சிங்கப்பூரிலிருந்து

சிறுவர்களுக்காக நான் எழுதிய படிக்கத்தெரிந்த சிங்கம் நூலை வாசித்துவிட்டு 13 வயதான சூரியநிலவன் எழுதியுள்ள கடிதம்.
சிங்கப்பூரில் வசிக்கும் சூரியநிலவனுக்கும் அவனது பெற்றோர்களுக்கும் அன்பும் பாராட்டுகளுக்கும்.
சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு நன்றி.
•••
நான் சூரியநிலவன், 13, சிங்கப்பூர்.
கடந்த வியாழக்கிழமை நான் நூலகத்துக்குச் சென்றிருந்தேன். எப்பொழுதும் என் அப்பா இரவல் பெறும்போது தமிழ்ப்புத்தகத்தையும் இரவல் பெறக் கூறுவார்.நானும் வேண்டாவெறுப்பாக ஒன்றை எடுத்துக்கொண்டு வருவேன். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை.நீங்கள் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர் என்பதால் நூலக புத்தக அலமாரியில் உங்கள் புத்தகம் எதாவது இருக்கிறதா என்று பார்ப்பேன். அவற்றை என் அப்பாவிடம் கூறுவேன். அப்படி தேடிக்கொண்டிருக்கும்போது என் கண்களில் உங்களின் “படிக்கத் தெரியாத சிங்கம்” பட்டது. அதன் தலைப்பே எடுத்து வாசிக்கத் தூண்டியது. வீட்டுக்கு வந்தவுடன் ஒரு மணிநேரத்தில் வாசித்து முடித்துவிட்டேன். உடனே உங்களிடம் பகிர வேண்டும் என்று தோன்றியது. என் அப்பாவிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கேட்டேன். அவரும் என்னுடன் பகிர்ந்தார்.
“செய்திகள் அறிந்துகொள்ளாமல் உலகை அறிந்துகொள்ள முடியாது” என்கிற முதல் பக்க வரியே இந்த புத்தகத்தின் அவசியத்தை உணர்த்தியது. மொழியின் முக்கியத்துவத்தையும் வாசித்ததை பகிர்தலின் உன்னதத்தையும் உணர்ந்தேன். அதுவம் உங்களுக்கு எழுதத் தூண்டியது.
ஒரு புத்தகத்தை வாசிக்கிறோம் என்பதை மறந்து ஒருவர் கதை சொல்லுவது போலவே உணர்ந்தேன். கதை மாந்தர்களாய் மிருகங்கள் இருந்தது என்னை மேலும் சுவரசியப் படுத்தியது.
தாங்கள் இம்மாதிரியான படைப்புகளை மேலும் படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எம்மாதிரியான துவக்கநிலை வாசகனுக்கு இது உந்துதலாக இருக்கும்.
இதற்கு முன் உங்களின் ‘அக்கடா’, ‘சக்ரீட்ஸின் சிவப்பு நூலகம்’ மற்றும் பிக்காஸோவின் கோடுகள்’ வாசித்துள்ளேன். இம்மாதிரியானமற்ற புத்தகங்களை தயவுசெய்து பரிந்துரைக்கவும். இப்புத்தகத்தை எழுதிய உங்களுக்கும் இதை வெளியிட்ட ‘டிஸ்கவரி புத்தகங்களுக்கும்’ நன்றி.
என்றென்றும் அன்புடன்,
சூரியநிலவன்.

0Shares
0