனது டயரியை அந்த வீட்டிலே ஒளித்து வைத்துவிட்டு வந்தாள், யூதமுகாமில் அவளது அம்மா இறந்து போனாள், அப்பா வேறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டார், பெர்ஜன் பெல்சன் முகாமில் ஆனியும் அக்காவும் உடல் நலமற்று போனார்கள், அந்த முகாம் ஆஷ்விட்ச் முகாம் போலவே கொடூரமாகவே இருந்தது

ஒட்டோ பிராங்கிற்கு தெரிந்த பெண்ணாகிய மையிப் கைஸ் அவர்கள் ஒளிந்துவாழும் காலத்தில் உடனிருந்தார், கைஸ் ஒரு டச்சுகாரர், ராணுவம் ஒட்டோபிராங்கை பிடித்துக் கொண்டு போன பிறகு கைஸ் தற்செயலாக அந்த ரகசிய அறையினுள் தேடியபோது ஆனியின் டயரி கையில் கிடைத்தது, அதை அவர் போர் முடிந்தபிறகு திரும்பி வந்த ஒட்டோ பிராங்கிடம் ஒப்படைத்தார், அதை வாசித்த ஒட்டோ பிராங்க் தன் மகளின் எழுத்தாற்றலைக் கண்டு நெகிழ்ந்து போய் அந்த நாட்குறிப்பினை வெளியிட்டார், பின்பு 1950ல் ஆங்கிலத்தில் வெளியானது.

ஆனி பிராங்கின் டயரி வெளியாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் மைப் கைஸ், நூறு வயது வரை வாழ்ந்த கைஸ் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 4ம் நாளில் ஆன் குடும்பத்தினருக்காக மௌன விரதம் இருந்து வந்திருக்கிறார்,

ஆனியின் நாட்குறிப்பை வாசிக்கையில் அந்த சிறுமியின் சொற்களில் அவளது ஆறாத மனத்தவிப்பை, வாழ்தலின் ஏக்கத்தை முழுமையாக அறிய முடிகிறது, அந்த உஷ்ணம் வாசிப்பவரைச் சுடுகிறது, மனதை துவளச் செய்கிறது, சொற்களின் வழியே அவள் தன்னிருப்பை நித்யமாக்கிவிட்டு சென்றிருப்பதை உணர முடிகிறது

ஆனி பிராங்கின் டைரிக்குறிப்புகளை உஷாதரன் எளிமையாகவும், சரளமாகவும் மொழியாக்கம் செய்திருக்கிறார், மூல நூலின் உணர்ச்சிகள் தமிழிலும் அதே சாரத்துடன் வந்திருப்பது பாராட்டிற்குரியது, எதிர்வெளியிடு இதைச் சிறப்பாக பதிப்பித்துள்ளது

•••

ஆனி பிராங்கின் டைரிக்குறிப்புகள்

எதிர்வெளியீடு, 96 நியூ ஸ்கீம்ரோடு பொள்ளாச்சி, 642002

தொலைபேசி 9865005084

விலை ரூ 250

0Shares
0